இந்தக் கதைகளின் நாயகனின் கற்பனைப் பெயர் அம்பி. எம்சிஏ பட்டதாரி. கதைகளைப் படித்துவிட்டு, இதெல்லாம் புருடா என்று சொல்லக்கூடாது. நிஜமாகவே அம்பி நடத்திய திருவிளையாடல்கள்தான் இவை. இந்தக் கதைகள் எல்லாம், ‘என்றாரே பார்க்கலாம்!’ என்று முடியும். கி.வா.ஜவின் சிலேடைத் தொகுப்புகளைப் படித்ததன் விளைவு அது.
                                                   *****
ஒரு முறை அம்பி நண்பர்களுடன் ஒரு பெரிய ஹோட்டலுக்குச் சென்றான். சாப்பிட்டு முடித்தவுடன் கைகழுவுவதற்கான கிண்ணத்தைக் கொண்டுவந்து வைத்தார்கள். அதில் எலுமிச்சம்பழத் துண்டுகள் மிதப்பதைப் பார்த்த அம்பி, ‘சார் நான் லெமன் ஜூஸ் கேக்கவேயில்லையே’ என்றானே பார்க்கலாம்!
                                                                *****
அம்பி நண்பர்களுடன் ஒரு அசைவ உணவு விடுதிக்குச் சென்றான். கூட வந்த சிலர் சிக்கன் 65 ஆர்டர் செய்ததைப் பார்த்து, அம்பியும் அதை ஆர்டர் செய்தான். சிக்கன் வந்து சேர்ந்தது. அம்பிக்கு வந்ததே கோபம். ‘ஹலோ, நான் கோழிக்கறிக் கேக்கல. சிக்கன் 65 கேட்டேன். அதைக் கொண்டுவாங்க’ என்றானே பார்க்கலாம்!
                                                                     *****
அம்பி ஒரு முறை என் நண்பனின் வீட்டிற்கு வந்தான். நண்பனின் தாயார் எல்லோருக்கும் அன்னாசிப் பழரசம் கொடுத்தார். ‘இது என்ன ஜூஸ்டா மாப்ள’ என்று என் நண்பனிடம் கேட்டான் அம்பி. பைன்ஆப்பிள் என்று பதிலளித்தான் நண்பன். ‘என்னடா புதுசா இருக்கு. ஆப்பிளப் போட்டு, எப்படி பைன் பண்ணுவீங்க’ என்றானே பார்க்கலாம்!
                                                                         *****
ஒருமுறை எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது, சென்னையிலிருந்து அப்போதுதான் மதுரைக்கு வந்து சேர்ந்திருந்த ஓரு நண்பனும் எங்கள் கூட்டத்தில் ஐக்கியமானான். ‘வீட்டுல அவசரமா வரச்சொன்னாய்ங்க. அதுனால ஃப்ளைட்டப் புடுச்சு வந்தேன்’ என்றான் அவன். அம்பி கொதித்துப் போனான். ‘டேய், உங்கிட்ட பாஸ்போர்ட்டே இல்ல. எப்பிடிடா ஃப்ளைட்ட வந்த?’ என்றானே பார்க்கலாம்!