மதுரை பிரஸ் லோகோ

மதுரை பிரஸ் லோகோ

என்னுடைய நண்பர் ஒருவர் மதுரை பிரஸ் என்று ஒரு பதிப்பகம் வைத்திருக்கிறார். மதுரைக்காரர். தன் பதிப்பகத்திற்கு இப்படி ஒரு பெயர் அமைந்ததில் அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். தலைக்கனம் என்றுகூடச் சொல்லலாம். சற்று கர்வமாகத்தான் திரிவார். தன் ஊர்ப் பெயரும் பதிப்பகம் சார்ந்த பிரஸ் என்ற வார்த்தையும் நன்றாகப் பொருந்திப் போவதாக பார்த்தவர்களையெல்லாம் மொக்கை போடுவார். யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களை பார்ப்பதுபோல, பிற பதிப்பகத்தினரையெல்லாம் படு இகழ்ச்சியாகப் பார்ப்பார். இந்த அளவுக்குப் பெயர் அமையவில்லையாம்.

ஆனால், ஆண்டவன் என்று ஒருவன் இருக்கிறானே!  அந்த நாளும் வந்தது. சென்னை கோவிந்தன் ரோட்டிலிருந்து சிஐடி நகருக்குத் திரும்பும் இடத்தில் ஒரு பெயர்ப் பலகை. மதுரை மெஸ். பைக்கை ஓட்டிக்கொண்டிருந்த மதுரைக்காரருக்கு சுரீர் என்றது. பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த நண்பர், “’டேய் உன் கம்பனி பேரும் மதுரை மெஸ்தானே..” என்றார். மதுரைக்காரர் உள்ளுக்குள் நொறுங்கிப் போனார். “அது மதுரை பிரஸ்” என்றார் கொஞ்சம் சுருதி குறைந்து. “இரண்டும் ஒன்னு மாதிரிதான்டா இருக்கு.. என்ன பெரிய வித்தியாசம்?” என்றார் பில்லியன் நண்பர். அவமானத்தில் தலை கவிழ்ந்தார் மதுரைக்காரர்.

இப்போது ராத்திரியானால், அந்த மதுரை மெஸ்ஸில் புரோட்டா வாங்கித் தின்றுவிட்டு, “மதுரைக்காரன்னா சும்மாவா.. புரோட்டா சூப்பர்… நீங்களும் ரெண்டு சாப்பிடுங்க சார்” என்று பில்டப் கொடுத்துக்கொண்டு திரிகிறார். ஒருவர் கர்வத்தை அடக்க ஆண்டவன் என்னவெல்லாம் செய்கிறார் பாருங்கள்!

செல்போனில் ஒரு அழைப்பு வருகிறது. எடுத்துப் பேசினால் நடிகர் மாதவன். நான் நடித்திருக்கும் வாழ்த்துகள் படத்தைப் பாருங்கள் என்கிறார். விளம்பரம்! சினிமா வெளியீடும் அதன் விளம்பர யுத்திகளும் எந்த அளவுக்கு மாறிவிட்டன? செல்போனில் வந்த விளம்பரம் உண்மையி்ல் எனக்கு ஒரு எதிர் மனநிலையை உருவாக்கியது. இப்படி நம்மைத் தொந்தரவு செய்து, விளம்பரத்தைத் திணிக்கும் இந்தப் படத்தைப் பார்க்கவேகூடாது என்று தோன்றியது (படத்தை இயக்கியிருப்பது சீமான் வேறு!).

தேடி வந்த திரையரங்கு

தேடி வந்த திரையரங்கு

80களின் துவக்கம். இரவு ஒரு ஏழு-ஏழரை மணி வாக்கில் ஒரு பேண்டு வாத்தியச் சத்தம் கேட்கும். புத்தகத்தைப் போட்டுவிட்டு எல்லோரும் ரோட்டுக்கு ஓடிவருவோம். முதலில் ஒரு பேண்டு வாத்தியக்காரன் பேண்டு அடித்துக்கொண்டு செல்வான். அடுத்ததாக ஒரு பெண் பெட்ரமாக்ஸ் லைட்டைத் தூக்கிச் செல்வார். அடுத்ததாக அந்த வாகனம் வரும். இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்ட (பார்க்க வரைபடம்) அந்த வாகனம் வரும். ஒரு பெரிய தகரம். அதைச் சுற்றி பிரேம். இரண்டு சக்கரங்கள் இதுதான் அந்த வாகனம். இதன் இரண்டு பக்கமும் வரவிருக்கும் அல்லது அப்போதுதான் ரிலீஸாகியிருக்கும் படங்களின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். இது போல குறைந்தது இரண்டு வண்டிகளாகவது வரிசையாக வரும். இந்த வண்டிகளின் பொற்கால யுகத்தில் அதாவது 82-83ல், ரிலீஸாகும் படத்தைப் பற்றிய விவரங்களுடன் கூடிய சாணித் தாளில் அடிக்கப்பட்ட நோட்டீஸை ஒருவர் கொடுத்துக் கொண்டே போவார். எங்களைப் போன்ற சின்னப் பையன்களுக்கு கொடுக்க மாட்டார்கள். “அண்ணே.. அண்ணே…” என்று கெஞ்ச வேண்டும். அந்த நோட்டீஸில் சில சமயங்களில் படத்தின் ஸ்டில் போக கதை, நடிகர்கள், இயக்குனர் விவரங்கள் இடம் பெற்றிருக்கும். பல சமயங்களில் கதை இல்லாமல் இந்த விவரங்கள் இருக்கும். எப்படியிருந்தாலும் அந்த நோட்டீஸைப் படிப்பது சுவாரஸ்யமான விஷயம்.

