இரு வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியின் நீயா, நானா நிகழ்ச்சியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு இதுதான்:  சிவப்பாக இருப்பவர்கள் சமூகத்தில் அதிக மதிப்புப் பெறுகிறார்களா? தன்னுணர்ச்சி மிக்க யாருக்கும் அன்றைய விவாதம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். சிவப்பாக இருப்பவர்களுக்கு அதிக மதிப்பு இருக்கிறது என்று பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் சிவந்த நிறமுடையவர்கள். சிவந்த நிறமுடையவர்களுக்கு அதிக மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற தொனியிலேயே எல்லோரும் பேசினார்கள். அவர்களிடமிருந்து வெளிவந்த அகங்காரமும் திமிரும் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தன. அப்படி மதிப்பு ஏதும் கிடையாது என்று வாதிட்டவர்களின் வாதம் மிகப் பரிதாபமாக இருந்தது. தங்கள் நிலைக்குத் தாங்களே வெட்கப்படுவது போலவே பெரும்பாலானவர்கள் பேசினார்கள்.

நிறவெறி என்பது ஏதோ அமெரிக்க, ஐரோப்பிய சமாச்சாரம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்திருக்க வேண்டும். உண்மையில் நம்முடைய நிறம் குறித்த பிரக்ஞை நமக்குள் ஊறிப்போயிருக்கிறது. சிவந்த நிறமுடையவர்களுக்கு பெருமிதத்தையும் கறுப்பாக இருப்பவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையையும் நம் சமூகமே ஏற்படுத்திவிடுகிறது.  இதில் டிவி விளம்பரங்களின் பங்கு மிகக் கணிசமானது. சற்று மாநிறமுள்ள பெண்ணுக்கு கல்யாணமே ஆகாதது போலவும், அவர் ஒரு க்ரீமைப் பயன்படுத்தி சிவந்த நிறம் பெற்றதும் கல்யாணம் நடப்பதுபோலவும் எத்தனை விளம்பரங்களில் காட்டப்பட்டுவிட்டன. நமக்கு சொரணை என்ற ஒன்று இருந்திருந்தால் இந்த விளம்பரங்களை எதிர்த்திருப்போம் இல்லையா?

சுமார் 80 சதவீத மக்கள் கறுப்பான மேனியுடையவர்களாக இருக்கும் ஒரு மாநிலத்தில் – சென்னைக்காரர்கள் கவனமாகப் படிக்கவும். மாநிலம் என்பது தமிழ்நாட்டைக் குறிக்கிறது. வெறும் சென்னையை மட்டுமல்ல – நீங்கள் சிவந்த நிறம் பெற வேண்டுமா என்று விளம்பரம் செய்வது எவ்வளவு பெரிய வன்முறை?

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பிரதேசங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இயல்பாகவே கறுப்பு நிறம் உண்டு. சூரியக் கதிர்களால ஏற்படும் தோல்புற்று நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க இயற்கையே தந்த ஏற்பாடு இது. இப்போதும் சிவந்த நிறமுடையவர்களே தோல்நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இருந்தும் கறுப்பாயிருப்பவர்களின் தாழ்வு மனப்பான்மையும் சிவந்த நிறமுடையவர்களின் திமிரும் சேர்ந்து, சிவந்த நிறமே உயர்வானது என்ற பரவலான கருத்தை உருவாக்கியிருக்கிறது.