கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்த ஆழி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன என்பது பற்றி எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்துவிட்ட நிலையில் , திரும்பவும் அதை விவரிப்பது தேவையில்லாதது. அதனால், அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டவை பற்றி மட்டும் சில கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

குஷ்பு - திருமாவளன் இடையிலான மோதலால் அங்கு பேசிய வேறு சிலரது பேச்சுகள் கவனிக்கப்படவேயில்லை. தமிழ் எம்.ஏ. படத்தின் இயக்குநர் ராமசுப்புவின் உரை அப்படித்தான் கவனிக்கப்படாமல் போய்விட்டது.

நான் ஒரு அடிமை. நீங்கள் எல்லோரும் அடிமைகள். அடிமைக்கு அடிமை என்ன வணக்கம் வேண்டிக்கிடக்கிறது என்று பேச்சைத் துவங்கிய ராமசுப்பு, புத்தக வெளியீட்டிற்குச் சம்பந்தமில்லாமல் ( அங்கே பேசிய பலரும் அப்படித்தான் பேசினார்கள்) தன் பேச்சைத் தொடர்ந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றிச் சற்று நேரம் உளறியவர் , பிறகு தனக்குப் பிடித்த டாப்பிக்கான கால் சென்டர் கலாச்சாரத்திற்கு வந்தார். அமெரிக்காக்காரரனின் பகல் நம்முடைய பகலாகிவிட்டது. அமெரிக்காகாரனின் இரவு நம்முடைய இரவாகிவிட்டதுஎன்றார். அவர் எங்கேயெல்லாம் தன் உளறலின் உச்சத்தைத் தொட்டாரோ, அங்கேயெல்லாம் கைதட்டல் எழுந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காரணமாக அமெரிக்க நிறுவனங்களின் கால் சென்டர்கள் இங்கே பல்கிப் பெருகிவிட்டன. அதனால் நாம் அடிமைகளாக இருக்கிறோம் - என்பதுதான் அவருடைய பேச்சின் சாரமாக இருந்தது.  தன்னுடைய முதல் படமான தமிழ் எம்.ஏவிலேயே இம்மாதிரி கருத்தை வலியுறுத்தியவர் இவர்.

கால் சென்டர்கள் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றா? பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது  மிகப்பெரிய நிறுவனங்கள் தகவல்தொடர்பு சார்ந்த தங்கள் சேவைகளை தங்கள் நாட்டில் செய்தால் அதிக செலவுபிடிக்கும் என்று இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அளிக்கின்றன. வளரும் நாடுகளில் இருக்கும் அபரிமிதமான ஆள் பலமும் தகவல் தொழில்நுட்பமும் இதற்கு உதவுகிறது. இதில் இரு தரப்பினருமே லாபம் பெருகிறார்கள்.

கால் சென்டர் பணியில் சேர்பவர்கள் யாரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இல்லை. பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட , மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மத்தியதர, கீழ் மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்கள். கல்லூரிப் படிப்பை முடித்தபின் மேற்படிப்பு படிக்க முடியாமலோ, அல்லது மேற்படிப்பை முடித்த பின் நல்ல வேலை கிடைக்கும் வரையிலோ இந்த கால் சென்டர் பணிகளை மேற்கொள்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது. இதை நல்ல ஆடைகள் , வாகனங்கள், பொழுதுபோக்குகளில் செலவழிக்கிறார்கள். மேற்படிப்புக்குப் பணம் சேர்த்த பின்னரோ, நல்ல வேலை கிடைத்தபின்னரோ இந்த கால் சென்டர் வேலையை விட்டுவிடுகிறார்கள்.

இதுதான் ராமசுப்பு போன்றவர்களின் கண்களை உறுத்துகிறது. இந்த இளைஞர்களின் சந்தோஷமும் பண வசதியும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்த கால்சென்டர்கள் இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும் ? தாய் , தந்தையரைக் கஷ்டப்படுத்தி மேல் படிப்பு படிப்பார்கள். வேலை கிடைக்கும் வரை சும்மா இருப்பார்கள் அல்லது 2,000- 3,000 ரூபாய் சம்பளத்தில் எங்கேயாவது வேலை செய்வார்கள். இதைத்தான் இதுமாதிரி நபர்கள் விரும்புகிறார்கள். தான் சினிமாவில் சேர்ந்து படாதபாடுபட்டு ஒரு படம் முடித்த பிறகு கிடைக்கும் வாழ்வு இந்த இளைஞர்களுக்கு வெகு சீக்கிரத்திலேயே கிடைத்துவிடுகிறது என்ற ஆதங்கம் போலிருக்கிறது.

தமிழ் எம்.ஏ. படத்தில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தன் மேலாடையில் சற்று வேடிக்கையான வாசகம் எழுதியிருந்த பெண்ணிடம் நாயகன் மோசமாக நடந்துகொள்வான். தான் செய்ய விரும்புவதைத்தான் நாயகன் மூலம் செய்கிறார் இயக்குனர் என்று தோன்றுகிறது. மும்பையில் புத்தாண்டு தினத்தன்று இரண்டு பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்களுக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

இவருக்கு அடுத்தபடியாக பேசவந்த கனமொழி இதற்கு சரியான வகையில் பதிலடி கொடுத்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொள்வது என்பது இன்னமும் ஒரு வாய்ப்புதான். அதேபோல, கால் சென்டர்களில் வேலை பார்க்க வேண்டும் என யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சிலருக்குக் கிடைப்பதுபோன்ற நல்ல வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றார். ராம் உளறும்போது கையைத் தட்டியவர்கள் இந்தப் பதிலின் போது மூச்சுகூட விடவில்லை.

இதையடுத்து குஷ்பு பேசியது எல்லா மீடியாவிலும் வந்துவிட்டது. அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டிய உரை கவிஞர் அறிவுமதியினுடையது. குஷ்புவுக்கு அடுத்துப் பேச வேண்டியவர் அறிவுமதி இல்லையென்றாலும், குஷ்புவைக் கண்டிப்பதற்காக அடுத்ததாகப் பேச வந்தார் அறிவுமதி. தான் கலந்துகொள்ளும் எல்லாக் கூட்டங்களிலும் பேசுவதைப் போலவே இந்தக் கூட்டத்திலும் தன் பேச்சை ஆரம்பித்தார் அறிவுமதி. இரண்டாயிரம் ஆண்டுகாலமாக மலத்தையும் மூத்திரத்தையும் தூக்கிச் சுமக்கிறான் தமிழன். என் தாத்தனும் அப்பனும் இப்படி ஒடுக்கிவைக்கப்பட்டிருந்தார்கள். அந்தத் தமிழனை விடுவிக்க வந்த திருமவளவன் வந்தால் வணக்கம் சொல்ல மறுக்கிறீர்கள். நக்கல் செய்கிறீர்கள். அதேபோல ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில் Who is He? என்று கேட்டீர்கள். இப்படி ஒரு தமிழனை, தங்கர் பச்சானை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? அவன் யார் எனறு கேட்கிறீர்கள் என்பதுதான் இவரது உரையின் சாரம்.