மதுரையின் மத்தியப் பகுதியில் அல்லது அதைச் சுற்றியிருந்த சென்ட்ரல், தேவி, நியூ சினிமா, சிட்டி சினிமா, சக்தி, சிவம் போன்ற தியேட்டர்களின் விளம்பரங்கள் மட்டுமே வடக்கு மாசி வீதியில் வரும். பிறகு, நோட்டீஸ் கொடுக்காமல் வாகனங்கள் மட்டும் ஒன்றிரண்டு ஆண்டுகள் வந்தன.  பிறகு வடக்கு மாசி வீதியில் போக்குவரத்து அதிகரிக்க, அதிகரிக்க 80களின் மத்தியிலேயே இந்த விளம்பர வாகனங்கள் வருவது நின்றுவிட்டது. நகரம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியே விளம்பரம் செய்துவிடலாம் என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருக்க வேண்டும்.

செல்போனில் நடிகர்களே வந்து படம் பார்க்கச் சொல்லும் கால கட்டத்திலும் அந்தத் தகர விளம்பர வண்டியே இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கிறது. இதற்கு என் பழமை மோகம் மட்டும் காரணம் இல்லை என்று தோன்றுகிறது. அதிலிருந்த ஒரு பாமர எளிமையும் சினிமா பார்க்கும் வாய்ப்பு குறைவாக இருந்த காலகட்டத்தில் சினிமா திரை போன்ற அந்த வாகனமே எங்களைத் தேடி வருவதுமே எங்களை ஈர்த்திருக்க வேண்டும்.

பிரமாதமான நடிப்பு

பிரமாதமான நடிப்பு

பா. விஜய் நம் கலாம் கையால் தேசிய விருது வாங்கிய பாடலாசிரியர். பாக்யாவில் படு மோசமான சித்திரங்களுடன் உருகி.. உருகி.. கவிதை நடையில் ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். திடீரென்று பார்த்தால் ஒரு நாள் தாய் காவியம் என்று ஒரு படம், ஞாபகங்கள் என்று ஒரு பூப்போட்ட படம் என்றெல்லாம் விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. கடைசியில் ஞாபகங்கள் வெளிவந்தேவிட்டது.

வசதியில்லாத ஒரு ரொம்ப நல்லவர் ஒரு பெண்ணை பயங்கரமாக, பயங்கர டீசன்டாகக் காதலிப்பது, பிறகு அந்தப் பெண்ணுக்கு ஒரு வீணாய்ப் போனவருடன் கல்யாணம் நடப்பது, பிறகு இந்த நல்லவர் பெரிய்ய ஆளாகி அந்த வீணாகப் போனவளைச் சந்திப்பது என்ற காவியக் காதல் கதையை 100 ஆண்டு கால சினிமாவில் பல முறை பார்த்தாகிவிட்டது. இந்தப் படத்தில் இன்னொரு முறை. இது ஒரு உண்மைக் கதை என்று படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஒரு பில்ட் அப் வேறு கொடுக்கிறார் விஜய்.

சினிமா கவிஞர்களுக்கு என்று ஒரு பிம்பம் இருக்கிறது. வெள்ளை ஜிப்பா போடுவார்கள். எப்போதும் புன்னகையுடன் இருப்பார்கள். பேசும்போது எதுகை மோனையில் வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். மென்மையாக நடந்துகொள்வார்கள். அதுவும் பெண்கள் என்றால் கேக்கவே வேண்டாம்.. அப்புறம்.. மெதுவாக, கம்பீரமாக நடப்பார்கள். இது ஒரு பாமர பிம்பம். ரவுடிகள் எல்லாம் கட்டம் போட்ட பனியன் போட்டிருப்பார்கள் என்பது மாதிரி. வைரமுத்துவை ஒரு தடவை நேரில் பார்த்தாலோ, உரையாடினாலோ இந்த பிம்பம் எல்லாம் கலைந்துவிடும்.

