வடக்கு மாசி வீதியில் மாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வலம் வருவது பழுக்குகள்தான். 10 முதல் 16 வயதுள்ள, வீட்டுக்கு அடங்காத, சாலையில் செல்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சிறுவர்களுக்குத்தான் பழுக்குகள் என்று பெயர். தனி ஒரு பழுக்கையே சமாளிப்பது கடினமான காரியம். அதில் எல்லாப் பழுக்குகளும் ஒன்றுகூடினார்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
இந்தப் பழுக்குகள் ஒன்றுகூடி விளையாடும் ஒரு விளையாட்டு, பர்ஸ் விளையாட்டு. ரூ. 15 – 20 மதிப்பில் பளபளப்பான ஒரு பர்ஸை வாங்கிவந்து, அதற்குள் பணம் இருப்பதைப்போல காகிதத்தைத் தினித்து சாலையில் வெளிச்சம் இருக்கும் இடத்தில் போட்டுவிடுவார்கள். அந்த பக்கமாக வரும் இருசக்கர வாகன ஒட்டிகள், பாதசாரிகள் அந்தப் பர்சைப் பார்க்காமல் போகவே முடியாது. பத்துப் பேரின் பார்வை அதன் மேல் பட்டால், ஓருவராவது அந்தப் பர்ஸை கையில் எடுத்துவிடுவார். அவ்வளவுதான்.
எங்கேயோ ஒளிந்துகொண்டிருக்கும் பழுக்குகள் அந்த நபரைச் சுற்றி வளைத்துவிடுவார்கள். “ஏய்யா ஒரு பர்ஸ் ரோட்ல கிடந்தா உடனே எடுத்துருவியா. ஏ இங்க பார்றா அண்ணனுக்கு ஆசைய..” என்று கத்தி, ஊரைக்கூட்டி மானத்தை வாங்கிவிடுவார்கள். பர்ஸ் பறிமுதல் செய்யப்படும். கூனிக்குறுகிப்போகும் அந்த நபர், பிறகு வடக்குமாசிவீதியில் தலையைக் காட்டவே அஞ்சுவார். மறுபடியும் பர்சை அதே இடத்தில் போட்டுவிட்டு, பழுக்குகள் ஒளிந்துகொள்வார்கள். எப்படியும் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து நபர்களாவது ப்ர்ஸை எடுத்து அவமானப்படுவார்கள்.
வடக்குமாசி வீதியி்ன் பெரியவர்களும் இந்த விளையாட்டை ஆர்வத்துடன் கவனிப்பது உண்டு. ‘எவன்கிட்டயாவது நல்ல அடி வாங்குனாத்தான்டா உங்களுக்கு புத்திவரும்’ என்று சொல்லிக்கொண்டே இந்த விளையாட்டை ரசிப்பார்கள் (அடுத்தவர் வம்புச் சண்டைக்குப் போகும்போது வேடிக்கை பார்ப்பது, அடுத்தவர் அடிவாங்கும் போது ரசிப்பது ஆகியவை வடக்குமாசி வீதியின் தேசிய குணம்).
ஆனால், இந்தப் பர்ஸ் விளையாட்டு தற்போது அழிந்துவிட்டதுதான் சோகம். இரண்டு சம்பவங்கள் அதற்குக் காரணமாக அமைந்தன. ஒரு முறை பர்சை ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி எடுத்தார். பழுக்குகள் வழக்கம்போல, பர்சைக் கேட்க, ‘போங்கடா எடுவட்ட பயலுகளா, இப்பத்தான் 20 ரூவா குடுத்து வாங்கீட்டு வாரேன், கீழ கெடந்து எடுத்ததுதனா சொல்றீங்க? விளக்கமாறு பிஞ்சுபோகும்’ என்று பழுக்குகளை கட்டி ஏற ஆரம்பித்துவிட்டார்.
பழுக்குகள் மிரண்டுபோனார்கள். இதுவரை இப்படி நடந்ததே இல்லை. அந்தப் பெண்மணியிடம் சாம, தான, பேத, தண்ட முறைகளையெல்லாம் பிரயோகித்துப் பார்த்தும் பிரயோஜனமில்லை. அந்தப் பெண்மணி பர்ஸ் தன்னுடையதுதான் என்று சாதித்துவிட்டார். பர்சோடு சென்றும் விட்டார்.இருபது ரூபாய் நஷ்டம். அடுத்த சில நாட்கள் இந்த விளையாட்டு நடக்கவில்லை. புதிதாக பர்ஸ் வாங்க யாரிடமும் காசு இல்லை. வெகுநாட்களுக்குப் பிறகு, எப்படியோ காசு திரட்டி மற்றோரு பர்ஸ் வாங்கிவரப்பட்டது. விளையாட்டு ஆரம்பித்தது. முதல் நபர் வழக்கம்போல அவமானப்படுத்தப்பட்டு, துரத்தப்பட்டார்.
