ஜனவரி 14, 2008
குஷ்பு - திருமாவளன் இடையிலான மோதலால் அங்கு பேசிய வேறு சிலரது பேச்சுகள் கவனிக்கப்படவேயில்லை. தமிழ் எம்.ஏ. படத்தின் இயக்குநர் ராமசுப்புவின் உரை அப்படித்தான் கவனிக்கப்படாமல் போய்விட்டது.
“ நான் ஒரு அடிமை. நீங்கள் எல்லோரும் அடிமைகள். அடிமைக்கு அடிமை என்ன வணக்கம் வேண்டிக்கிடக்கிறது“ என்று பேச்சைத் துவங்கிய ராமசுப்பு, புத்தக வெளியீட்டிற்குச் சம்பந்தமில்லாமல் ( அங்கே பேசிய பலரும் அப்படித்தான் பேசினார்கள்) தன் பேச்சைத் தொடர்ந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றிச் சற்று நேரம் உளறியவர் , பிறகு தனக்குப் பிடித்த டாப்பிக்கான கால் சென்டர் கலாச்சாரத்திற்கு வந்தார். “ அமெரிக்காக்காரரனின் பகல் நம்முடைய பகலாகிவிட்டது. அமெரிக்காகாரனின் இரவு நம்முடைய இரவாகிவிட்டது” என்றார். அவர் எங்கேயெல்லாம் தன் உளறலின் உச்சத்தைத் தொட்டாரோ, அங்கேயெல்லாம் கைதட்டல் எழுந்தது.
“ அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காரணமாக அமெரிக்க நிறுவனங்களின் கால் சென்டர்கள் இங்கே பல்கிப் பெருகிவிட்டன. அதனால் நாம் அடிமைகளாக இருக்கிறோம் “ - என்பதுதான் அவருடைய பேச்சின் சாரமாக இருந்தது. தன்னுடைய முதல் படமான தமிழ் எம்.ஏவிலேயே இம்மாதிரி கருத்தை வலியுறுத்தியவர் இவர்.
கால் சென்டர்கள் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றா? பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது மிகப்பெரிய நிறுவனங்கள் தகவல்தொடர்பு சார்ந்த தங்கள் சேவைகளை தங்கள் நாட்டில் செய்தால் அதிக செலவுபிடிக்கும் என்று இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அளிக்கின்றன. வளரும் நாடுகளில் இருக்கும் அபரிமிதமான ஆள் பலமும் தகவல் தொழில்நுட்பமும் இதற்கு உதவுகிறது. இதில் இரு தரப்பினருமே லாபம் பெருகிறார்கள்.
கால் சென்டர் பணியில் சேர்பவர்கள் யாரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இல்லை. பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட , மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மத்தியதர, கீழ் மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்கள். கல்லூரிப் படிப்பை முடித்தபின் மேற்படிப்பு படிக்க முடியாமலோ, அல்லது மேற்படிப்பை முடித்த பின் நல்ல வேலை கிடைக்கும் வரையிலோ இந்த கால் சென்டர் பணிகளை மேற்கொள்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது. இதை நல்ல ஆடைகள் , வாகனங்கள், பொழுதுபோக்குகளில் செலவழிக்கிறார்கள். மேற்படிப்புக்குப் பணம் சேர்த்த பின்னரோ, நல்ல வேலை கிடைத்தபின்னரோ இந்த கால் சென்டர் வேலையை விட்டுவிடுகிறார்கள்.
இதுதான் ராமசுப்பு போன்றவர்களின் கண்களை உறுத்துகிறது. இந்த இளைஞர்களின் சந்தோஷமும் பண வசதியும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்த கால்சென்டர்கள் இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும் ? தாய் , தந்தையரைக் கஷ்டப்படுத்தி மேல் படிப்பு படிப்பார்கள். வேலை கிடைக்கும் வரை சும்மா இருப்பார்கள் அல்லது 2,000- 3,000 ரூபாய் சம்பளத்தில் எங்கேயாவது வேலை செய்வார்கள். இதைத்தான் இதுமாதிரி நபர்கள் விரும்புகிறார்கள். தான் சினிமாவில் சேர்ந்து படாதபாடுபட்டு ஒரு படம் முடித்த பிறகு கிடைக்கும் வாழ்வு இந்த இளைஞர்களுக்கு வெகு சீக்கிரத்திலேயே கிடைத்துவிடுகிறது என்ற ஆதங்கம் போலிருக்கிறது.