இந்த டுபாக்கூர் பிம்பத்தை அப்படியே பின்பற்றுகிறார் விஜய். மென்மையாக ஒரு புன்னகை. ஜிப்பா. எதுகை மோனையில் அசட்டு கவிதைகள். மென்மையாக நடந்து கொள்வது. இந்த மென்மையாக நடந்துகொள்வது என்றால் என்னவென்று இந்த இடத்தில் விளக்கிவிடுகிறேன். அதாவது, காதலிக்கும் பெண்ணுடன் தனியறையில் இருந்தால்கூட மயிலிறகால்தான் தடவுவார் கவிஞர். காதலியே முன்வந்து படுக்கத் தயாரானால்கூட, “நீ குழந்தைமா” என்று மறுத்து…

ஆனால், படம் முழுக்க தன்னை மகா கவிஞன் என்று மற்றவர்களைச் சொல்ல வைத்து அழகு பார்ப்பதில் மட்டும் கூச்சம் கிடையாது.

இந்த படத்தைப் பற்றிச் சொல்ல ஏதாவது ஒரு நல்ல விஷயம் கிடைக்குமா என்று போகஸ் லைட் போட்டுப் பார்த்தால்கூட… ம்.. ஹும்… நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறார் விஜய். அவ்வப்போது கண்ணாடியைக் கழற்றி மாட்டுவதுதான் அவருடைய உட்சபட்ச நடிப்பு.  பல முக்கிய காட்சிகளில் அழுகிறாரா, ஆத்திரப்படுகிறாரா, சிரிக்கிறாரா என்று புரியாத வகையில் ஒரு முகபாவம் காட்டுகிறார்.

படத்தில் காமெடி ட்ராக் என்று தனியாக இல்லை. அந்தக் குறையை, படத்தில் வரும் புரட்சிகர தோழர்கள் தீர்க்கிறார்கள். தீவிர மார்க்ஸியமோ, தமிழ்த் தேசியமோ பேசுகிற ஒரு குழு இவர் ஒரு கட்டுரைக்குக் கொடுக்கும் தலைப்பைப் (குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர். இந்தியா சுதந்திரம் வாங்கிவிட்டது – இதுதான் அந்த அற்புதமான தலைப்பு) பார்த்து அசந்துபோய் ரூ. 5,000 பரிசளிக்கிறார்களாம். அதைப் பார்த்து போலீஸ்காரர்கள் பிடித்துக்கொண்டுபோய் வைத்து அடிக்கிறார்களாம்.

சினிமாவைக் கண்டுபிடித்தது எவ்வளவு தவறாகப் போய்விட்டது?

(குத்துப் பாட்டு இல்லாமல், கதாநாயகியின் சதையைக் காட்டாமல், சண்டைக் காட்சி இல்லாமல் ஒரு தரமான படத்தை எடுத்தால், அதை வரவேற்கும் நல்ல குணம் இல்லையே என்று திட்டும் அன்பர்களை வரவேற்கிறேன்)

தமிழில் கடந்த சில மாதங்களாக வெளிவரும் படங்களைப் பார்க்கும் சினிமா ரசிகனுக்கு விரக்திதான் மிச்சம். பசங்க படத்திற்குப் பிறகு சொல்லும்படியாக ஒரு படமும் வரவில்லை. இதற்கிடையில் டிவிகளில் நாடோடிகள் படத்தின் விளம்பரம் வெளிவந்தபோது, சட்டென எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருப்பதும், இந்தப் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்தில் நடித்திருந்ததும்தான் இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம். இந்த சமுத்திரக்கனி, இதற்கு முன்பு நிறைஞ்ச மனசு படத்தில் நடித்திருந்தார் என்பதும் பிறகு டிவி சீரியல்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் கொஞ்ச நாள் மறந்துபோய், அந்த டிரெய்லர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித பரவசம் ஏற்பட்டது.
ஆனால், படத்தைப் பார்த்தவுடன் கடும் விரக்தி ஏற்படுகிறது. சசிகுமார் என்ற இயக்குனர் – நடிகரின் பெயரில் இருக்கும் பிராண்ட் வேல்யூவை வைத்துக்கொண்டு ஒரு அமெச்சூரான படத்தைக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. மூன்று நண்பர்கள். மூவருக்கும் வெவ்வேறு இலக்குகள். அப்போது, சசிகுமாரைத் தேடி பழைய நண்பர் ஒருவர் வருகிறார். அவருடைய காதலில் பிரச்னை. அந்த இளைஞரையும் அவரது காதலியையும் பல்வேறு இழப்புகளைத் தாண்டி சேர்த்து வைக்கிறார்கள் இந்த மூவரும். பிறகு, நண்பரும் காதலியும் பிரிந்துவிட, மூவரும் அந்த இளைஞரையும் அந்தக் காதலியையும் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.
படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்தே இது தேறாத படம் என்று தெரிந்துவிடுகிறது. அதற்கடுத்த காட்சியில் ஹீரோவின் அறிவுரை. தமிழ் சினிமாவில் அறிவுரை சொல்வதற்கான உரிமை ரஜினிகாந்திற்கும் அதற்குப் பிறகு விஜய்க்கும்தான் இருக்கிறது என்பது தெரியாமல் போகிற போக்கில் பலரும் பல அறிவுரைகளைக் கத்துகிறார்கள். அதில் பல காதலின் கீழ்மையையும் நட்பின் மேன்மையையும் உரத்த குரலில் அறிவிக்கின்றன. இதெல்லாம் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் குமுறித் தீர்க்கப்பட்டவை. தாங்க முடியவில்லை. இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கும் இரண்டு பெண்கள்தான் ஒரே ஆறுதல்.
திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளையெல்லாம் பட்டியலிடுவது சரியான கடி வேலை. சுப்ரமணியபுரம் புலி என்றால் நாடோடிகள் பூனை. சுப்ரமணியபுரம் போக்கிரி என்றால், நாடோடிகள் தோரணை. இதில் புரியாத மேட்டர் என்னவென்றால், இணையதளங்களில் எப்படி இப்படி கொண்டாடித் தள்ளுகிறார்கள் என்பதுதான். ஒரு எதிர்மறையான விமர்சனம்கூட கண்ணில் படவில்லை. இந்தப் படத்தை எதிர்த்து எழுதுவதே தமிழினத்திற்கு செய்யும் துரோகம் (இப்போது இந்த துரோகம்தான் பேமஸ்) என்பது மாதிரி ஆகிவிட்டது. எவ்வளவோ செய்துவிட்டோம், இந்தத் துரோகத்தையும் செய்துவிடுவோம் என்றுதான் இந்த விமர்சனம்.
ஆனால், டிரெய்லரைப் பார்த்துப் பரவசப்பட்டு, படத்துக்குப் போகும் என்னை மாதிரி ஆட்களையெல்லாம், வாயில் ஒரு செருப்பைக் கவ்வக் கொடுத்துவிட்டு, இன்னொரு செருப்பாலேயே அடிக்க வேண்டும்.

