வடக்கு மாசி வீதியின் வாசகர்களில் எத்தனை பேர் ஜனவரி 1ந் தேதியன்று உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி அவர்களை நோகடித்தீர்கள் என்று தெரியாது. மற்றவர்களோடு ஒப்பிட்டால் எனக்கு மிகக் குறைவாகவே வாழ்த்து அழைப்புகள் வந்தன. அன்று மதியம் வரை என் கைபேசியை நான் அணைத்து வைத்திருந்தது இதற்கு முக்கியமான காரணம். என் உறவினர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, Happy New Year! என்றார். நான் “புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றேன் பதிலுக்கு. இதென்ன தமிழில் சொல்கிறீர்கள் என்று சண்டைக்கு வந்தார் அவர். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. வாழ்த்துக்களை எல்லாம் ஆங்கிலத்தில்தான் சொல்ல வேண்டும் என்பது இங்கே மரபாகிப் போய்விட்டது. இதனால் பல விபத்துகளும் நேரிட்டுவிடுகின்றன.
என் நண்பன் ஓருவன் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மிகுந்த ஆர்வமுடையவன். சென்னையில் இளைஞர்கள் எல்லாம் புத்தாண்டு இரவன்று கடற்கரையில் கூடுவதுபோல, மதுரை மாசிவீதிகளில் வசிக்கும் இளைஞர்கள் மேல மாசிவீதியில் இருக்கும் ஆர்யபவன் உணவத்தின் அருகில் கூடுவது வழக்கம். அதற்கு அருகில் ஏகப்பட்ட மதுபானக் கடைகள் இருப்பதுதான் இதற்குக் காரணம். என் நண்பனும் வருடம் தவறாமல் ஆர்யபவன் அருகில் ஆஜராகி, எல்லோரோடும் சேர்ந்து குடித்துவிட்டு, “Happy New Year” என்று தொண்டைகிழிய கத்திவிட்டு, அதிகாலை மூன்று மணிக்கு படுத்து, அடுத்த நாள் பிற்பகல் 3 மணிக்கு எழுந்து தலைவலியோடு ஜனவரி 1ந் தேதியைக் கழிப்பது வழக்கம். இது கடந்த பத்து – பதினைந்து ஆண்டுகளாக நடந்துவரும் நிகழ்வு.
தொடர்ந்து ஜனவரி 1ந் தேதியன்று “Happy New Year” என்று சொல்லிப் பழகிவிட்டதால், அவன் புத்தாண்டு தினத்தையே ஹேப்பி நியூ இயர் என்றுதான் சொல்ல வேண்டும் என்று நினைத்துவிட்டான். அதனால், “போன ஹேப்பி நியூ இயர் அன்னைக்கு படத்துக்குப் போனப்ப…”, “அடுத்த ஹேப்பி நியூ இயரையாவது நல்லா கொண்டாடனும்டா” என எப்போதும் “நியூ இயர்” என்பதை “ஹேப்பி” என்ற வார்த்தையுடன் சேர்த்துத்தான் சொல்லுவான். அதனால் பிற நண்பர்கள் எல்லாம், “போன ஹேப்பி தீபாவளியன்னைக்கு”, “வர்ற ஹேப்பி அம்மாவாசையன்னைக்கு” என்று என் நண்பனை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். இருந்தும் நண்பனுக்குப் புரிந்தபாடில்லை.
January 11, 2007 at 2:05 pm
HAI HAPPY NEW YEAR2007
January 11, 2007 at 2:05 pm
hai
January 12, 2007 at 2:43 am
happy blogging:)