வடக்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி என்று எழுதினால் மட்டும் போதுமா? அந்த வீதி எப்படி இருக்கும் என்று காட்ட வேண்டாமா? இந்த இரண்டு புகைப்படங்களும் வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் நின்றபடி, கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் எடுக்கப் பட்டவை. நான் கொடுத்த பில்ட் – அப்களையெல்லாம் வைத்துப் பார்த்தால், இந்தப் புகைப்படங்கள் ஏமாற்றமளிக்கலாம். காரணம் என் நினைவில் இருக்கும் வடக்கு மாசி வீதி 80கள், 90களின் முற்பதிக்கானது. அந்த சமயத்தில் இவ்வளவு வாகனங்களோ, கடைகளோ அந்த வீதியில் கிடையாது. பெரும்பாலும் வீடுகள்தான். சாலையில் தென் பகுதியில் யாதவர்களும் நாயக்கர்களும் குடியிருந்தார்கள். வட பகுதியில் பிராமணர்கள் (ஐயர்) குடியிருந்தார்கள். தற்போது இரு பகுதிகளிலும் பெரும்பாலும் மஞ்சப்புத்தூர் செட்டியார்கள் குடியிருக்கிறார்கள். மீதி இடங்களில் கடைகள் இருக்கி்ன்றன. வடக்கு மாசி வீதியிலிருந்து செல்லும் சந்துகளில்தான் வீடுகள் இருக்கின்றன.
மதுரைக் கோட்டைக்குள் இருக்கும் பிரதான வீதிகள் அனைத்தும் தமிழ் மாதங்களின் பெயர்களில் அமைந்திருக்கும். வடக்கு ஆடி வீதி, வடக்குச் சித்திரை வீதி, மேல ஆவணி மூல வீதி, தெற்கு மாசி வீதி என்பதுபோல. மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா எந்த மாதத்தில் எந்த வீதியில் நடக்கிறதோ, அந்த மாதத்தின் பெயரை அத்தெருக்கள் கொண்டிருக்கும் என்பதுதான் ஏற்பாடு. ஆடி மாதத் திருவிழாவின் போது அம்மனும் சுவாமியும் ஆடி வீதிகளில் வலம் வருவார்கள். ஆவணி மாதத் திருவிழாவில் ஆவணி வீதிகளில் வலம் வருவார்கள். ஆனால், சித்திரைத் திருவிழா சித்திரை வீதிகளில் நடக்காது. மாசி வீதிகளில் நடக்கும்.
மதுரையை திருமலை நாயக்கர் ஆண்ட காலத்தில் ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா சித்திரை மாதத்தில் நடந்தது. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒட்டிய திருவிழா மாசி வீதியில் மாசி மாதத்தில் நடந்துவந்தது. அருகருகே இரண்டு மாதங்கள் திருவிழாக் கொண்டாட்டத்தில் போய்விடுவதைக் கண்ட திருமலை நாயக்கர் இரண்டையும் ஒன்று சேர்த்து சித்திரை மாதத்தில் நடத்த உத்தரவிட்டார். சித்திரை மாத முழுநிலவு நாளன்றுதான் அழகர் வைகையாற்றில் இறங்க வேண்டும் என்பதால் அதை மாசி மாதத்திற்கு மாற்றாமல் மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவை சித்திரை மாதத்திற்கு மாற்றினார். ஆனால் விழா நடந்து வந்த வீதியை மாற்றவில்லை. மாசி வீதிகளிலேயே நடக்கட்டும் என்று விட்டுவிட்டார்.
மதுரைக் கோட்டைக்குள் அமைந்திருக்கும் கடைசி பிரதான சாலைகள் மாசி வீதிகள்தான். அதற்குப் பிறகு சிறிது தூரத்தில் கோட்டைச் சுவர்கள். இந்தக் கோட்டை 1850ல் இடிக்கப்பட்டது. யார் எந்த அளவுக்கு இடிக்கிறார்களோ அந்த அளவு இடம் அவர்களுக்கே சொந்தமாகும் என அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். அந்தக் கோட்டையை இடித்ததில் கிடைத்த கற்களை வைத்து வைகையாற்றின் குறுக்கே ஒரு தரைப்பாலம் கட்டப்பட்டது. கல்பாலம் என்று அழைக்கப்பட்ட அந்தப் பாலம் இன்னமும் இருக்கிறது. அதன் மீது புதிதாக ஒரு மேல் பாலம் தற்போது கட்டப்பட்டிருக்கிறது.