நாடோடிகள்தமிழில் கடந்த சில மாதங்களாக வெளிவரும் படங்களைப் பார்க்கும் சினிமா ரசிகனுக்கு விரக்திதான் மிச்சம். பசங்க படத்திற்குப் பிறகு சொல்லும்படியாக ஒரு படமும் வரவில்லை. இதற்கிடையில் டிவிகளில் நாடோடிகள் படத்தின் விளம்பரம் வெளிவந்தபோது, சட்டென எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருப்பதும், இந்தப் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்தில் நடித்திருந்ததும்தான் இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம். இந்த சமுத்திரக்கனி, இதற்கு முன்பு நிறைஞ்ச மனசு படத்தை இயக்கியவர் என்பதும் பிறகு டிவி சீரியல்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் கொஞ்ச நாள் மறந்துபோய், அந்த டிரெய்லர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித பரவசம் ஏற்பட்டது.

ஆனால், படத்தைப் பார்த்தவுடன் கடும் விரக்தி ஏற்படுகிறது. சசிகுமார் என்ற இயக்குனர் – நடிகரின் பெயரில் இருக்கும் பிராண்ட் வேல்யூவை வைத்துக்கொண்டு ஒரு அமெச்சூரான படத்தைக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. மூன்று நண்பர்கள். மூவருக்கும் வெவ்வேறு இலக்குகள். அப்போது, சசிகுமாரைத் தேடி பழைய நண்பர் ஒருவர் வருகிறார். அவருடைய காதலில் பிரச்னை. அந்த இளைஞரையும் அவரது காதலியையும் பல்வேறு இழப்புகளைத் தாண்டி சேர்த்து வைக்கிறார்கள் இந்த மூவரும். பிறகு, நண்பரும் காதலியும் பிரிந்துவிட, மூவரும் அந்த இளைஞரையும் அந்தக் காதலியையும் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.

படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்தே இது தேறாத படம் என்று தெரிந்துவிடுகிறது. அதற்கடுத்த காட்சியில் ஹீரோவின் அறிவுரை. தமிழ் சினிமாவில் அறிவுரை சொல்வதற்கான உரிமை ரஜினிகாந்திற்கும் அதற்குப் பிறகு விஜய்க்கும்தான் இருக்கிறது என்பது தெரியாமல் போகிற போக்கில் பலரும் பல அறிவுரைகளைக் கத்துகிறார்கள். அதில் பல காதலின் கீழ்மையையும் நட்பின் மேன்மையையும் உரத்த குரலில் அறிவிக்கின்றன. இதெல்லாம் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் குமுறித் தீர்க்கப்பட்டவை. தாங்க முடியவில்லை. இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கும் இரண்டு பெண்கள்தான் ஒரே ஆறுதல்.

திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளையெல்லாம் பட்டியலிடுவது சரியான கடி வேலை. சுப்ரமணியபுரம் புலி என்றால் நாடோடிகள் பூனை. சுப்ரமணியபுரம் போக்கிரி என்றால், நாடோடிகள் தோரணை. சுப்ரமணியபுரம், பசங்க போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியிருக்கும் புதிய அலையையே, ஒரு வகைமாதிரியாக மாற்றியிருக்கிறது இந்த படம்.  அதாவது, ஒரு வெற்றிகரமான மசாலா படம் வந்ததும் அதைப் போலவே பத்து குப்பை மசாலா படங்கள் வருவது போல. இதில் புரியாத மேட்டர் என்னவென்றால், இணையதளங்களில் எப்படி இப்படி கொண்டாடித் தள்ளுகிறார்கள் என்பதுதான். ஒரு எதிர்மறையான விமர்சனம்கூட கண்ணில் படவில்லை. மாறாக, இதைவிட பல மடங்கு மேம்பட்ட பசங்க படம் இந்த அளவு உற்சாகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை. நாடோடிகள் படத்தை எதிர்த்து எழுதுவதே தமிழினத்திற்கு செய்யும் துரோகம் (இப்போது இந்த துரோகம்தான் பேமஸ்) என்பது மாதிரி ஆகிவிட்டது. எவ்வளவோ செய்துவிட்டோம், இந்தத் துரோகத்தையும் செய்துவிடுவோம் என்றுதான் இந்த விமர்சனம்.

கொசு அடிப்பாளர்

தீவிர கொசு

தீவிர கொசு

 

அலுவலகம் விட்டுவந்த பின்

ஃப்ரீயாய் இருக்கும்

நேரத்தில்

என்ன செய்யலாம் என்று

யோசித்தபோது

கொசு அடிக்கலாம்

என்று தோன்றியது.

எனக்குச்

சின்ன வயதிலிருந்தே

கொசு அடிக்கும்

பழக்கம் உண்டு.

நண்பர்களும்

ஊக்குவித்தார்கள்.

உங்கள் முகமே

நீங்கள் திறம்வாய்ந்த

கொசு அடிப்பாளர் என்கிறது

என்றார் ஒரு நண்பர்.

எல்லாம் சேர்ந்து கொசு

அடிக்கக் கிளம்பியாயிற்று.

கொசு அடிக்கும் மின்சார

மட்டையும் வாங்கிவிட்டேன்.

முதல் நாளே எட்டுத்திக்கும்

ஜெயம்.

1000 கொசுக்கள்.

வாரத்தில் 1000 கொசுக்கள்

அடித்தாலே

வெற்றிதான் என்றார்கள்

விவரம் தெரிந்தவர்கள்.

நாட்கள் செல்லச் செல்ல

நீங்கள் வேலையை விட்டுவிட்டு

முழுநேரமும் கொசு அடிக்கலாமே

என்று சொல்ல ஆரம்பித்தாள் மனைவி.

நண்பர்களும் ஊக்குவிக்கிறார்கள்.

கொசு அடித்தே கொரெல்லோ

கார் வாங்கிவிட்டாராம்

அந்த கொசுவாளர்.

இன்னொருவருக்கு

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில்

5 கோடிக்கு ஆர்டராம்.

இதோ

இறங்கிவிட்டேன் நானும்.

நாம் அடிக்கும் கொசுவுக்கு

1 கோடி கிடைத்தால்

போதாது?

 

போன வாரம் மங்களூரில் ஒரு பப்பில் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களை ஸ்ரீ ராம சேனா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கியது. கலாச்சாரத்திற்கு எதிரான செயல் என்று காரணமும் சொன்னார்கள். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய மாநில பா.ஜ.க. அரசுக்கு பல நாட்கள் பிடித்தன. “பப் கலாச்சாரத்தை ஏற்க முடியாது” என்று அறிவித்தார் மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா. பா.ஜ.க.விடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? ஆனால், ஆச்சரியம் தருவது இங்கிருக்கும் அரசியல் கட்சிகளின் மௌனம்தான். தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளிலிருந்து வி.சி.க. போன்ற சிறிய கட்சிகள் வரைக்கும் இதைப் பற்றி வாயையே திறக்கவில்லை. 

31ந் தேதி தி இந்து நாளிதழில் அன்புமணி இதுகுறித்து வெளியிட்ட ஒரு கருத்து வெளிவந்திருக்கிறது. அதாவது பப் கலாச்சாரம் குடிப்பதை ஊக்குவிப்பதால், இவர் அதை எதிர்க்கிறாராம். அவர் இப்படிச் சொல்லாவிட்டால்தான் ஆச்சரியம். பா.ம.க. மட்டுமில்லை, தமிழ் தேசியவாதம் பேசும் எல்லாக் கட்சிகளுமே இம்மாதிரி நிலைப்பாட்டைக் கொண்டவைதான். இவர்களின் கை ஒங்கும்போது, இக்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நிச்சயம் இம்மாதிரித் தாக்குதல்களில் ஈடுபடுவார்கள். தமிழ் தேசியவாதக்காரர்களைக் கூர்ந்து கவனித்தால் சில ஒற்றுமைகள் புலப்படும். அவையாவன: 1. ஏதாவது ஒரு ஜாதிக்கு ஆதரவான செயல்பாடு பட்டும்படாமலும் இருக்கும், தனிப்பட்ட மட்டத்திலாவது. 2. நம்முடைய கலாச்சாரம் என்று எதையாவது ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். 3. இவர்களை விமர்சிப்பவர்கள் எல்லோரையும்  தமிழினத் துரோகி என்பார்கள். 4. பெண்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் பற்றி அவ்வப்போது பேசுவார்கள். 5. தம்மை ஏற்காத கலை, கலாச்சார அமைப்புகளைத் தாக்குவார்கள். விடுதலைப் புலிகள் ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் திரைப்படங்களுக்கு 4 கட்ட தணிக்கை இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். 

