தமிழக தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி வருடம்தோறும் நடந்துவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த வருடம் நடத்தலாம் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. இதற்குப் பல நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. சமீபத்தில் சென்னைக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பால் மிகுந்த வேதனையுற்றேன். இந்தத் தீர்ப்பு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் எதிரானது. ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்களும் ஓட்டுக்காக அரசியல்வாதிகளும்தான் ஜல்லிக்கட்டு வேண்டுமென்று விரும்புகின்றனர். உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்’ என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். சமீபகாலமாக மீடியாக்களிலும் இதுபற்றிய விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்துவதினால், மாடுகளுக்குக் கொடுமை இழைக்கப்படுகிறது; மாடுபிடி வீரர்கள் சாகிறார்கள் என்ற வாதங்கள் ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களால் முன்வைக்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பை பல வருடங்கள் நேரில் கவனித்திருக்கிறேன். அந்த மாட்டை வளர்க்கும் ஒவ்வொரும் அதைத் தங்கள் உயிராக நினைத்துத்தான் வளர்க்கிறார்கள். அதை பிறர் நெருங்கக்கூட விடமாட்டார்கள். ஏன், பிறரைப் பார்க்கக்கூட விடமாட்டார்கள். எல்லாம் ஜல்லிக்கட்டு என்ற அந்த ஒரு நாளுக்காகத்தான். இதில் அந்தக் காளை களத்தில் நிற்பது 30 வினாடிகள்கூட இருக்காது. அதற்குள் அந்த மாட்டை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் மாடு வென்றதாக அறிவிக்கப்படும். மாடு வளர்த்தவருக்கு சைக்கிள், கட்டில், சில்வர் குடம் போன்ற ஏதாவது பரிசு கிடைக்கும். இந்தப் பரிசி்ன் மதிப்பு, மாட்டின் ஒரு மாதச் செலவுக்குக்கூட காணாது. ஆனால், மாடு வளர்ப்பவர் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இந்த வெற்றியை வருடம் முழுக்கக் கொண்டாடிக் கொண்டிருப்பார். மாட்டுக்கு சாராயம் புகட்டுவது, கண்ணில் எலுமிச்சம் பழத்தைப் பிழிவது, மூக்குப் பொடி போடுவது என்பதெல்லாம் வெகு அரிதான சமாச்சாரங்கள். சினிமாவில் இம்மாதிரி காட்சிகளைப் பார்த்துவிட்டு, ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்கள் எல்லோரும் மாடுகளை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று குரல் கொடுப்பது மேட்டுக்குடித் திமிர்.
அதேபோல, மாடுபிடிக்க களத்தில் இறங்கி உயிர்துறப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வேடிக்கை பார்க்கப் போய், தாறுமாறாக மாட்டின் முன் விழுந்து காயம் படுபவர்கள்தான் அதிகம். இந்நிலையில், வேடிக்கை பார்க்க வருபவர்களை முறைப்படுத்த வேண்டும்; நல்ல மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம். அதைவிட்டுவிட்டு, இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது நியாயமாகாது.
இந்த விவாதத்திற்குள் இறங்குவதற்கு முன், ஒருமுறையாவது ஜல்லிக்கட்டை நேரில் காணவேண்டும். முரட்டுக்காளை படத்தைப் பார்த்துவிட்டெல்லாம் ஜல்லிக்கட்டைப் பற்றிக் கருத்துச் சொல்லக்கூடாது. குறைந்தது, செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலையாவது படிக்க வேண்டும். இன்னும் பலர் மஞ்சுவிரட்டு, எருதுகட்டு, ஜல்லிக்கட்டு ஆகிய எல்லாம் ஒன்று என நினைத்துக் கொண்டு விவாதத்தில் இறங்கி காதைப் புண்ணாக்குகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத ஐடி கூலித் தொழிலாளர்கள் ஏசி அறைக்குள் இருந்துகொண்டு இதுபற்றியெல்லாம் கருத்துச் சொல்வதுதான் இருப்பதிலேயே வேடிக்கை. வாழ்வின் எல்லா வசதிகளும் கிடைத்தவுடன் யாரையாவது திருத்தி நல்வழிப் படுத்த வேண்டுமென்று தோன்றுகிறது, பாவம். குழந்தைத் திருமணம், சதி போன்ற சமூகத் தீமைகள் இல்லாத காலகட்டம். சரி, ஜல்லிக்கட்டு விளையாடும் கற்கால மனிதர்களையாவது திருத்துவோம் என்று களத்தில் இறங்கிவி்டுகிறர்கள். எல்லாம் தலையெழுத்து.
இப்படி மனிதர்களைப் பற்றி அக்கறையோடு குமுறித்தள்ளும் மேனகா காந்தி, குஜராத்தில் அவருக்கு மந்திரி பதவி கொடுத்த பா.ஜ.க. முஸ்லிம்களை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தபோது கிளிக்கு தலைசீவி விட்டுக்கொண்டிருந்தாரா? இத்தனை நூற்றாண்டு ஜல்லிக்கட்டில் இறந்தவர்களைவிட, குஜராத் கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். பா.ஜ.க.வையும் ஆர்.எஸ்.எஸையும் கலைக்கச்சொல்வாரா மேனகா? மாட்டார். பிறகு யார் மந்திரி பதவி கொடுப்பார்கள்?
January 12, 2007 at 1:39 am
உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்’ என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்”
There is no appeal to Madras from Madurai. Madurai Bench is only a part of Madras High Court. An appeal can be preferred only to the Supreme Court of India, New Delhi
January 12, 2007 at 2:42 am
நீங்க ஜல்லிக்கட்டு காளைய அடக்கியிருக்கீங்களா?
January 12, 2007 at 4:28 pm
நீங்கள் சொல்வது சரி பிரபு. ஆனால், மேனகா அப்படித்தான் சொல்லியிருக்கிறார். ஏதோ ஒரு ஆவேசத்தில் அப்படிச் சொல்லிவிட்டார் பாவம்.
January 12, 2007 at 4:30 pm
ரசிகருங்கோவுக்கு எனது பதில்:
நான் களத்தில் இருப்பதைப் பார்த்தாலே காளைகள் பயத்தில் மிரண்டுபோய் வாடிவாசலைவிட்டு நகர மறுக்கின்றன. அதனால், அலங்காநல்லூர், பாலமேடு பஞ்சாயத்துத் தலைவர்கள் என்னைச் சந்தித்து, நான் அங்கே மாடுபிடிக்க இறங்கக்கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்கள். அந்தச் சத்தியத்தை இன்றளவும் காப்பாற்றி வருகிறேன்.
January 13, 2007 at 2:52 pm
காரமாக இருக்கிறது. இந்த வருட ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் சரக்கு/மருந்து சோதனை நடப்பது நல்ல வேடிக்கை.
ஜல்லிக்கட்டுக்கு லைவ் கவரேஜ் கொடுக்கும் ஐடியா ஏன் எந்த சானலுக்கும் தோன்றவில்லை?
பஞ்சாயத்துத் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றுத் தாங்கள் மாடுகளுக்கு உயிர்ப் பிச்சை அளித்தமை தங்களது மிருகாபிமானத்தைக் காட்டுகிறது. ஆக்ச்சுவலி, மேனகா காந்தியின் இடத்தில் இருக்க வேண்டியவர் தாங்களே.