இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட எல்லாச் சட்டங்களையும் மறு ஆய்வு செய்யும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு என ஜனவரி 11ந் தேதி தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஒன்று. மத்திய, மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் பொதுவாக நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டவை. அரசியல் சாஸனம் மக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை எந்தச் சட்டமாவது மீறும் என்று நீதிமன்றம் நினைத்தால் அந்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் அதற்கு உண்டு.
1951ல் நிலச் சீர்திருத்தம் பற்றி ஜவஹர்லால் நேரு கொண்டுவந்த ஒரு சட்டம், அரசியல் சாஸனம் வழங்கிய சில உரிமைகளில் குறுக்கிட்டது. நீதிமன்றத்தின் தலையீட்டிலிருந்து சட்டத்தைக் காப்பாற்ற நினைத்த நேரு, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 9வது அட்டவணை என்ற ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த அட்டவணையின் கீழ் இயற்றப்படும் சட்டங்கள் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படாது. இதைத் தொடர்ந்து பல சட்டங்கள் அந்தப் பிரிவின் கீழ் இயற்றப்பட்டன. அப்படி ஒரு சட்டம்தான் தமிழக அரசு இயற்றிய இடஒதுக்கீட்டுச் சட்டம்.
50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தன் ஒரு தீர்ப்பில் அறிவித்ததையடுத்து, இந்த 9வது அட்டவணையின் கீழ் தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவந்தது தமிழக அரசு. இதையொட்டி, 9வது அட்டவணையின் கீழ் உருவாக்கப்படும் சட்டங்களையும் நீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் என தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிருக்கிறது நீதிமன்றம்.
இனி என்ன நடக்குமென்பது தெரிந்தகதைதான். முந்தைய தீர்ப்பைச் சுட்டிக்காட்டி 69 சதவீத இடஒதுக்கீடு ரத்துச் செய்யப்படும். மக்களின் அடிப்படை உரிமையில் இது குறுக்கிட்டது என்று காரணம் வேறு சொல்வார்கள். இவர்களின் நீதியைக் கேட்டால் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இதற்கு முன் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டபோதெல்லாம் இவர்கள் நடந்த கொண்ட விதத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்.
அரசியல் சாஸனத்தின் 21வது பிரிவு சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை இந்திய மக்களுக்கு வழங்குகிறது. வாழ்வதற்கான உரிமை, தனிநபர் சுதந்திரம், நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமை ஆகியவற்றையும் இந்தப் பிரிவுதான் மக்களுக்கு வழங்குகிகது. 1975ல் இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்தபோது, இந்த 21வது பிரிவையும் முடக்கி உத்தரவிட்டார் நமது குடியரசுத் தலைவர். அந்த சமயத்தில் உள்நாட்டு பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியாத நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் சார்பாக ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை 5 மூத்த நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. 21வது பிரிவு முடக்கப்பட்டுவிட்டதால், அதன் அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று வாதிட்டது அரசு. மக்களின் அடிப்படை உரிமை முடக்கப்பட்டிருப்பதை கண்டு இந்த மூத்த நீதிபதிகள் கொதித்திருக்க வேண்டும். செய்யவில்லை. 5 பேரில் நான்கு பேர் அரசுக்குச் சாதகமாகவே தீர்ப்பெழுதினார்கள். நீதியரசர் கண்ணா மட்டுமே அரசுக்கு எதிராக தீர்ப்பை எழுதினார். 69 சதவீத இடஒதுக்கீட்டினால் பாதிக்கப்படும் அடிப்படை உரிமையைவிட, நெருக்கடி நிலை கால அட்டூழியங்களினால், மிசாவினால் பாதிக்கப்பட்டது அதிகம். ஆனால் நம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேறுவிதமாகவே செயல்பட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதுதான் இதையெல்லாம் சரிசெய்யும் என்று தோன்றுகிறது.