February 26, 2007 at 8:56 pm
ம்துரைக்கே கூட்டிட்டு போயிட்டீங்களே. நான் உங்களுக்கு நேர் எதிர். இருந்தது தெற்கு மாசி வீதி. அதுவும் இந்த அளவிற்கு நெரிசலான வீதிதான்.
படத்திற்கு நன்றி
February 27, 2007 at 3:46 am
தெற்கு மாசி வீதி எப்போதுமே நெரிசலான வீதிதான். பேருந்துகள் ஓடும் ஒரே மாசி வீதி அதுதானே? வடக்கு மாசி வீதியும் அப்படி ஆயிருச்சுங்கிறதுதான் என் சோகம்.
February 27, 2007 at 5:03 am
//பேருந்துகள் ஓடும் ஒரே மாசி வீதி அதுதானே? //
பேருந்தெல்லாம் கடந்த பத்து வருடங்களாகத்தான் அதுவும் வடக்கு மாசி வீதியில் இல்லை, வக்கில் புதுத்தெருவில் ஓடுகிறது….
கிருஷ்ணன் கோவிலை ஒட்டிய சந்தில் சென்றால் மீனாஷி காபி பார், வ்டக்கு ஆவணி மூல வீதியில் உள்ள ரோஷன், ராணி பர்னீச்சர், மற்றும் மேல கோபுர தெருவில் உள்ள பண்டாபீஸ் எல்லாம் இன்னும் இருக்கா தெரியவில்லை.
February 27, 2007 at 6:57 am
எனக்குத் தெரிந்து வடக்கு மாசி வீதியில் பேருந்துகள் ஓடியதில்லை. டிவிஎஸ் நிறுவனம் பேருந்துகளை இயக்கிக் கொண்டிருந்தபோதுதான் வடக்கு மாசி வீதியில் பேருந்துகள் ஓடின. 97ஆம் வருடத்தில் இருந்துதான் வக்கீல் புதுத் தெருவில் பேருந்து ஒடுகிறது. ரோஷன், ராணி ஃபர்னிச்சர் ஆகியவை இருப்பது மேல ஆவணி மூல வீதியில். அவை இன்னும் இருக்கின்றன. பண்டாபீசும் இன்னும் இருக்கிறது. இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால் கிளார்க் வேலைகூட கொடுக்கிறார்கள். மதுரையம்பதி நீங்கள் இப்போது எந்த ஊரில்/நாட்டில் இருக்கிறீர்கள்?
February 27, 2007 at 12:54 pm
பெங்களூர்தான் ஆனால் மதுரை சென்று 3.5 வருடங்களாயிற்று…..அடுத்த வாரம் செல்ல உத்தேசம்.
February 27, 2007 at 5:38 pm
நீங்கள் சொல்வது போல இந்தப் படங்களைப் பார்த்துக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தப் படங்களில் தெரியும் இடத்தை நீங்கள் சொல்லவில்லை என்பது புரிகிறது.
February 27, 2007 at 5:55 pm
கிருஷ்ணன் கோவிலை ஒட்டிய சந்தில் சென்றால் மீனாஷி காபி பார், வ்டக்கு ஆவணி மூல வீதியில் உள்ள ரோஷன், ராணி பர்னீச்சர், மற்றும் மேல கோபுர தெருவில் உள்ள பண்டாபீஸ் எல்லாம் இன்னும் உள்ளது.
February 28, 2007 at 4:13 am
செந்தில் நான் திரும்பவும் சொல்கிறேன், ரோஷன், ராணி ஃபர்னிச்சர் ஆகியவை இருப்பது மேல ஆவணி மூல வீதியில், வடக்காவணி மூல வீதியில் அல்ல.
July 31, 2007 at 4:34 am
வடக்கு மாசி வீதியிலிருந்து வடக்கு ஆவணிமூலவீதி/மேலாவணிமூலவீதி முனங்கக்ுகுச் செல்லும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் சந்தில் சாண்டோ சுப்பிரமணியம் என்பவர் Modern Phyisical Culture Institute நடத்திவந்தார்.
இன்னும் இருக்கிறதா?
அதைப் பற்றி:
http://www.visvacomplex.com/Thamilz_SandowkkaL_-2.html
July 31, 2007 at 11:51 pm
Another website for Madurai.
http://www.maduraiweb.com/