அறிவுமதி தன் எல்லா உரையையுமே மலம் அள்ளும் மூத்திரம் அள்ளும் தமிழன் என்றுதான் ஆரம்பிப்பார். உண்மையில் மலம் அள்ளும் மக்களுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் ? என்றைக்காவது அவரோ, அவரது இனத்தினரோ அம்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்களா ? வடமாட்டங்களில் ஆதிக்க ஜாதியாக இருக்கும் ஒரு ஜாதியைச் சேர்ந்த அவர் ஏன் இப்படி ஒடுக்கப்பட்டவர் வேடம் போடுகிறார் ? யாரும் அவரைக் கேட்டுவிட முடியாது. கேட்டால் தமிழின விரோதி என்பார்.

இது ஒரு தந்திரம். ஒரே சமயத்தில் ஒடுக்கப்படுபவராகவும் ஒடுக்குபவராகவும் இருக்கும் தந்திரம். ஒடுக்கப்படுபவர் குரல் எழுப்பினால் நான் உங்கள் பக்கம்தான் இருக்கிறேன் என்று சேர்ந்துகொள்வது. அதே நேரத்தில் ஒடுக்குமுறையாளனுக்கான எல்லா வசதிகளையும் அனுபவிப்பது. இதை யாரும் கேள்விகேட்கக்கூடாது. கேட்டால், அவன் தமிழின விரோதி.

தங்கர்பச்சானை யார் அவர் என்று கேட்டால் இவருக்கென்ன கோபம் ? காரணம், ஒரே ஜாதி. தமிழ் நாட்டில் வேறு இயக்குனர்களே இல்லையா ? ஏன் போகிற இடத்திலெல்லாம் தங்கர்பச்சானைத் தூக்கிப்பிடிக்கிறார் இவர். தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்களே அதுதான் இது. உண்மையைச் சொல்லப்போனால், தங்கர்பச்சானைவிட திரையுலகில் குஷ்புதானே சீனியர் ? அவரைவிட பிரபலமானவரும்கூட.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு கிராமத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த ஊர் பெரிய மனிதர் அந்த ஊரைச் சேர்ந்த முக்கியமான தமிழறிஞர் ஒருவரை அழைத்துவந்து, இவர் தமிழ்நாட்டிலேயே மிக முக்கியமான தமிழறிஞர் என்று அவருடைய பெயரைச் சொல்லி அறிமுகம் செய்துவைத்தார். எம்.ஜி.ஆரும் அந்த அறிஞரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அந்த தமிழறிஞர், ஊர் பெரிய மனிதரைப் பார்த்து, நான் யாருன்னு ஐயாகிட்ட சொன்னேள். ஐயா யாருன்னு எனக்கு அறிமுகப்படுத்தவேயில்லையே ?” என்று கேட்டாராம். ஊர் பெரிய மனிதர் திடுக்கிட்டுப் போய், இவரையா தெரியலை என்று கேட்டிருக்கிறார். பிறகு, எம்.ஜி.ஆரே தான் யார் என்பதை அவரிடம் சொல்லி பேச்சைத் தொடர்ந்திருக்கிறார்.

தன்னைத் தெரியாது என்றவுடன் எம்ஜிஆருக்குக் கோபம் வரவில்லை. தங்கர்பச்சானுக்கும் அறிவுமதிக்கும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. தங்கர்பச்சானை யார் அவர் என்று கேட்ட குஷ்பு ரஜினியை அப்படி கேட்பாரா ? நிச்சயமாக மாட்டார். ரஜினி ஒரு முக்கியமான, வெற்றிகரமான நடிகர். தங்கர்பச்சானைக் கேட்கிறார் என்றால் அவர் நிலை திரையுலகில் எந்த இடத்தில் இருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டியதுதான். அதைவிட்டுவிட்டு சம்பந்தமில்லாமல் பொங்கினார் அறிவுமதி.

இறுதியாகப் பேசிய திருமாவளவன், குஷ்புவுக்கும் தனக்கும் இடையிலான பிரச்னையை அத்தோடு முடித்துக்கொள்ளும்படி பேசினார். அதுதான் இந்தக் கூட்டத்திலேயே மிகச் சிறந்த அம்சம்.

குஷ்புவை உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோஅன்றைக்கு அவர் செய்ததை ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ (அன்றைய தினம் திருமாவளவனுக்கு அவர் வணக்கம் சொன்னபோது அவருடைய உடல் மொழி மிக மோசமாக இருந்தது என்பது வருந்தத்தக்கதுதான்)  அவர் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை, திருமாவளவனைப்போல. நடிகைகள் என்றாலே கிள்ளுக்கீரைகள் என்று நினைக்கும் அறிவுமதி போன்ற ஆட்கள் நிறைந்த சமூகத்தில் இப்படித் துணிச்சலாக குரல்கொடுக்க இன்னும் பலர் வேண்டும்.

பிள்ளையார் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட நான், டிஸ்கோ சாந்தி பெயருக்கான காரணம் தேடி பள்ளி முழுவதும் அலைந்தேன். எனக்குப் பதில் சொல்லித் தேற்றுவாரில்லை. முயற்சிகளில் தோல்வியுற்று ஒரு நெட்டிலிங்க மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, லெட்டுப் பிள்ளையே என்னை நோக்கி வந்தான். டிஸ்கோ சாந்தி என்று பெயர் வந்த காரணத்தைக் கண்ணீரோடு கூறலானான்.

பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, விளையாட்டு வகுப்புகளில் மாணவர்கள் யாரும் சட்டை அணிந்து விளையாடக்கூடாது. பனியன் அணிந்துதான் விளையாட வேண்டும் என எமது தலைமை ஆசிரியர் பிரகடனம் செய்தார். இது பள்ளியின் வரலாற்றுப் பதிவேடுகளில் பனியன் பிரகடனம் என்று புகழ்ச்சியோடு குறிப்பிடப்படுகிறது.

