March 2007


ராமதாஸ்உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ். பேட்டியிலிருந்து:

கே. இந்திய அணியின் தோல்வி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப. இன்றைக்கு தமிழ்நாட்டில் தி.மு.கவினர் எந்த அளவுக்கு அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தோல்வி ஒரு சான்று.
கே. தி.மு.கவிற்கும் கிரிக்கெட் தோல்விக்கும் என்ன சம்பந்தம்?
ப. இதே கேள்வியை கருணாநிதியிடம் கேட்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா?
கே. இந்திய கிரிக்கெட்டில் என்ன மாற்றம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?
ப. முதலில் சரத்பவாரை பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து தூக்க வேண்டும். அன்புமணி ராமதாஸ் போன்ற ஓரு பிற்படுத்தப்பட்டவரை அதன் தலைவராக்க வேண்டும். வேல்முருகன் எம்.எல்.ஏ போன்றவர்கள் பலமுறை கிரிக்கெட் பார்த்திருக்கிறார்கள். அவர்களை அணியில் சேர்க்க முடியாமல் எது தடுக்கிறது? உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகளை மக்கள் டிவிக்குத் தரவேண்டும். உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்ப்பவர்களில் 99 சதவீதம் பேர் தமிழர்கள். அந்த உரிமையை ஏன் ஒரு தமிழ் தொலைக்காட்சிக்குத் தரக்கூடாது?
கே. பாப் வூல்மர் கொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப. பாப் இவூல்மரின் அறையில் வீராசாமி படத்தின் வி.சி.டி இருந்ததாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். ஆரம்ப காலத்திலிருந்தே குறுஞ்செய்திகளை எதிர்ப்பவன் நான். அவை பல விதங்களில் மக்களுக்கு உதவியாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அதை எதிர்த்து வந்திருக்கிறேன். ஆனாலும் இந்த குறுஞ்செய்தியை நம்பாமல் இருக்க முடியவில்லை. விராசாமியை இயக்கிய வெற்றி ராசேந்தர் தி.மு.கவைச் சேர்ந்தவர். பால் இவூல்மரின் கொலையே அறிவாலயத்தில்தான் திட்டமிடப்பட்டது என்பதற்கு போதுமான ஆதரங்கள் இருக்கின்றன.
கே. ஏன் தி.மு.கவை தொடர்ந்து தாக்கிவருகிறீர்கள்?
ப. தினமும் தயாநிதிமாறன் மூலம் தில்லியுடன் பேசிவரும் கருணாநிதி, ஒரு பிற்படுத்தப்பட்டவருக்கு கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை பெற்றுத்தர முடியாதா? ஒரு ஆயா வேலைக்கு சிபாரிசு செய்தால்கூட கேட்கமாட்டேன் என்கிறார்கள்.
கே. உங்கள் பரிந்துரைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்காவிட்டால் என்ன செய்வீர்கள்?
ப. பா.ம.க. தலைவர் கோ.க. மணி தலைமையில் அறிவாலயம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். தமிழகம் முழுவதும் பா.ம.க. தொண்டர்கள் மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு ஆர்ப்பாடம் நடத்துவார்கள். மக்கள் நிம்மதியாக இருக்க விடாமல் பார்த்துக்கொள்வோம்.
 

முத்துச்சாமிக்கு கிரிக்கெட்டிலும் ஆர்வம் உண்டு. ஆனால், யார் எந்த நாட்டைச் சேர்ந்தவர், என்ன செய்கிறார் என்பதெல்லாம் தெரியாது. அதனால், மதுரை வடக்கு மாசி வீதி பழுக்குகள் எல்லாம் கிரிக்கெட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, அவரும் குறுக்கே புகுந்து ஏதாவது சொல்லுவார். தனக்கு எதுவும் தெரியாது என்பது தெரிந்துவிடாதபடி பேசுவார். அது சில சமயங்களில் எடுபடும்; சில சமயங்களில் சொதப்பலாகிவிடும்.

