தாய்லாந்தில் நடந்த ராணுவப் புரட்சி, மதுரை மத்தியத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவை பற்றி நம்முடைய வலைப்பதிவுக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி அளித்த பரபரப்பு பேட்டி:
கே: இவ்வளவு நாளாக ஆளையே காணவில்லையே. எங்கே போயிருந்தீர்கள்?
ப: தாய்லாந்திற்கு. அங்கே பிரதமர் தூக்கி எறியப்பட்டு, ராணுவமும் காவல்துறையும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அதை நடத்தியதே நான்தான்.
கே: அப்படியா?
ப: ஆமாம். தாய்லாந்த் மன்னர் பூமிபோல் அதுலியொதேஜ் என்னுடன் ஹார்ட்வர்டில் படித்தவர். தாய்லாந்தில் அதிகாரத்தைக் கைப்பற்றித் தரும்படி நீண்ட நாட்களாக கெஞ்சிக் கொண்டிருந்தார். அதைதான் இப்போது செய்திருக்கிறேன்.
கே: தாய்லாந்தில் ராணுவமும் காவல்துறையும் ஆட்சியை கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் உங்களுக்கு எப்படி பங்கிருக்கிறது?
ப: தாய்லாந்து ராணுவத்தின் தலைமை தளபதி சோந்தி பூனியாரத் கால்தான் தாய்லாந்து நாட்டின் ஜனதா கட்சித் தலைவர். அதனால்தான் அவரை வைத்துப் புரட்சியை நடத்தினேன்.
கே: இதனால் உங்களுக்கு என்ன லாபம்?
ப: தமிழக ஜனதா கட்சித் தலைவர் சந்திரலேகாவை தாய்லாந்து ராணுவத்தின் துணை தளபதியாக நியமிக்கவிருக்கிறார்கள். அதன் மூலம் நான் தாய்லாந்தை அமெரிக்கா போல் ஆக்கிக் காட்டுவேன்.
கே: இப்படிதான் மதுரைக்கு எம்.பியானால் மதுரையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சொன்னீர்கள்.
ப: சிங்கப்பூரை சிங்கப்பூர் ஆக்கவே 50 வருடங்கள் ஆனது. அதனால் பொறுமை அவசியம்.
கே: மதுரை மத்தியத் தொகுதி இடைத் தேர்தலில் ஜனதா கட்சி போட்டியிடுகிறதா?
ப: எங்கள் கட்சி வேட்பாளரே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
கே: அப்படி செய்ய அரசியல் சாஸனத்தில் இடம் இல்லையே?
ப: அரசியல் சாஸனத்தை எழுதியவர்கள் அதற்கு ஒரு விதியை சேர்த்திருந்தார்கள். அதை சோனியாவும் ராகுலும் சேர்ந்து அழித்து விட்டார்கள். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.
கே: அப்படியே வழி இருந்தாலும் தி.மு.க போன்ற கட்சிகள் இதை ஆட்சேபிக்காதா?
ப: கருணாநிதியைப் பற்றி எனக்குத் தெரியாதா? பின் லேடனை கோபாலபுரத்தில்தான் ஒளித்து வைத்திருக்கிறார் கருணாநிதி. பின் லேடன் சொல்லிதான் மத்தியத் தொகுதியில் கவுஸ் பாட்ஷாவிற்கு சீட் கொடுத்திருக்கிறார்கள். இதை மத்திய மக்களிடம் அம்பலப்படுத்துவேன்.
கே: உங்கள் கட்சி மத்திய தொகுதியில் ஜெயித்தால் என்ன செய்வீர்கள்?
ப: நான் முதல்வராகிவிடுவேன். இப்போதே பல கட்சிகளையும் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் என்னை முதல்வராக்க கையெழுத்திட்டுக் கொடுத்த பத்திரங்கள் என்னிடம் இருக்கின்றன. போனால் போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறேன்.