January 16, 2007 at 10:48 am
நான் ஒரு நல்ல வலைப்பூவைக் கண்டறிந்த திருப்தியில் இப்பொழுது இருக்கிறேன். என்னுடைய வலைப்பூக்களில் நான் தொடாத விஷயங்களை நீங்கள் விலாவாரியாகப் படித்து ஆழமாகவே எழுதுகிறீர்கள். மிகக் குறைவாகவே படிக்கும் நான், தமிழை மறக்காவல் இருப்பதற்காகவே http://booksread.wordpress.com என்ற வலைப்பூவும், எனக்கு சோறு போடும், நான் அதிகம் ரசிக்கும் என் கணிப்பொறி பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ள http://cutecomputer.wordpress.com என்ற வலைப்பூவும் எழுதுகிறேன். உங்களின் பதிவுகள் அடித்தட்டு மக்களின் உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!
January 17, 2007 at 9:14 am
நீங்கள் இது குறித்து நிறைய எழுதுங்கள். மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்ட போது, எங்கள் கல்லூரி மாணவர்கள் (செய்யாறு அரசுக் கல்லூரி) எழுப்பிய முழக்கம் நினைவுக்கு வருகிறது: உச்ச நீதி மன்றமா, உச்சி குடுமி மன்றமா;நீதி மன்றமா, மேல் சாதி மன்றமா…இப்படி.
விஷயம் என்னவென்றால் நம் திருநாட்டில் மக்கள் உரிமை, சிவில் சொசைட்டி, சமூகம், பொது மக்கள், வெகுஜனம், குடிமக்கள் ஆகிய எல்லா ஜனநாயக மரபுச் சொற்களும் ஏற்கனவே மீடியாவால் மறுவரையறைச் செய்யப்பட்டுவிட்டது. உதாரணங்கள்: தேசிய மீடியாவில் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் இதை நீங்கள் பார்க்கலாம். இந்த வேலை நிறுத்தம் பொது மக்களை பாதிக்கிறது என்று சொல்லும்போது அதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
எப்படி ஜனநாயகம், சுதந்தரம், சந்தை போன்ற வார்த்தைகளை அமெரிக்கர்கள் ஸ்வாஹா பண்ணிவிட்டார்களோ, அது போலத்தான் இதுவும்.
மீடியா உருவாக்கியிருக்கும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் நீதிபதிகள் எதை வேண்டுமானாலும் செய்யத்தயாராக இருப்பார்கள்.
நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு கேட்டு போராடுவது தேவைதான். அதைப் போலவே பொதுமக்களால் வாங்கப்படும் அல்லது பார்க்கப்படும் மீடியாக்களில் அஜெண்டா செட் செய்கிறவர்களின் பின்புலத்தை சந்திக்கு கொண்டுவருவதும் தேவை. நிறவெறி பிடித்த அமெரிக்காவிலேயே இதுபோன்ற தேவைகளை உணர்ந்திருக்கிறார்கள். இந்தியாவில் இதைப் பற்றி பேசக்கூட முடியாது. பேசினாலும் யார் ரிப்போர்ட் செய்வார்கள்?
January 20, 2007 at 6:24 pm
நன்றி சுவாமி. செந்திலுக்கு விரிவாக பதில் எழுத வேண்டும்.
January 31, 2007 at 1:24 pm
இந்தப் பதிவை இப்போதுதான் முழுமையாகப் படித்தேன். நீதித் துறையின் உயர் மட்டத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்று அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நீதித் துறையின் உயர் பொறுப்புகளில் இருந்தால்தான் இது போன்ற அராஜகங்களைத் தடுக்க முடியும். செந்தில் சொன்னதை வழிமொழிகிறேன்.
June 13, 2008 at 6:50 am
இந்தி சாதிகளுக்கு இடஒதுக்கீடு தரும் ‘தமிழ்’நாடு
தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாம வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.
நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.
இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm
தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.
தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.
கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.
எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.
சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.
தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.
இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.
கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.
தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?