திடீரென பனியன் வாங்க வசதியில்லாத காரணத்தால் லெட்டுப் பிள்ளை அடுத்த நாள் விளையாட்டு வகுப்புக்கு தன் தந்தையின் பனியனை அணிந்து வந்தான். லெட்டுப் பிள்ளை மிகக் குட்டையான ஆள் என்பதால் அவன் தந்தையின் பனியன் மிகப் பெரியதாக இருந்தது. கழுத்தை நுழைக்கும் இடம் வயிறுவரை வந்தது. அப்போது அவனுடன் படித்த டிஸ்கோ சாந்தி ரசிகனொருவன், டிஸ்கோ சாந்தியின் ஆடைகளைப் போலவே இவனது பனியனிலும் கழுத்து மிகக் கீழிறங்கி இருப்பதால், இவனுக்கும் டிஸ்கோ சாந்தி என்று பெயர் சூட்டிவிடலாம் என்று சொன்னான். இதைப் பிற மாணவர்களும் மகிழ்ச்சியுடன் அமோதித்தார்கள். இப்படியாக தனக்கு டிஸ்கோ சாந்தி என்ற பெயர் அமைந்தது என்று சொல்லி முடித்தான் லெட்டுப் பிள்ளை.

எனக்கு அந்தப் பெயர்க் காரணம் தெரிந்ததில் பிள்ளையாருக்கு ஏக மகிழ்ச்சி. தன் தலைக்குப் பின்னால் சீரியல் லைட் சுத்த, என்னைப் பார்த்து புன்னகைத்தார் பிள்ளையார்.

velu2.jpg மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சர் ஆர். வேலு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரது பேட்டியிலிருந்து: 

கே: சென்னை சென்டரலில் புறநகர் ரயில்கள் சரியாக வராததை எதிர்த்து மறியல் செய்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறீர்களே.

ப. மக்களுக்காக ரயில்வே என்று நினைத்துவிட்டார்களா? ரயில்வேவுக்காகத்தான் மக்கள். இனியும் மறியல் செய்பவர்களை பா.ம.க. தொண்டர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

கே. தென் மாவட்டங்களுக்கு எப்போதும் ரயில்கள் மிகுந்த நெரிசலுடன் செல்கின்றன. அந்த ரூட்டில் இரட்டை ரயில்பாதை எப்போது போடுவீர்கள்?

ப. திண்டிவனத்திற்கும் நகரிக்கும் இடையில் பணிகள் துவங்கிவிட்டன.

கே. நகரி ஆந்திராவில் இருக்கிறது. திண்டிவனத்திற்கும் நகரிக்கும் இடையில் எதற்கு இரட்டைப் பாதை?

ப. சென்னைக்கும் தென்மாவட்டங்களுக்கும் இடையில் திண்டிவனம் இருப்பதால், எல்லாத் திட்டங்களிலும் திண்டிவனம் பயனடைகிறது என்பது உண்மைதான். ஆனால், திண்டிவனத்திற்கென்று தனியாக ஏதாவது திட்டம் வேண்டாமா? அதனால்தான்.

கே. ஏன் ரயில்வே திட்டங்களில் தென்மாவட்டங்களைப் புறக்கணிக்கிறீர்கள்?

ப. தென் மாவட்டங்களில் வன்னியர்களா இருக்கிறார்கள். வன்னியர்களின் ரயில்வே அன்னியருக்குக் கிடையாது.  

கே. எதிர்க்கட்சிகள் போராட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறாரே?

ப. போராடுவது ஜனநாயக உரிமை. அதை யாரும் பறிக்க முடியாது.

கே. ரயில்வேவின் அநியாயங்களை எதிர்த்துப் போரிடுவதும் ஜனநாயக உரிமைதானே?

ப. யார்றா.. இவண்? கேணத்தனமா கேட்டுக்கிட்டு… ரயில்வேவை எதிர்த்தா ஜெயில்தான். ஆனா, தமிழக அரசோட எல்லாத் திட்டங்களையும் நாங்க எதிர்ப்போம்.

கே. சென்னைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில் இரட்டை ரயில்பாதை போட்டால், ரயில்களில் கூட்டம் குறையுமே?

ப. வந்துட்டார்யா ரயில்வே அமைச்சர் சொல்றதுக்கு. எங்களுக்குத் தெரியாதா?

கே. புதிதாக ஏதாவது ரயில்வே திட்டங்கள் இருக்கிறதா?

ப. ஏன் எங்கிட்ட கேக்குற? இதுக்கு முன்னாடி கேள்வி கேட்டானே அவங்கிட்ட கேளு.. டேய் எந்திரிங்கடா… பத்திரிகையாளர் கூட்டமெல்லாம் முடிஞ்சுபோச்சு.. போங்க.. போங்க…

பரத கண்டம் என்ற இந்த ஜம்புத் தீபத்திலே முன்பொரு காலத்திலே அதாவது இன்றைக்கு ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. மதுரையின் வடபகுதியில் வைகை நதிக்கு அருகில் சேதுபதி மேல் நிலைப் பள்ளி என்றொரு பள்ளி இருக்கிறது. அங்கே ராமச்சந்திரன் என்றொரு மாணாக்கன் ஆறாம் வகுப்பு பயின்று வந்தான். ஆனால், அவனை யாரும் ராமச்சந்திரன் என்று அழைத்து யாம் கண்டதில்லை. எல்லோரும் லெட்டுப் பிள்ளை என்றே அன்புடன் அழைத்து வந்தனர். அதன் காரணம் யாது என்று பல்வேறு தரப்பினரிடமும் வினவியபோது, அதன் காரணம் யாருக்கும் தெரியவில்லை. கடைசியில் அங்கிருந்த பிள்ளையாரையே கேட்டேன். அவர் அந்தக் கதையை எனக்குக் கூறலாகினார்.