 ********

எல்லோரும் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது, முத்துச்சாமியும் அங்கே வருவார். எந்த நாடு ஆடுகிறது, யார் விளையாடுகிறார் என்றெல்லாம் பார்க்கமாட்டார். ஒரு அரை நிமிடம் ஆட்டத்தைக் கவனிப்பார். பிறகு, “ஜெயிச்சுருவாய்ங்க” என்று தீர்ப்புச் சொல்லிவிட்டுப் போய்விடுவார். ஆட்டம் முடிந்த பிறகு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது மறுபடி வருவார். யார் ஜெயிச்சது என்று கேட்பார். கண்டிப்பாக யாராவது ஒருவர் ஜெயித்திருப்பார்கள் அல்லவா? “அதான், சொன்னேல்ல ஜெயிச்சிருவாய்ங்கன்னு” என்று தன் மேதமையைத் தானே புகழ்ந்து கொண்டு சென்றுவிடுவார். அந்தக் காலத்தில் மேட்ச்சுகள் வெற்றி – தோல்வியின்றி முடிவது அடிக்கடி நடக்கவில்லை என்பதால் அவர் பெரிதாக மாட்டிக்கொள்ளவில்லை (அடிக்கடி டிராவில் முடியும் டெஸ்ட் பந்தையங்களை பழுக்குகள் ரசிப்பதில்லை).

 ********

90களின் மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) அணி உலகக் கோப்பையில் கலந்து கொண்டிருந்தது. சில சமயங்களில் நன்றாகவும் ஆடியது. பழுக்குகள் யுஏஇயின் ஆட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். வந்து சேர்ந்தார் முத்துச்சாமி. “எதப்பத்தி பேசிக்கிட்டிருக்கீங்க?” என்று விசாரித்தார். யுஏஇ பற்றி என்றார்கள் பழுக்குகள். “அந்தப் பயலா?” என்றார் முத்துச்சாமி. ஓரு நாட்டையே பயல் என்கிறாரே முத்துச்சாமி என்று பார்த்தார்கள் பழுக்குகள். “அதான்யா, சிவப்பா, உயரமா இருப்பானே.. அவன்தான்யா யுஏஇ?” என்றார் முத்து. யுஏஇன்னா யுனைட்டர் அராப் எமிரேட்ஸ் என்று விளக்கமளித்தார்கள் பழுக்குகள். “அவனத்தான் சொல்லுது.. எமிரேட்ஸ் பயல எங்களுக்குத் தெரியாதாக்கும்” என்று சொல்லியபடி, அடுத்து ஒடிப்போவதற்கு வேண்டிய வேலைகளைச் கவனிக்கச் சென்றுவிட்டார் முத்துச்சாமி.

 ********

திலீப் வெங்சர்க்கார் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நேரம். பழுக்குகள் வழக்கம்போல அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “நல்ல பவுலர். விக்கட் கீப்பிங்கூட நல்லாப் பண்ணுவான். பாவம் ரிட்டயர்ட் ஆயிட்டான்” என்று சொல்லியபடி சென்றுவிட்டார் முத்து.

மதுரை வடக்கு மாசி வீதி நண்பர்கள் பலருக்கு சினிமாவுக்கு அடுத்தபடியான பொழுதுபோக்கு வீட்டைவிட்டு ஓடிப்போய்விடுவது. பொதுவாக சமாளிக்க முடியாத பிரச்னைகள், பரீட்சையில் தோல்விகள் ஏற்பட்டால்தான் ஓடிப்போவார்கள். ஆனால், மாசி வீதி இளைஞர்கள் புதுப்படம் ரிலீஸானாலே வீட்டில் கோவித்துக் கொண்டு ஓடிவிடுவார்கள். முதல் தடவையாக இப்படி ஓடும்போது பெற்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியாகத்தான் இருக்கும். எல்லா இடங்களிலும் தேடுவார்கள். பிறகு அந்தப் பழுக்கு எங்கேயாவது தியேட்டர் வாசலில் தூங்கிக் கொண்டிருப்பான். முதுகில் நாலு மொத்து மொத்தி இழுத்து வந்துவிடுவார்கள். ஆனால் இப்படி அடிக்கடி நடந்தால் யாருக்குத்தான் போரடிக்காது? பிறகு, வீட்டிலிருக்கும் எல்லோருக்கும் பழகிவிடும். இரவு படுத்துத் தூங்குவதற்கு ஆள் வரவில்லையென்றால், பிள்ளை ஓடிப்போய்விட்டான் என்று தெரிந்துவிடும். மீதமிருக்கும் சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டுத் தூங்கிவிடுவார்கள். கையில் காசு தீர்ந்தவுடன் காணமல் போனவன் தானாகவே திரும்பிவந்துவிடுவான்.