 

தமிழ்த் தேசிய வாதிகளின் கையில் அதிகாரம் கிடைக்கும்போது அவர்களும் இதையே செய்வார்கள். தமிழையோ, அதன் கலாச்சாரத்தையோ காப்பாற்றுவதற்காக அல்ல; அதன் பெயரால் சொத்து சேர்க்க, வேண்டியதை அனுபவிக்க. கடந்த பத்தாண்டுகளில் பா.ம.க சேர்த்திருக்கும் சொத்தும் பணமும் இதையே சுட்டிக்காட்டுகின்றன. 

முதலில் ரிலையன்ஸை எதிர்த்தார் ராமதாஸ். பிறகு பான்பராக். பிறகு கோக். இப்போது சிகரெட், மது. ரிலையன்ஸ், கோக், பான்பராக் போன்றவை இல்லாமல் போய்விட்டனவா? அதை எதிர்த்து ஏன் தொடர் போராட்டங்கள் நடப்பதில்லை? இதன் பின்னணியில் இப்பது மக்களின் ஆரோக்கியம் சார்ந்த கரிசனம் மட்டும்தானா? இதைக் கேட்டால் தமிழின விரோதி என்பார்கள். 

எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு குறிப்பிட்ட இனக்குழுவானது தம்முடைய உரிமைகளைக் காப்பாற்ற தனி நாடு முழக்கத்தை எழுப்பி போராடி வருவது தொடர்ந்து நடந்துவருகிறது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு வளமான முதல் 4 மாநிலங்களுக்குள் இருந்து வருகிறது. உரிமைப் பிரச்னை ஏதும் புதிதாக எழவில்லை. 

ஆகையால் இம்மாதிரி தமிழ்த் தேசியவாதம் பேசுபவர்களுக்கு “தமிழ்க் கலாச்சாரம்” என்ற ஒன்றைப் புதிதாகக் கட்டமைத்து அதை முன்னிறுத்தி குரலெழுப்ப வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கலாச்சாரம் சுதந்திரமான ஒன்றாக இருப்பதால், ஒடுக்குமுறைகள் நிறைந்த ஒன்றை இவர்கள் தமிழ்க் கலாச்சாரமாக முன்வைப்பார்கள். ஒட்டுமொத்த தமிழகமும் ஜாதி அடக்குமுறைக்கு எதிராக இருந்தால் இவர்கள் அதை ஆதரிப்பார்கள். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும்; அவரது பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என திருமாவளவன் கோரியதை கவனிக்கலாம். இத்தனைக்கும் விமான நிலைய விரிவாக்கத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும் நிலங்கள் அனைத்தும் தலித்துகளுக்குச் சொந்தமானவை. இருந்தும் திருமாவளவன் தேவர் பெயரை எதற்கு முன்வைக்கிறார்? ஒரு பெரிய ஜாதிக்கூட்டத்தின் ஆதரவை இழந்துவிடக்கூடாது என்பதற்காக.

யோசித்துப் பார்த்தால், ராமதாஸ், சீமான் கூட்டத்தைவிட கருணாநிதியும் ஜெயலலிதாவும் பலமடங்கு பரவாயில்லை என்று தோன்றுகிறது.

1.

பள்ளிக்கூட நினைவுகள்

பாதியில் கலைவதில்லை

இப்போது எதிர்ப்பட்டாலும் 

கேட்கிறாய்

கடலை மிட்டாய் 

வாங்கிக் கொடுத்த

கடனை.

 

2.

முறுக்குவித்த கோவிந்தம்மாளுக்கு 

அப்போதே வயது 60.

இப்போதோ 

80.

முறுக்கு விலை 

ஏறும்போது

சேர்ந்தே ஏறுகிறது 

வயதும்.

 

3.

கவிதை என்பது

பித்தனின் உளறல்

கவிதை என்பது 

காதலின் ஆன்மா

கவிதை என்பது

இரண்டாம் ஆட்ட சினிமா

கவிதை என்பது

குளிர்ந்த பீர்

கவிதை என்பது

ஆஃபரில் கிடைக்கும் பீஸா

கவிதை என்பது

600 காப்பிகள் அடிக்க உதவும் எழுத்து

கவிதை என்பது

விசிட்டிங் கார்ட்

கவிதை என்பது

கவிஞனின் திமிர்

கவிதை என்பது

இல்லாத ஒன்று.