கதை வருமாறு: ராமச்சந்திரன் நீண்ட காலமாக ரீஃபிள் பேனாவை பயன்படுத்திவந்தான். வகுப்பில் பெரிதாக அவன் ஏதும் எழுதுவதில்லை என்பதால், அந்தப் பேனாவின் ரீஃபிளில் மை தீரவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரையாண்டுகள் இப்படியே கழிந்தன. ரீஃபிளைத் தவிர பேனாவின் பிற பாகங்கள் எல்லாம் உடைந்து சிதறிவிட்டன. வெறும் ரீஃபிளைப் பிடித்தே எழுதிவந்தான் ராமச்சந்திரன். காலம் இப்படிக் கழிகையில் அந்த கெட்ட நாளும் வந்தது. ஆம். ரீஃபிள் தீர்ந்துவிட்டது. ராமச்சந்திரனால் துக்கத்தை அடக்க முடியவில்லை. கோவென்று கதறியழலானான். பள்ளி மாணாக்கர்கள் அந்த நாட்களில் ரீஃபிளை லெட்டு என்று அழைத்து வந்தனர். அக்காரணத்தால் என் லெட்டுப் பிள்ளை போச்சே என்று குமுறிக்குமுறி அழுதான் ராமச்சந்திரன். இதைக் கண்ணுற்ற பலரும் துணுக்குற்றனர். ஒரு லெட்டு தீர்ந்தததற்கா இவ்வளவு அழுகை என்று ஆச்சரியத்துடன் வினவினர். அப்போது ராமச்சந்திரன் சொல்லானான்: அது வெறும் லெட்டு அல்ல. என் பிள்ளையைப் போல அல்லவா வைத்திருந்தேன். அது இன்று தீர்ந்துவிட்டதே.. அய்யகோ.. நான் என் செய்வேன்… என்று கேட்போர் மனம் கலங்கும் வண்ணம் மீண்டும் கதறலானான். ஆகையால் அங்கு கூடியிருந்த எல்லோரும் சேர்ந்து அவனுக்கு தேறுதல் சொல்லி, அந்த லெட்டை நல்லடக்கம் செய்யும் யோசனையைக் கூறினர். ராமச்சந்திரனும் அவ்வாறே அரசமரத்தடியில் ஒரு குழியைத் தோண்டி லெட்டைப் புதைத்தான். மேலே மண்ணால் ஆன ஒரு சமாதியையும் எழுப்பினான். லெட்டை பிள்ளை என்று கருதி, உயிர் வளர்த்ததனால் அன்றைய தினத்திலிருந்து அவன் பெயர் லெட்டுப் பிள்ளை என்று வழங்கலாயிற்று.

இந்தக் கதையைச் சொல்லி முடித்த பிள்ளையார், லெட்டுப் பிள்ளைக்கு டிஸ்கோ சாந்தி என்றொரு பெயரும் வழக்கில் உண்டு. அது ஏன் என்று கண்டறியாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் என்று கூறிவிட்டு சயனத்தில் ஆழ்ந்தார்.

அந்தக் கதை…..

perkins_lecture_018.jpgஜான் பெர்கின்ஸ் என்பவர் ஆங்கிலத்தில் Confessions of an Economic Hit man என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

அந்த நூல் இப்போது தமிழில் ஓரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. கோவையிலிருக்கும் விடியல் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க அரசு, பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் (உலக வங்கி, சர்வதேச நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி) ஆகிய மூன்றும் எப்படி கூட்டுக்களவாணிகளாகச் செயல்படுகின்றன என்பதுதான் புத்தகத்தின் சாரம்.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் வளத்தையும் பொருளாதாரத்தையும் சுரண்ட இந்த மூன்றும் எப்படி இணைந்து செயல்படுகின்றன என்பதை விலாவாரியாக விவரிக்கிறார் ஜான் பெர்க்கின்ஸ். இவரும் ஒரு பன்னாட்டு நிதியுதவி நிறுவனத்தில் பணியாற்றியவர்.

சதிகாரர் சங்கத்தின் உள்ளிருந்தவர் என்பதால் இந்தப் புத்தகத்தில் இருக்கும் எல்லா தகவல்களும் நம்பகத் தன்மை வாய்ந்தவை. இவர் இந்த நூலை எழுதப் போகிறார் என்றவுடனேயே கொலை மிரட்டல்கள் வந்தன. ஏகப்பட்ட பணம் தருவதாக ஆசை காட்டப்பட்டது. இதையெல்லாம் செய்தது சிஐஏ. அந்த வகையில் சிஐஏவே பார்த்து மிரண்ட புத்தகம் இது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. புதிதாக இம்மாதிரி டாபிக்களை படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு தங்கச் சுரங்கம். பொருளாதாரப் புலிகளுக்கு மனசாட்சி இருந்தால் இந்தப் புத்தகம் அவர்கள் கண்களைத் திறக்கும். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேஷியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருப்பவர்கள் கட்டாயம் படித்தாக வேண்டிய புத்தகம்.

frnr2.jpgஇந்த வார துக்ளக் இதழில் சீனியர் சிட்டிசன் என்பவர் எழுதும் துணுக்குத் தொகுப்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐ.மு.கூ சார்பில் போட்டியிடும் பிரதீபா படேலைப் பற்றி ஒரு துணுக்கு வந்திருக்கிறது. அவர் ஆவியுடன் பேசுவதாக சொல்லியதையடுத்து ஆவி அமுதா என்று பெயர் சூட்டியிருக்கிறார் சீனியர் சிட்டிசன். இந்த சீனியர் சிட்டிசன் ஒரு எழுத்தாளர். பல்வேறு புனைப்பெயர்களில் துக்ளக்கில் பழம் கருத்துக்களை அள்ளிவிடுவது இவரது நீண்ட காலத் தொழில். இந்த ஆவிகளோடு பேசும் சமாச்சாரமும் இவருக்கு உகந்ததுதான். ஆனால், காங்கிரசைத் திட்ட ஒரு வாய்ப்புக்கிடைத்தது என்று அம்மையாரைத் திட்டித் தீர்த்திருக்கிறார் சீனியர்.

