மதுரையில் கோவிலைச் சுற்றியிருக்கும் நான்கு சித்திரை வீதிகளில் மேற்குச் சித்திரை வீதியில் மட்டுமே கிடைக்கக்கூடிய அற்புதப் பண்டம்தான் இந்த பீம புஷ்டி அல்வா. இந்த அல்வா இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்: மஞ்சள், அரக்கு (மஞ்சள் அல்வாதான் சற்று நாள் சென்றவுடன் அரக்கு நிறத்திற்கு மாறுகிறது என்று சொல்பவர்களும் உண்டு). இந்த அல்வா எப்போதுமே தள்ளுவண்டியில் வைத்துத்தான் விற்கப்படும். அந்தத் தள்ளுவண்டியில் இருக்கும் ஒரு பெரிய தகர போர்டில் ஒரு ஆஜானுபாகுவான மனிதனின் (பெரும்பாலும் அது பீமனாகத்தான் இருக்க வேண்டும்) படம் வரையப்பட்டிருக்கும். அந்த மனிதனுக்கு அருகிலேயே மிகச் சிறிய மனிதர் ஒருவர் அந்த ஆஜானுபாகுவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். அல்வா சாப்பிட்டால் ஆஜானுபாகுவாகவும் சாப்பிடாதவர்கள் அந்த வேடிக்கை பார்க்கும் மனிதர்களைப் போல் அற்பமானவர்களாகவும் மாறிவிடுவார்கள் என்பதுதான் அந்த தகர போர்டின் தாத்பர்யம். இந்த போர்டு இரண்டே வண்ணங்களில் தீட்டப்பட்டிருக்கும்: நீலம், வெள்ளை. ஆஜானுபாகுவின் தலைக்கு மேலே பீம புஷ்டி அல்வா என்று எழுதப்பட்டிருக்கும். அந்த அல்வாக் கடையில் அல்வா குறைந்து நான் பார்த்ததேயில்லை. எப்போதாவது அப்பாவி சுற்றுலாப் பயணிகள் (பெரும்பாலும் முட்டாள் ஐயப்ப பக்தர்கள்) அதை வாங்குவதுண்டு. அந்த அல்வாவை வெட்ட, ஆடு வெட்டப் பயன்படும் கத்தியை வைத்திருப்பார் கடைக்காரர். ஐயப்ப பக்தர் அல்வா கேட்டவுடன் அந்த ஆடு வெட்டும் கத்தியை வைத்து, ஆட்டின் கழுத்தை அறுப்பதுபோல கரகரவென அறுத்து தராசில் போட்டு நிறுத்துத் தருவார். அல்வாவை வெட்டுக் காட்சிக்கே நாம் கொடுத்த காசு செல்லும். ஐயப்ப பக்தர் பரம ஆனந்தத்துடன் அந்த அல்வாவை வாங்கிச் செல்வார். இந்த பீம புஷ்டி அல்வாக் கடைகளில் கிடைக்கும் மற்றொரு பண்டம் பூந்தி. பிற கடைகளில் கிடைப்பதுபோல உதிரியாக இந்த பூந்தி இருக்காது. ஒரு சதுர வடிவ குன்று போல, அந்த பீம புஷ்டி அல்வாவுக்குப் பக்கத்தில் இந்த பூந்திக் குன்று நின்றுகொண்டிருக்கும். அல்வாவை வாங்கிய ஐயப்ப பக்தர் தவறிப் போய் இந்த பூந்திக்கும் ஆசைப்படக்கூடும். பூந்திக் குன்றை வெட்டுவதற்கு ஆடு வெட்டும் கத்தி பயன்படாது. அதனால், அதற்கென்று ஒரு குறுவாளை வைத்திருப்பார் கடைக்காரர். அந்த வாளினால் பூந்திக் குன்றை இடித்து, பூந்திகளை உதிரியாக்கி நிறுத்துத் தருவார். இந்த பூந்திக்கு பெயர் ஏதும் கிடையாது என்றாலும், பாறை பூந்தி என்று பரவலாக இதை அழைப்பார்கள். ஒரு முறை இந்தக் கடைகளில் பூந்தியையோ அல்வாவையோ வாங்கி அருந்தியவர்கள் பிறகு மதுரைக்கே வரமாட்டார்கள்.