எஸ்ராஜெயமோகன் தமிழின் சீரியஸ் எழுத்தாளர்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி ரொம்ப அதிகம். அசோகமித்திரன் ஒரு விதிவிலக்கு. இப்படி ஒரு அபிப்பிராயம் மனதில் பதிந்து போயிருக்கையில், நண்பர் ஒருவர் அனுப்பிய லிங்கிற்குப் போய் பார்த்தேன். அவர் சுட்டியது ஜெயமோகனின் வலைபதிவை. அதில் எஸ். ராமகிருஷ்ணனைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார், பாருங்கள்.. அந்த ஒரு கட்டுரைக்காகவே அவருக்கு ஞானபீடம் கொடுக்கலாம். அந்தப் பதிவை காப்பியைக் குடித்துக்கொண்டே படித்தேன். மூன்றாவது பாராவிலேயே புரையேறி மானிட்டர் முழுக்க காப்பி. ஜெயமோகனைப் பற்றி உங்களுக்கு என்னவிதமான எண்ணம் வேண்டுமானாலும் இருக்கலாம். அதை ஒருபக்கம் வைத்துவிட்டு இதைப் படியுங்கள். தமிழ் இலக்கிய உலக அரசியல் பற்றி சிறிது பரிச்சயம் இருந்தால், கட்டுரையை வெகுவாக ரசிப்பீர்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்ஜாய்!

 

பழைய அழகியும் பயங்கர நடிகரும்

பழைய அழகியும் பயங்கர நடிகரும்

தமிழ் சினிமாவில் த்ரில்லர் ரக படங்கள் வெளிவருவது மிக அரிதான சம்பவம். அதிலும் நல்ல த்ரில்லர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இம்மாதிரி சூழலில்தான் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பொம்மலாட்டம் மிக முக்கியமான படமாகத் தோன்றுகிறது. பாரதிராஜாவின் முந்தைய த்ரில்லர்களான டிக்…டிக்…டிக்..சிவப்பு ரோஜாக்கள்கண்களால் கைது செய்  படங்களையெல்லாம்விட பல மடங்கு மேம்பட்ட த்ரில்லர் இது.  டிக்…டிக்… இடைவேளைக்குப் பிறகு எங்கெங்கோ போய்விடும். சிவப்பு ரோஜாக்களின் க்ளைமாக்ஸ் உருக்கமோ, உருக்கம். கண்களால் கைது செய் படம் த்ரில்லர் என்று சொல்லிக்கொண்டாலும், படுசோம்பலான படம். பாரதிராஜாவின் கிராமப் பின்னணியில் அமைந்த படங்களில் முதல் மரியாதைக்கு என்ன இடமோ,அந்த இடத்தை அவரது த்ரில்லர் வரிசையில் இந்தப் படத்திற்குக் கொடுக்கலாம்.

 

ராணா (நானா படேகர்) ஒரு எக்ஸென்ட்ரிக்கான திரைப்பட இயக்குனர். அவரது லேட்டஸ்ட் படமான சினிமாவில் நடித்த கதாநாயகியை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, காரோடு வைத்து ஒரு மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்றுவிடுகிறார். இந்தக் கொலையை விசாரிக்க வருகிறார் சி.பி.ஐ. அதிகாரி விவேக் (அர்ஜுன்). இந்தக் கொலைக்கு முன்பும், அதே படத்தின் ஷூட்டிங்கில் நடந்த வேறு இரண்டு கொலைகளையும் நோண்ட ஆரம்பிக்கிறார் விவேக். எக்ஸென்ட்ரிக்கான ராணா தன் கதாநாயகியிடம் ஏன் அவ்வளவு கரிசனம் காட்டினார்? படம் வெளிவரும் முன்பே நாயகியை ஏன் கொல்கிறார்..அதுவும் பத்திரிகையாளர்கள் துரத்தி வரும்போது? முந்தைய கொலைகளுக்கும் ராணாவுக்கும் என்ன சம்பந்தம்? இந்த முடிச்சுகள் எல்லாம் ஒரே புள்ளியில் இறுதியில் அவிழ்கின்றன.

 

 

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, இதுவரை பாரதிராஜா எடுத்த பாடாவதிப் படங்களுக்கெளுக்கெல்லாம் அந்தப் படங்களையெல்லாம் அவர் அலட்சியமாகக் கையாண்டதுதான் காரணம் என்று நினைக்கத் தோன்றுகிறது. சினிமா என்ற ஊடகத்தின் சாத்தியங்களையும் வரையறைகளையும் மிகத் துல்லியமாகப் புரிந்துகொண்ட ஒரு இயக்குனாரால் மட்டுமே எடுக்கக்கூடிய பல காட்சிகள் இந்தப் படத்தில் உண்டு. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை, படத்தின் மையப்புள்ளியைவிட்டு எங்கும் நகராத திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம். இம்மாதிரி த்ரில்லர்களில், கொலைகாரன் யார் என்பதைத் தேடும்போது, படம் பார்ப்பவர்களுக்கு பல்வேறு நபர்களின் மீது சந்தேகம் ஏற்படச்செய்யும் வகையில் பல காட்சிகளை அமைத்து, ஏமாற்றும் சிறுபிள்ளைத்தனமான உத்தி இந்தப் படத்தில் அறவே கிடையாது. படம் முழுக்க ராணா மீதுதான் குற்றம் சாட்டப்படுகிறது. அவர்தான் செய்தாரா, ஏன் செய்தார்? என்ற ஒரே ஒரு கேள்வியைச் சுற்றியே படத்தை நகர்த்திச் செய்கிறார் பாரதிராஜா.