உண்மையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆவிகளின் பெயரைச் சொல்லி பெரும் அட்டூழியம் புரிந்தது நம்முடைய முதல் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திரப் பிரசாத்தான். பிரதீபா பாடீல் ஆவி அமுதா என்றால், ராஜேந்திர பிரசாதை பேய்க் கதை மன்னன் பி.டி. சாமியுடன்தான் ஒப்பிட வேண்டும். ஆவியுடன் பேசுபவர்களை அழைத்து வந்து நேரம் காலம் தெரியாமல் தொடர்ந்து ஆவியுடன் பேசிவந்தவர் இவர்தான். அதேபோல, இவர் காலத்தில்தான் ஜாதகம் பார்க்கிறேன், குறி சொல்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட போக்கிரிகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் சுற்றித் திரிந்தார்கள். ராஜேந்திரப் பிரசாதின் மனைவி ரொம்பவும் ஆச்சாரமானவர். அவருக்குக் காலையில் தினமும் அன்றைக்குக் கறக்கப்பட்ட பசுவின் பால் வேண்டும். அதற்காக குடியரசுத் தலைவர் மாளிகைக்குள்ளேயே பசுக்கள் வளர்க்கப்பட்டன. இந்தியாவின் முன்னாள் வைசிராய்கள் பயன்படுத்திய கழிப்பறைகளில் இந்தப் பசுக்கள் கட்டப்பட்டன. இவ்வளவு அட்டூழியமும் ஆச்சாரம், மத நம்பிக்கையின் பெயரால் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்தேறின. சீனியர் சிட்டிசன்கள், ஆதிகள், துர்வாசர்களுக்கு இதெல்லாம் பக்காவாக மறந்துபோய்விடும். ஏனென்றால் முதல் குடியரசுத் தலைவர் ஒரு இந்து வெறியர். ராஜேந்திர பிரசாதைப் பற்றிய இந்த விமர்சனங்கள் எல்லாம் ஏதோ வாய்க்கு வந்தபடி சொல்லப்படுபவை அல்ல. The Relevance of Bhagavath Geetha in Indian History உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நூல்களில் இடம்பெற்றவைதான்.

பி.கு. : அதற்காக ஆவி அமுதா அடுத்த குடியரசுத் தலைவர் ஆவதை வடக்கு மாசி வீதி ஆதரிக்கவில்லை. அவர் மீது வந்து குவியும் ஊழல் புகார்களை வைத்துப் பார்த்தால், அடுத்த குடியரசுத் தலைவர் குடியேற அந்த மாளிகையையாவது மிச்சம் வைப்பாரா என்று பயமாக இருக்கிறது.  இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இன்னொரு காமெடி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாடீலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. காரணம் இவர் புட்டபர்த்தி சாயிபாபாவின் பக்தர் என்பதால்  இவரை ஏற்றுக்கொள்ள இடதுசாரிக் கட்சிகள் மறுத்துவிட்டதுதான்.  பாவம் சிவராஜ் பாடீல், சாயிபாபாவை நம்பினால் எல்லாம் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.  பாபாவை நம்பியதாலேயே வாய்ப்புப் பறிபோய்விட்டது.  இதற்குப் பிறகும் சிவராஜ் திருந்துவார் என்று நினைக்கிறார்களா? ம்ஹும்,  அங்கே போய் பாபா லிங்கம் எடுப்பதையும் சங்கிலி எடுப்பதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத்தான் வருவார்.  யாரு பெத்த புள்ளையோ, என்ன சீக்கோ?

mp_tiger.jpg mp_tiger.jpg

திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம் பற்றி சமீப காலமாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மத்திய அரசு அந்த வனப் பகுதியை புலிகள் வசிக்கும் வனப்பகுதியாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. ஆனால், அங்கே புலிகள் ஏதும் இல்லை சமீபத்தில் அங்கு சென்ற வனவிலங்கு நிபுணர்கள் சொல்லிவிட்டுப் போய்விட, செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது வனத்துறை. அந்த வனப் பகுதிக்கு நேரில் சென்று பார்த்துவிடலாம் என்று நானும் என் நண்பனும் கிளம்பினோம். திருநெல்வேலியில் இறங்கி அங்கிருக்கும் ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் வழி கேட்டோம். அவர், இங்க தாங்க பக்கத்தில, ஒரு பத்து கி.மீ. இருக்கும். ஒரு பஸ்ஸப் பிடிச்சு களக்காட்டில இறங்கி அங்கேயிருந்து காட்டுக்கு ஒரு ஆட்டோ பிடிச்சுப் போங்க என்றார். அட, திருநெல்வேலி நகரத்திலிருந்து இவ்வளவு அருகில் புலிகள் வசிக்கும் வனப்பகுதியா என்ற ஆச்சரியத்துடன் களக்காடு பேருந்தில் ஏறி அமர்ந்தோம்.  நடத்துனர் 14 ரூபாயை பயணக்கட்டணமாக வசூலித்தார். பத்து கி.மீ. தூரத்திற்கு நிச்சயமாக பதினான்கு ரூபாய் வசூலிக்க மாட்டார்களே, ஒரு நெடும் பயணம் காத்திருக்கிறது என்ற திகில் ஏற்பட்டது.

பேருந்து சேரன் மாதேவி, பத்தமடை வழியாக சுமார் 40 கி.மீ. தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடந்து களக்காடு புதிய பேரூந்து நிலையத்தில் நின்றது. அங்கே இருக்கும் கடைகளில், இங்கிருந்து முண்டந்துறை சரணாலயத்திற்கு எப்படிச் செல்வதென்று கேட்டேன். எல்லோரும் ஒரே மாதிரியாக, அப்படி ஒரு இடமே சுற்றுவட்டாரத்தில் இல்லை என்று கையை விரித்தார்கள். ஒரு அரைமணி நேரம் இப்படி பரிதாபமாகக் கழிந்தது.  

பிறகு ஒரு ஆட்டோ டிரைவர், அருகில் முண்டந்துறை என்று ஏதும் கிடையாது. களக்காடு வனப்பகுதி வேண்டுமானால் இருக்கிறது. இறக்கிவிடுகிறேன். நாற்பது ரூபாய் கொடுங்கள் என்று சொன்னார். வந்ததற்கு அதையாவது பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். மூன்று கி.மீ. சென்ற பிறகு, வனத்தை நெருங்கியது ஆட்டோ. வனத்துறை அலுவலகம் ஒன்றும் கண்ணில் பட்டது. வாசலில் இருந்த பலகையில், களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம் என்றிருந்தது. அட இதுதான் முண்டந்துறையா என்று ஆட்டோக்காரர் ஆச்சரியப்பட்டுக் கொண்டார். வனத்திற்குள் செல்ல வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்றுவரும்படி சொன்னார்.  