தமிழ் எம்.ஏ. படத்தில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தன் மேலாடையில் சற்று வேடிக்கையான வாசகம் எழுதியிருந்த பெண்ணிடம் நாயகன் மோசமாக நடந்துகொள்வான். தான் செய்ய விரும்புவதைத்தான் நாயகன் மூலம் செய்கிறார் இயக்குனர் என்று தோன்றுகிறது. மும்பையில் புத்தாண்டு தினத்தன்று இரண்டு பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்களுக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
இவருக்கு அடுத்தபடியாக பேசவந்த கனமொழி இதற்கு சரியான வகையில் பதிலடி கொடுத்தார். “ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்றுக்கொள்வது என்பது இன்னமும் ஒரு வாய்ப்புதான். அதேபோல, கால் சென்டர்களில் வேலை பார்க்க வேண்டும் என யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சிலருக்குக் கிடைப்பதுபோன்ற நல்ல வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் “ என்றார். ராம் உளறும்போது கையைத் தட்டியவர்கள் இந்தப் பதிலின் போது மூச்சுகூட விடவில்லை.
இதையடுத்து குஷ்பு பேசியது எல்லா மீடியாவிலும் வந்துவிட்டது. அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டிய உரை கவிஞர் அறிவுமதியினுடையது. குஷ்புவுக்கு அடுத்துப் பேச வேண்டியவர் அறிவுமதி இல்லையென்றாலும், குஷ்புவைக் கண்டிப்பதற்காக அடுத்ததாகப் பேச வந்தார் அறிவுமதி. தான் கலந்துகொள்ளும் எல்லாக் கூட்டங்களிலும் பேசுவதைப் போலவே இந்தக் கூட்டத்திலும் தன் பேச்சை ஆரம்பித்தார் அறிவுமதி. “இரண்டாயிரம் ஆண்டுகாலமாக மலத்தையும் மூத்திரத்தையும் தூக்கிச் சுமக்கிறான் தமிழன். என் தாத்தனும் அப்பனும் இப்படி ஒடுக்கிவைக்கப்பட்டிருந்தார்கள். அந்தத் தமிழனை விடுவிக்க வந்த திருமவளவன் வந்தால் வணக்கம் சொல்ல மறுக்கிறீர்கள். நக்கல் செய்கிறீர்கள். அதேபோல ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில் Who is He? என்று கேட்டீர்கள். இப்படி ஒரு தமிழனை, தங்கர் பச்சானை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா? அவன் யார் எனறு கேட்கிறீர்கள்“ என்பதுதான் இவரது உரையின் சாரம்.
அறிவுமதி தன் எல்லா உரையையுமே “மலம் அள்ளும் மூத்திரம் அள்ளும் தமிழன் “ என்றுதான் ஆரம்பிப்பார். உண்மையில் மலம் அள்ளும் மக்களுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் ? என்றைக்காவது அவரோ, அவரது இனத்தினரோ அம்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்களா ? வடமாட்டங்களில் ஆதிக்க ஜாதியாக இருக்கும் ஒரு ஜாதியைச் சேர்ந்த அவர் ஏன் இப்படி ஒடுக்கப்பட்டவர் வேடம் போடுகிறார் ? யாரும் அவரைக் கேட்டுவிட முடியாது. கேட்டால் தமிழின விரோதி என்பார்.