 

 

தமிழின் மிகை நாடும் கலைஞர்களை விட்டுவிட்டு நானா படேகரை நாயகனாகத் தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனமான காரியம். சின்ன விழியசைவு, லேசாகத் திரும்பிப் பார்ப்பது போன்றவற்றின் மூலமே சொல்லவேண்டியதைக் கச்சிதமாகச் செய்கிறார் நானா. என்னதான் அர்ஜுன் நடித்திருந்தாலும், அதுவும் நல்லவராக நடித்திருந்தாலும் நானாதான் கதாநாயகன். அவர் ஃப்ரேமில் இருக்கும்போது மற்றவர்கள் இல்லாமல் போய்விடுகிறார்கள். நாயகியாக வரும் ருக்மிணி விஜயகுமார் ஒரு பழமை வாய்ந்த அழகி (சேலை விளம்பரங்களில் வருவார்களே.. அந்த மாதிரி).

படத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம், படம் முழுக்கத் தென்படும் அழகுணர்ச்சி. எந்த நெருடலும் இல்லாமல் படம் முழுக்க தேர்ந்த கலைஞனுக்குரிய அழகுணர்ச்சி வெளிப்படுகிறது. தமிழ்ப் படங்களில் காணவே முடியாத அம்சம் இது. பி. கண்ணனின் ஒளிப்பதிவு உண்மையிலேயே உலகத்தரம். படம் பல இடங்களில் ஃப்ளாஷ்பேக்கில் நடக்கிறது. ஃப்ளாஷ்பேக் என்ற கொசுவர்த்திச் சுருள் உத்தியை இவ்வளவு திறமையுடன் பயன்படுத்த முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனால், சில ஓட்டைகளும் உண்டு. கவிதாயினியாக வரும் அனிதா என்ற பெண் சம்பந்தமே இல்லாமல் ராணாவுடன் அவர் போகும் இடங்களுக்கெல்லாம் உடன் சுற்றுகிறார். கதையில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்த ஒரு பாத்திரம் இல்லாமல் இருந்திருந்தால் படம் இன்னும் பத்து மடங்கு சிறப்பாக இருந்திருக்கும். பிறகு, கவனக்குறைவால் ஆங்காங்கே தென்படும் சில குறைகள். அப்புறம் பாடல்கள். இவ்வளவு துணிந்த, பாரதிராஜாவால் பாடல்களைத் துறக்க முடியவில்லை. இதையெல்லாம் மீறித்தான், படத்தை இறுதிவரை நகத்தைக் கடித்துக்கொண்டு பார்க்க வைக்கிறார் பாரதிராஜா.

நேற்று எழுதிய பதிவின் தொடர்ச்சி இது. சரத் ரெட்டி விவகாரத்தைப் பற்றி மேலும் சில தகவல்கள் தெரியவந்தன. அதாவது மனிதர் திங்கள்கிழமை அலுவலகத்திற்கே வீல் சேரில்தான் வந்தாராம். சரி, இந்த விவகாரத்தை கலைஞர் டிவியின் உரிமையாளர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்களாம்? நிறைய நடந்திருக்கிறது. சரத் ரெட்டியைத் தாக்குவதற்கு முன்பே கலைஞர் டிவி தரப்பினரிடம் செய்து சரத்தைப் பற்றி புகார் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, சன் டிவி தங்கள் நிறுவனத்திற்காக வாங்க நினைத்து நிராகரித்த கருவிகளை, கலைஞர் டிவிக்காக வாங்கிக்கொடுத்து ஏகப்பட்ட பணத்தை சரத்ரெட்டி அடித்துவிட்டார் என்று போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால், கலைஞர் டிவி தரப்பும் சரத்திடம் கோபமாக இருக்கிறதாம். இந்நிலையில் உள்ளே புகுந்த சகோதரர்கள் எவ்வளவு பணம் அடித்தாய், எங்கே வைத்திருக்கிறாய் என்று கேட்டு தாக்கினார்களாம். அடியாட்களெல்லாம் கிடையாது. அவர்களே.

 

கடைசியாக வந்த நம்ப முடியாத தகவல்: கலைஞர் டிவியையே மூடிவிடும் திட்டம் இருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை.

Next Page »