உள்ளே சென்று, அங்கிருந்த அதிகாரியிடம் புலிகள் காப்பகத்தைப் பார்க்க அனுமதி வேண்டுமெனக் கேட்டேன். அவர் கிளிஞ்சல்கள் படத்தில் வரும் கோபாலகிருஷ்ணண் போல கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். தம்பி, இது புலிகள் காப்பகம்தான். ஆனால் புலியெல்லாம் பார்க்க முடியாது. புலி இருக்கு. இல்லைனு சொல்லல. கடவுள் இருக்கார்னு சொல்றோம்ல, அது மாதிரிதான். யாராவது கடவுளைப் பார்த்திருக்கமா? ஆனா, அவர் இருக்கார்னு நம்புறோம்ல, அது மாதிரிதான். நாங்களும் இங்கே புலி இருக்குன்னு நம்புறோம். இந்த மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கே, அது கன்னியாகுமரில ஆரம்பிச்சு, பூனே வரைக்கும் சுமார் பத்து மாநிலங்கள்ள பரந்து விரிஞ்சு கிடக்கு. இதுல எங்கேயாவது புலி இல்லாமையா போகும். அது சரி, எங்கேயிருந்து வர்றீங்க?” என்றார். மதுரை வடக்கு மாசி வீதியிலிருந்து வருகிறோம் என்றேன்.

 நான் இங்கே பதினஞ்சு வருசமா வேலை பார்க்கிறேன். நானே புலியைப் பார்த்ததில்ல. மதுரையிலயிருந்து வந்த உடனே புலியப் பார்த்துறனுமா? அந்தா, அங்க பாருங்க, ஒரு புலி படம் இருக்குல்ல, அத வேனாப் பார்த்துக்கங்க. இந்தப் பத்திரிகைகாரங்க அசிங்கப்படுத்துறது பத்தாதுன்னு நீங்க வேற என்றார் அந்த அதிகாரி.  இந்தக் காட்டில் புலிகள் இல்லை என்ற ரகசியம் எப்படி வெளியில் வந்ததெனக் கேட்டேன். அதாவது திடீர்னு மூணு நாலு விஞ்ஞானி கிளம்பி, புலி இருக்கான்னு பாக்க வந்துட்டான். உள்ள விடமாட்டேன்னு சொல்ல முடியுமா? உள்ள போனவன் நாலு நால் காத்து கிடந்து, ஆராய்ச்சி பண்ணி புலி இல்லைனு சொல்லிப்புட்டான். அவன் படிச்சவன். அவனை ஏமாத்த முடியுமா? இப்படித்தான் விசயம் வெளில வந்துச்சு. நாங்க பண்றதும் தப்புதான். வருசா வருசம் புலி எண்ணிக்கை கூடிக்கிட்டிருக்குன்னு பொய்க் கணக்குக் காமிச்சுக்கிட்டிருக்கோம். போன வருசத்தைவிட இந்த வருசம் இரண்டு புலி கூடிருக்குன்னு எழதியனுப்புவோம். குறைஞ்சிருச்சுன்னு எழுதுனா, புடுச்சு தின்னியான்னு கேப்பான். இங்க காப்பித் தண்ணிக்கே வழியில்ல, நாமலா புலியப் புடிச்சுத் திண்ணப்போறோம்? சரின்னு இத்தனை வருசம் பொய்க் கணக்குக் காமிச்சது இப்ப மாட்டிக்கிட்டோம். படிக்காதவுக யாரும் இங்க வர்றதில்ல. ஒங்கள மாதிரி படிச்ச புள்ளகதான் வந்து ஏமாந்து போதுக பாவம். சரி, வந்தது வந்துட்டீங்க, இங்கனக்குள்ள தலையணையாறுன்னு ஒரு ஆறு ஓடுது, அதையாவது பாத்துட்டுப் போங்க என்று அனுமதி கொடுத்தார்.  

அடர்ந்த வனத்தின் நடுவில் ஓடும் மிக அற்புதமான சிற்றாறு அது. அதில் காலை நனைத்து அனுபவித்துக் கொண்டிருந்தபோது, வனத்துறை ஊழியர் ஒருவர் வந்து பேச்சுக் கொடுத்தார். நேத்து வந்திருக்கலாமே, இரண்டு புலி இங்க திருஞ்சுச்சு. நான்தான் விரட்டி விட்டேன் என்று புருடா விட்டார். திரும்பவும் ஆட்டோவில் வந்து களக்காட்டில் இறங்கினோம். ஆட்டோக்காரர் 150 ரூபாய் கேட்டார். கொடுத்துவிட்டு, திருநெல்வேலிக்கு வண்டியைப் பிடித்தோம்.  

 

trisha1.jpgஅஜீத்தும் த்ரிஷாவும் நாயகன் - நாயகியாக நடித்த ஜி என்ற படத்தில் “டிங்டாங் கோவில் மணி” என்றொரு பாடல் இருக்கிறது.  தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்த பாடல்களில் மிகச் சிறப்பான பாடல் இது என்றே தோன்றுகிறது. பாடல் வரிகள், இசை, அந்தப் பாடல் எடுக்கப்பட்ட இடம், அதில் வரும் பெண்களின் உடை, காட்சிகள், ஒளியமைப்பு, எடிட்டிங் எல்லாமே ஒரு ஒத்திசைவுடன் அமைந்திருக்கின்றன.  இருளையும் ஒளியையும் ஒளிப்பதிவாளர் இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கும் விதம் அசர வைக்கிறது. அதேபோல நீண்ட ஷாட் எதுவுமே பாடலில் கிடையாது. எல்லாம் ஒன்றிரண்டு வினாடிகளுக்குள் முடியக்கூடிய ஷாட்கள். இந்தக் காட்சிகளை அடுக்கியிருக்கும் விதம்தான் பாடலின் உச்சகட்ட உழைப்பு. அதிகம் கவனிக்கப்படாத இந்தப் பாடலை, ஒரு காவியப் பாடல் என்றே சொல்லலாம்.  அந்தப் பாடலை யாரோ புண்ணியவான் தன் வலைபதிவில் போட்டிருக்கிறார். அதன் யுஆர்எல் இதோ: http://tamilvcdsongs.blogspot.com/search/label/Ji  பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

பின்குறிப்பு: சொல்லாத காதல் சொல்ல சொல்லாகி வந்தேன் என்ற இந்தப் பாடலில் வரும் ஒரு வரியையே இந்தப் பதிவிற்கு தலைப்பாக வைக்கலாம் என முதலில் நினைத்திருந்தேன். ஆனால், த்ரிஷாவின் பெயர் தலைப்பில் வந்தால் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என அராய்ச்சி முடிவுகள் காட்டுவதால், காவிய நாயகி த்ரிஷா என்றே பெயர் சூட்டிவிட்டேன்.

பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளிவந்திருக்கிறது சிவாஜி. கடந்த இரண்டு வாரங்களாக ஊடகம் முழுவதையும் சிவாஜி என்ற ஒற்றை வார்த்தை ஆக்கிரமித்திருந்தது. ரசிகர்கள் இரவெல்லாம் விழித்துக் கிடந்து முன்பதிவு செய்தார்கள். ஆனால், படத்தைப் பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.
அமெரிக்காவில் கம்ப்யூட்டர் பொறியியலாளராக இருந்து ரூ. 250 கோடி பணத்துடன் இந்தியாவுக்கு வருகிறார் சிவாஜி (ரஜினி). அவருக்கு மாமா கம் தோழன் விவேக். இந்தப் பணத்தை வைத்து பெரிய கல்வி நிலையங்களையும் மருத்துவமனையையும் கட்டி ஏழைகளுக்கு உதவ நினைக்கிறார் சிவாஜி. ஆனால், அதே ஊரில் இம்மாதிரி கல்வி நிலையங்களின் மூலம் பெரும் பணம் சம்பாதிக்கும் ஆதிசேஷன் (சுமன்) இதை விரும்பவில்லை. திட்டத்தைக் கைவிடும்படி சிவாஜியை வற்புறுத்துகிறார்.
பல தடைகளைத் தாண்டி சிவாஜியின் திட்டம் வளர்கிறது. இதற்கிடையில் ஆதிசேஷனின் முயற்சியால், அரசு சிவாஜியின் கட்டிடத்தை இடிக்க வருகிறது. இடத்தைக் கையகப்படுத்துகிறது. நீதிமன்றமும் கைவிடுகிறது. சிவாஜியின் எல்லாச் சொத்துகளும் பறிபோகின்றன. சிவாஜியின் கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து, பிச்சை எடுத்துப் பிழைத்துக்கொள்ளும்படி சொல்கிறானர் ஆதிசேஷன். அந்த ஒரு ரூபாயை வைத்து ஆதிசேஷனுக்கு போன் செய்து, அவன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு வருவதாகச் சொல்லி, அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றுகிறார் சிவாஜி. அதை வைத்து மிரட்டி, ஆதிசேஷனிடமிருந்து 100 கோடியைக் கறக்கிறார் சிவாஜி. அதேபோல, தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கருப்புப் பண முதலைகளிடமிருந்து இதே பாணியில் பணம் கறந்து ஏழைகளுக்காக மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளை கட்டுகிறார் சிவாஜி. சட்டவிரோதமாக கறுப்புப் பண முதலைகளிடமிருந்து பணத்தைப் பறித்ததற்காக கைது செய்யப்படுகிறார். காவலில் இருக்கும்போதே அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. தான் இறந்ததாக வில்லன்களை நம்பவைத்துவிட்டு, மொட்டை ரஜினியாக வந்து எல்லோரையும் துவம்சம் செய்கிறார் சிவாஜி. இந்த மாதிரி கதையையெல்லாம் உலகம் முழுக்க தூக்கியெறிந்துவிட்டார்கள். இந்த குப்பைக் கதையை வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டியிருக்கிறார் ஷங்கர். ஷங்கரைப் பொறுத்தவரை இந்தியாவில் இருக்கும் பிரச்னைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். பஸ்ஸில் கண்டெக்டர் திட்டுவது, சாலையில் எச்சில் துப்புவது, கல்லூரிகளில் நன்கொடை வாங்குவது, மருத்துவமனைகளில் பணம் வாங்குவது, தாசில்தார் லஞ்சம் வாங்குவது ஆகியவைதான். இவற்றையெல்லாம் ஒழித்துவிட்டால் நாடே சுபிட்சமாகிவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு.இந்தப் படமும் இந்த எளிய நம்பிக்கையின் அடிப்படையில்தான் இயங்குகிறது. கறுப்புப் பணத்தையெல்லாம் திரட்டி ஏழைகளுக்கு நன்மை செய்கிறாராம் நாயகன். கறுப்புப் பணம் கட்டாதவர்களில் பட்டியலை எடுத்துப் பார்த்தால், சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் கணிசமாக இருக்கும். இதுநாள் வரை ஏவிஎம் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரித்தால், அதை எவ்வளவு செலவில் தயாரித்தோம், எவ்வளவுக்கு விற்றோம், எவ்வளவு லாபம் என்பதை வெளிப்படையாக அறிவித்து வந்தது. முதல் முறையாக சிவாஜி படத்திற்காக அந்த பழக்கத்தைக் கைவிட்டிருக்கிருக்கிறது ஏவிஎம். காரணம் யார்? இந்த கறுப்புப் பண எதிர்ப்புப் போராளிதானே?

இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். பணம் கொடுத்து படம் பார்க்க வருபவர்களை, மனமுதிர்ச்சியில்லாதவர்களாக இந்தக் கும்பல் நினைப்பதுதான் சிக்கல். எல்லாக் காட்சிகளிலும் அமெச்சூர்தனம். ரஜினி இருக்கிறார், சுஜாதா வசனம், ஏ.ஆர். ரஹ்மான் இசை - இது போக இந்த அடிமைகளுக்கு (நாம்தான்) என்ன வேண்டும் என்ற எகத்தாளமே படம் முழுக்க தென்படுகிறது.ஒரு காட்சியில், இந்தியாவிலிருக்கும் பணத்தை அமெரிக்காவுக்கு ஹவாலா மூலம் அனுப்ப வேண்டி வருகிறது. அதற்காக முஸ்லிம்களிடம் செல்கிறார்கள் நாயகனும் மாமாவும் (விவேக்). அதாவது முஸ்லிம்கள்தான் ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபடுவார்களாம். அதேபோல, கறுப்பாக இருக்கும் தன் மகள்களைப் பற்றி ஒரு தந்தையே கிண்டலடிக்கிறார். அவர்கள் கறுப்பாக இருப்பதால், அவர்கள் தங்களுக்கு திருமணமாக வேண்டும் என்பதற்காக, நாயகனை சுற்றிச்சுற்றி வருகிறார்கள். நிறவெறி இரத்தத்திலேயே ஊறிப்போயிருக்கிறது.நீங்கள் ரஜினி ரசிகராக இருந்தால் ஷங்கரை மன்னிக்க மாட்டீர்கள். நீங்கள் நல்ல சினிமா ரசிகராக இருந்தால், இந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட யாரையும் மன்னிக்க மாட்டீர்கள்.