அடுத்த நபர் சைக்கிளில் வந்தார். சைக்கிளை நிறுத்தி பதறாமல் அந்த பர்சை எடுத்தார். பழுக்குகள் வழக்கம்போல அவரைச் சுற்றி வளைத்து, காரியத்தை ஆரம்பித்தனர். சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த நபர், ஒரு பழுக்கின் சட்டைப் பிடித்தார். ‘பொளேர்’ என ஒரு அறைவிட்டார். அடுத்ததாக, சைக்கிளில் இருந்து லத்தியை உருவினார். அப்போதுதான் பழுக்குகளுக்கு விபரீதம் புரிந்தது. அந்த நபர் ஒரு போலீஸ்காரர். திசைக்கு ஒருவராக சிதறி ஓடினார்கள் பழுக்குகள். புதிதாக பர்ஸ் வாங்கிய அன்றே பறிபோன அதிர்ச்சியிலிருந்தும் அடியிலிருந்தும் பழுக்குகளால் மீள முடியவேயில்லை. அந்த விளையாட்டு அன்றோடு முடிந்துபோனது.
February 16, 2007 at 3:10 pm
இலேரியசு! நான் கூட ஒரு நிமிசம் கிரிக்கெட்தான் கில்லியையும் கபடியையும் ஒழித்தது போல் இந்த விளையாட்டையும் இல்லாமலாக்கிவிட்டதோ என்று நினைத்துவிட்டேன்.
February 16, 2007 at 8:13 pm
—இலேரியசு! —
மறுமொழி கூட டச்சிங்
February 18, 2007 at 4:23 am
பழுக்குகளின் தலைவன் நீர்தான் என்று கேள்விப்படுகிறோம்.
அடியும் வாங்கியது நீர்தானாமே.
இப்போதாவது திருந்தீனீரா ஓய்.
February 18, 2007 at 6:25 pm
i am in வடக்கு மாசி வீதி area
February 19, 2007 at 12:28 pm
செந்தில், வடக்கு மாசி வீதியின் எந்தப் பகுதியில் இருக்கிறீர்கள்? ராமாயணச் சாவடியிலிருந்து மேல மாசி வீதி வரை செல்லும் பகுதியிலா, அல்லது ராமாயணச் சாவடியிலிருந்து கீழ மாசி வீதி செல்லும் பகுதியிலா?
February 20, 2007 at 4:00 am
பாராட்டுகளுக்கு நன்றி பாலாஜி.
February 20, 2007 at 4:02 am
நான் பழுக்குகளின் முன்னாள் தலைவர். இப்போதாவது திருந்தினானா என்பது என்ன கேள்வி? என்ன தவறு செய்துவிட்டோம் திருந்த? இப்போதும் வாய்ப்புக் கிடைத்தால் பர்ஸ் ஆட்டம் ஆட ரெடி.
February 20, 2007 at 4:35 am
ராமாயணச் சாவடியிலிருந்து simmakkal செல்லும் பகுதி
February 22, 2007 at 9:50 am
அந்த பழுக்கு விளையாட்டின் நவீன வடிவம் தான் இன்றைய தொலைக்காட்சிகளில் வரும் CANDID CAMERA PROGRAM என்று தோன்றுகிறது.
February 22, 2007 at 10:41 am
ரொம்ப சரி. அதை பழுக்கு விளையாட்டு என்று அழைக்கக் கூடாது. பழுக்கு என்பது நாங்கள்தான்.
February 25, 2007 at 7:52 pm
ஆஹா சூப்பர்…
Surya
Dubai
butterflysurya@gmail.com
February 26, 2007 at 6:26 pm
சூப்பர் சூர்யாவுக்கு நன்றி.
August 25, 2007 at 12:58 pm
நல்லவேளை ரொம்ப வருஷமா அந்தப் பக்கம் வரவேயில்லை. இன்னைக்கித்தான் (25.8.07)கிருஷ்ணன் கோவில் பக்கம் வந்தேன்.
August 25, 2007 at 6:38 pm
நல்லவேளை தப்பிச்சீங்க!