North Masi StreetNorth Masi Street 
வடக்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி என்று எழுதினால் மட்டும் போதுமா? அந்த வீதி எப்படி இருக்கும் என்று காட்ட வேண்டாமா? இந்த இரண்டு புகைப்படங்களும் வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் நின்றபடி, கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் எடுக்கப் பட்டவை. நான் கொடுத்த பில்ட் – அப்களையெல்லாம் வைத்துப் பார்த்தால், இந்தப் புகைப்படங்கள் ஏமாற்றமளிக்கலாம். காரணம் என் நினைவில் இருக்கும் வடக்கு மாசி வீதி 80கள், 90களின் முற்பதிக்கானது. அந்த சமயத்தில் இவ்வளவு வாகனங்களோ, கடைகளோ அந்த வீதியில் கிடையாது. பெரும்பாலும் வீடுகள்தான். சாலையில் தென் பகுதியில் யாதவர்களும் நாயக்கர்களும் குடியிருந்தார்கள். வட பகுதியில் பிராமணர்கள் (ஐயர்) குடியிருந்தார்கள். தற்போது இரு பகுதிகளிலும் பெரும்பாலும் மஞ்சப்புத்தூர் செட்டியார்கள் குடியிருக்கிறார்கள். மீதி இடங்களில் கடைகள் இருக்கி்ன்றன. வடக்கு மாசி வீதியிலிருந்து செல்லும் சந்துகளில்தான் வீடுகள் இருக்கின்றன.

மதுரைக் கோட்டைக்குள் இருக்கும் பிரதான வீதிகள் அனைத்தும் தமிழ் மாதங்களின் பெயர்களில் அமைந்திருக்கும். வடக்கு ஆடி வீதி, வடக்குச் சித்திரை வீதி, மேல ஆவணி மூல வீதி, தெற்கு மாசி வீதி என்பதுபோல. மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா எந்த மாதத்தில் எந்த வீதியில் நடக்கிறதோ, அந்த மாதத்தின் பெயரை அத்தெருக்கள் கொண்டிருக்கும் என்பதுதான் ஏற்பாடு. ஆடி மாதத் திருவிழாவின் போது அம்மனும் சுவாமியும் ஆடி வீதிகளில் வலம் வருவார்கள். ஆவணி மாதத் திருவிழாவில் ஆவணி வீதிகளில் வலம் வருவார்கள். ஆனால், சித்திரைத் திருவிழா சித்திரை வீதிகளில் நடக்காது. மாசி வீதிகளில் நடக்கும்.

மதுரையை திருமலை நாயக்கர் ஆண்ட காலத்தில் ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா சித்திரை மாதத்தில் நடந்தது. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒட்டிய திருவிழா மாசி வீதியில் மாசி மாதத்தில் நடந்துவந்தது. அருகருகே இரண்டு மாதங்கள் திருவிழாக் கொண்டாட்டத்தில் போய்விடுவதைக் கண்ட திருமலை நாயக்கர் இரண்டையும் ஒன்று சேர்த்து சித்திரை மாதத்தில் நடத்த உத்தரவிட்டார். சித்திரை மாத முழுநிலவு நாளன்றுதான் அழகர் வைகையாற்றில் இறங்க வேண்டும் என்பதால் அதை மாசி மாதத்திற்கு மாற்றாமல் மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவை சித்திரை மாதத்திற்கு மாற்றினார். ஆனால் விழா நடந்து வந்த வீதியை மாற்றவில்லை. மாசி வீதிகளிலேயே நடக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

மதுரைக் கோட்டைக்குள் அமைந்திருக்கும் கடைசி பிரதான சாலைகள் மாசி வீதிகள்தான். அதற்குப் பிறகு சிறிது தூரத்தில் கோட்டைச் சுவர்கள். இந்தக் கோட்டை 1850ல் இடிக்கப்பட்டது. யார் எந்த அளவுக்கு இடிக்கிறார்களோ அந்த அளவு இடம் அவர்களுக்கே சொந்தமாகும் என அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். அந்தக் கோட்டையை இடித்ததில் கிடைத்த கற்களை வைத்து வைகையாற்றின் குறுக்கே ஒரு தரைப்பாலம் கட்டப்பட்டது. கல்பாலம் என்று அழைக்கப்பட்ட அந்தப் பாலம் இன்னமும் இருக்கிறது. அதன் மீது புதிதாக ஒரு மேல் பாலம் தற்போது கட்டப்பட்டிருக்கிறது.