தாய்வீடு படத்தில் ரஜினிகாந்திற்கு ஒரு நாய் ரொம்பவுமே உதவி செய்யும். பல சாகசங்களில் ஈடுபடும். இதைப் பார்த்த வடக்குமாசி வீதி பழுக்குகளாகிய நாங்கள் ஒரு நாய் வளர்க்க முடிவெடுத்தோம். அதற்காக ஒரு குட்டி நாயைத் தேடி தெருத்தெருவாக சுற்றினோம். கடைசியில் ஓரிடத்தில் பிறந்து ஒன்றிரண்டு வாரங்களேயான ஒரு நாய் கண்ணில் பட்டது. அப்போது அந்தக் குட்டி தூங்கிக்கொண்டிருந்தது. அப்போதாவது எங்களுக்கு அதன் தன்மை புரிந்திருக்க வேண்டும். புரியவில்லை. தூக்கிக்கொண்டு மாசி வீதிக்கு வந்துவிட்டோம்.

உடனடியாக நாய் வளர்க்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. செல்வம் அந்தக் குழுவின் தலைவன். நான் பொதுச்செயலாளர். இதன் அர்த்தம் என்னவென்றால் நாய்க்காக நாங்கள் ஏதும் செலவு செய்யமாட்டோம் என்பதுதான். நாய்க்கு பயிற்சியளித்து, அதை பெரிய ஆளாக்குவது மட்டுமே எங்கள் பொறுப்பு. பிற செலவுகளையெல்லாம் மற்றவர்கள்தான் பார்த்துகொள்ளவேண்டும். பாலைப் பற்றிப் பிரச்னையில்லை. அங்கே நிற்கும் ஏதாவது ஒரு மாட்டைப் பிடித்து கறந்துவிடுவோம். நாய்க்கான கழுத்துப் பட்டை, சங்கிலி போன்றவற்றை வாங்கும் செலவை பிறர் தலையில் கட்டினோம்.

கழுத்துப் பட்டை, சங்கிலி, சைக்கிள் டயர், ஸ்கூட்டர் டயர் போன்ற சாதனங்கள் வாங்கப்பட்டன. ஒரு பழுக்கு நாய்க்கு எந்நேரம் பார்த்தாலும் பாலைக் கறந்து ஊற்றிக்கொண்டே இருந்தான். இன்னொருவன் தொடர்ந்து பிஸ்கட், சாப்பாடு போன்றவற்றை போட்டுக் கொண்டிருந்தான்.

நாய்க்கு பெயர் வைக்கும் பிரச்னை எழுந்தது. டைகர், ராம்போ போன்ற புதுயுகப் பெயர்களும் மணி, ராமு போன்ற பாரம்பரியப் பெயர்களும் யோசிக்கப்பட்டன. கடைசியில் ராம்போ என்ற பெயரே சூட்டப்பட்டது (அந்த சமயத்தில் ராம்போ வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது).ராம்போவுக்கான பயிற்சிகள் துவங்கின. முதலில் ஓட்டப்பயிற்சி. இத்தனை நாட்களாக பாலையும் பிஸ்கட்டையும் தின்று தின்று கொழுத்துப் போயிருந்த ராம்போ நடக்கவே சிரமப்பட்டது. இரண்டடி நடக்கும். பிறகு மெதுவாக நிற்கும். அப்படியே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அப்படியே தூங்கிவிடும். செல்வம் இதைப் பார்த்து ரொம்பவுமே நொந்துபோனான். ராம்போ தூங்குவதைப் பார்த்தாலே விளக்கமாற்றுக் குச்சியால் அதனைப் பின்னியெடுத்துவிடுவான். அடிவாங்கிக்கொண்டு கொஞ்ச தூரம் ஓடும். பிறகு வழக்கம்போல நிற்பது, உட்கார்வது, தூங்குவது என்ற பழைய கதைதான்.

சர்க்கஸில் வருவதுபோல, ராம்போவை ஒடிவரச் செய்து உயரத்தில் சைக்கிள் டயரைத் தொங்கவிட்டு, அதன் நடுவே ராம்போவைத் தாவச் செய்வதற்காகதான் சைக்கிள் டயர், ஸ்கூட்டர் டயர் ஆகியவை வாங்கப்பட்டன. ஆனால், ஒரு முறைகூட ராம்போ சைக்கிள் டயர் நடுவில் தாவிச்செல்ல முயற்சிக்கவில்லை. கீழே வழியிருக்கும்போது, மேலே எதற்குத் தாவச் சொல்கிறார்கள் என்பதுபோல செல்வத்தை கேவலமாக ஒரு பார்வை பார்க்கும். பிறகு சாவகாசமாக சைக்கிள் டயருக்குக் கீழே நடந்து சென்றுவிடும். சைக்கிள் டயருக்கு அடுத்ததாக, அதற்குச் சற்று சின்ன சைசில் இருக்கும் ஸ்கூட்டர் டயர் கட்டப்பட்டிருக்கும். சைக்கிள் டயரையே தாண்டாத ராம்போ, ஸ்கூட்டர் டயரை நிமிர்ந்துகூட பார்க்காது.தினமும் அதற்கு பால் ஊத்திக் கொண்டிருந்த ஒரு பழுக்கு சொன்னான், ஏண்டா, இந்த சைக்கிள் டயரையே தாண்டாத இந்த நாயாடா நாம ஆபத்தில இருக்கும்போது வந்து காப்பாத்தப்போது…. செல்வத்திற்கு ஏகப்பட்ட ஆத்திரம். விளக்குமாறு குச்சியால் வெளுத்துவிட்டான் ராம்போவை. அப்போது அந்தப் பக்கம் சென்ற, மாசி வீதி பெண்மணி, ஒரு பொட்டை நாயைப் போட்டு இந்தப் பாடு படுத்துறாய்ங்களே என்றார். எங்களுக்குத் திகீர் என்று ஆனது. ஓரு பெட்டை நாய்க்கா ராம்போ என்று பெயர் வைத்தோம் என்று கூசிப் போனோம். செல்வம் மௌனமாக அதன் கழுத்துப் பட்டையையும் சங்கிலியையும் கழற்றினான். பிறகு எங்கோ போய் விட்டுவிட்டுவந்தான். சில நாட்களில் மீண்டும் வடக்குமாசி வீதியில் ராம்போ தென்பட்டது. ஆனால், பழுக்குகள் கண்டுகொள்ளவில்லை.

Next Page »