இது ஒரு தந்திரம். ஒரே சமயத்தில் ஒடுக்கப்படுபவராகவும் ஒடுக்குபவராகவும் இருக்கும் தந்திரம். ஒடுக்கப்படுபவர் குரல் எழுப்பினால் நான் உங்கள் பக்கம்தான் இருக்கிறேன் என்று சேர்ந்துகொள்வது. அதே நேரத்தில் ஒடுக்குமுறையாளனுக்கான எல்லா வசதிகளையும் அனுபவிப்பது. இதை யாரும் கேள்விகேட்கக்கூடாது. கேட்டால், அவன் தமிழின விரோதி.
தங்கர்பச்சானை யார் அவர் என்று கேட்டால் இவருக்கென்ன கோபம் ? காரணம், ஒரே ஜாதி. தமிழ் நாட்டில் வேறு இயக்குனர்களே இல்லையா ? ஏன் போகிற இடத்திலெல்லாம் தங்கர்பச்சானைத் தூக்கிப்பிடிக்கிறார் இவர். தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்களே அதுதான் இது. உண்மையைச் சொல்லப்போனால், தங்கர்பச்சானைவிட திரையுலகில் குஷ்புதானே சீனியர் ? அவரைவிட பிரபலமானவரும்கூட.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு கிராமத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த ஊர் பெரிய மனிதர் அந்த ஊரைச் சேர்ந்த முக்கியமான தமிழறிஞர் ஒருவரை அழைத்துவந்து, “இவர் தமிழ்நாட்டிலேயே மிக முக்கியமான தமிழறிஞர் “ என்று அவருடைய பெயரைச் சொல்லி அறிமுகம் செய்துவைத்தார். எம்.ஜி.ஆரும் அந்த அறிஞரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அந்த தமிழறிஞர், ஊர் பெரிய மனிதரைப் பார்த்து, “நான் யாருன்னு ஐயாகிட்ட சொன்னேள். ஐயா யாருன்னு எனக்கு அறிமுகப்படுத்தவேயில்லையே ?” என்று கேட்டாராம். ஊர் பெரிய மனிதர் திடுக்கிட்டுப் போய், “இவரையா தெரியலை “ என்று கேட்டிருக்கிறார். பிறகு, எம்.ஜி.ஆரே தான் யார் என்பதை அவரிடம் சொல்லி பேச்சைத் தொடர்ந்திருக்கிறார்.
தன்னைத் தெரியாது என்றவுடன் எம்ஜிஆருக்குக் கோபம் வரவில்லை. தங்கர்பச்சானுக்கும் அறிவுமதிக்கும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. தங்கர்பச்சானை யார் அவர் என்று கேட்ட குஷ்பு ரஜினியை அப்படி கேட்பாரா ? நிச்சயமாக மாட்டார். ரஜினி ஒரு முக்கியமான, வெற்றிகரமான நடிகர். தங்கர்பச்சானைக் கேட்கிறார் என்றால் அவர் நிலை திரையுலகில் எந்த இடத்தில் இருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டியதுதான். அதைவிட்டுவிட்டு சம்பந்தமில்லாமல் பொங்கினார் அறிவுமதி.
இறுதியாகப் பேசிய திருமாவளவன், குஷ்புவுக்கும் தனக்கும் இடையிலான பிரச்னையை அத்தோடு முடித்துக்கொள்ளும்படி பேசினார். அதுதான் இந்தக் கூட்டத்திலேயே மிகச் சிறந்த அம்சம்.
குஷ்புவை உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ; அன்றைக்கு அவர் செய்ததை ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ (அன்றைய தினம் திருமாவளவனுக்கு அவர் வணக்கம் சொன்னபோது அவருடைய உடல் மொழி மிக மோசமாக இருந்தது என்பது வருந்தத்தக்கதுதான்) – அவர் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை, திருமாவளவனைப்போல. நடிகைகள் என்றாலே கிள்ளுக்கீரைகள் என்று நினைக்கும் அறிவுமதி போன்ற ஆட்கள் நிறைந்த சமூகத்தில் இப்படித் துணிச்சலாக குரல்கொடுக்க இன்னும் பலர் வேண்டும்.

