இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட எல்லாச் சட்டங்களையும் மறு ஆய்வு செய்யும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு என ஜனவரி 11ந் தேதி தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஒன்று. மத்திய, மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் பொதுவாக நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டவை. அரசியல் சாஸனம் மக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை எந்தச் சட்டமாவது மீறும் என்று நீதிமன்றம் நினைத்தால் அந்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் அதற்கு உண்டு.

1951ல் நிலச் சீர்திருத்தம் பற்றி ஜவஹர்லால் நேரு கொண்டுவந்த ஒரு சட்டம், அரசியல் சாஸனம் வழங்கிய சில உரிமைகளில் குறுக்கிட்டது. நீதிமன்றத்தின் தலையீட்டிலிருந்து சட்டத்தைக் காப்பாற்ற நினைத்த நேரு, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 9வது அட்டவணை என்ற ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த அட்டவணையின் கீழ் இயற்றப்படும் சட்டங்கள் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படாது. இதைத் தொடர்ந்து பல சட்டங்கள் அந்தப் பிரிவின் கீழ் இயற்றப்பட்டன. அப்படி ஒரு சட்டம்தான் தமிழக அரசு இயற்றிய இடஒதுக்கீட்டுச் சட்டம்.

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தன் ஒரு தீர்ப்பில் அறிவித்ததையடுத்து, இந்த 9வது அட்டவணையின் கீழ் தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவந்தது தமிழக அரசு. இதையொட்டி, 9வது அட்டவணையின் கீழ் உருவாக்கப்படும் சட்டங்களையும் நீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் என தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிருக்கிறது நீதிமன்றம்.

இனி என்ன நடக்குமென்பது தெரிந்தகதைதான். முந்தைய தீர்ப்பைச் சுட்டிக்காட்டி 69 சதவீத இடஒதுக்கீடு ரத்துச் செய்யப்படும். மக்களின் அடிப்படை உரிமையில் இது குறுக்கிட்டது என்று காரணம் வேறு சொல்வார்கள்.  இவர்களின் நீதியைக் கேட்டால் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இதற்கு முன் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டபோதெல்லாம் இவர்கள் நடந்த கொண்ட விதத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்.

அரசியல் சாஸனத்தின் 21வது பிரிவு சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை இந்திய மக்களுக்கு வழங்குகிறது. வாழ்வதற்கான உரிமை, தனிநபர் சுதந்திரம், நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமை ஆகியவற்றையும் இந்தப் பிரிவுதான் மக்களுக்கு வழங்குகிகது. 1975ல் இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்தபோது, இந்த 21வது பிரிவையும் முடக்கி உத்தரவிட்டார் நமது குடியரசுத் தலைவர். அந்த சமயத்தில் உள்நாட்டு பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியாத நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் சார்பாக ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை 5 மூத்த நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. 21வது பிரிவு முடக்கப்பட்டுவிட்டதால், அதன் அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று வாதிட்டது அரசு. மக்களின் அடிப்படை உரிமை முடக்கப்பட்டிருப்பதை கண்டு இந்த மூத்த நீதிபதிகள் கொதித்திருக்க வேண்டும். செய்யவில்லை. 5 பேரில் நான்கு பேர் அரசுக்குச் சாதகமாகவே தீர்ப்பெழுதினார்கள். நீதியரசர் கண்ணா மட்டுமே அரசுக்கு எதிராக தீர்ப்பை எழுதினார். 69 சதவீத இடஒதுக்கீட்டினால் பாதிக்கப்படும் அடிப்படை உரிமையைவிட, நெருக்கடி நிலை கால அட்டூழியங்களினால், மிசாவினால் பாதிக்கப்பட்டது அதிகம். ஆனால் நம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேறுவிதமாகவே செயல்பட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதுதான் இதையெல்லாம் சரிசெய்யும் என்று தோன்றுகிறது.