ஆனால், முத்துச்சாமியின் விஷயமே தனி. ஒரு வருடத்தில் குறைந்தது 10 தடவைகளாவது வீட்டை விட்டு ஓடிப்போய்விடுவார். இத்தனைக்கும் எந்தத் தொழிலும் தெரியாது. கையில் பணமும் கிடைக்காது. ஓடிப்போய் எப்படிச் சமாளிக்கிறார் என்பது மர்மமாகவே இருந்தது. பிறகுதான் விஷயம் புரிந்தது. அதாவது, மதுரையில் ஏதாவது ஒரு கோவிலில் திருவிழா நடக்கும் சமயம்தான் முத்துச்சாமி காணாமல் போவார். மதுரையில் கோவில் திருவிழாக்கள் எல்லாம் குறைந்தது ஐந்து நாட்களாகவது நடக்கும் என்பதால், அந்த ஐந்து நாட்களுக்கும் அந்தக் கோவிலிலேயே தன் உணவு, உறைவிடத் தேவையை முடித்துவிட்டு வீடு திரும்புவார் முத்துச்சாமி. சித்திரைத் திருவிழா வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். 20 நாட்களுக்கு ஆளைக் கண்ணிலேயே பார்க்க முடியாது. திருவிழா துவங்குவதற்கு முந்தைய நாள் வீட்டில் அற்ப காரணத்திற்காக சண்டை போட்டுக் கொண்டு காணாமல் போய்விடுவார்.

இவர் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக கண்ணில்பட்டால், “என்ன முத்துச்சாமி ஓடிப்போகலையா?” என்று மாசி வீதி ஆட்களே கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். இப்படி ஒருமுறை ஓடிப்போனவரை நீண்ட நாட்களாகக் காணவில்லை. பிறகு பார்த்தால், ஒரு கோவிலில் வாயில் காவலராக வேலைக்குச் சேர்ந்திருந்தார் முத்துச்சாமி. திருமணமாகிவிட்டது. மனைவியின் கை நீளம் என்பதால், இப்போது ஓடிப்போவதில்லை என்று கேள்வி.

suhasini.jpg பெண்ணியம் என்பதை பொத்தாம்பொதுவாக விளக்குவதானால், சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் ஆணாதிக்கத் தனத்திலிருந்து பெண்களை விடுவிப்பது என்று சொல்லலாம். பல ஆண்டுகளாக இது குறித்த கருத்துகள், சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. மேரி டாலி, சார்லோட் பஞ்ச், மெரிலின் ஃப்ரை போன்ற பெண்ணியவாதிகள் பெண் விடுதலையை முன்வைத்து தொடர்ந்து போராடியும் எழுதியும் வந்தனர். நம்மிடத்தில் இப்படிச் சிந்தனையாளர்கள் யாரும் இல்லை. அது பெரிய பிரச்னையாகவும் இல்லை. மேலை நாட்டு பெண்ணியவாதிகளின் சிந்தனைகளை நம் நாட்டிற்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம். அல்லது அப்படியே பயன்படுத்தலாம்.

ஆனால் சமீப காலமாக சில பெண் கவிஞர்கள், மார்க்கெட் இழந்த நடிகைகள் ஆகியோர் பெண்ணியவாதிகளாகவும் இலக்கியம், சினிமா, கலை ஆகிய துறைகளில் உன்னதம் விரும்புபவர்களாகவும் முன்னிறுத்தப்படுகிறார்கள். சமீபத்தில் ஒரு பெரிய பத்திரிகை நடத்தும் இலக்கிய இதழில் ஒரு பெண் கவிஞர் பெண், பெண் உடல், பெண் வெளி என்றெல்லாம் ஏதேதோ பேத்தியிருந்தார். ஒருவரிகூட யாருக்கும் புரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக எழுதியிருந்தார் (உதா: போதுமான அளவுக்கு உள்கிடங்குகளில் நிறையும் உளக்கிடக்கைகளோ பழுப்பேறி புழுதிபடிந்து, மூச்சுமுட்டும் அளவுக்கானவை. இக்கட்டத்தில் ஒரு இல்லத்தை அல்லது வீட்டை ஒரு பெண்ணின் உடல் மெய்ஞ்ஞானம் எய்துவதற்கான வெளியாகவோ வாழ்வியல் இன்பங்களை நுகர்வதற்கான ஒரு பரப்பாகவோகூட ஒருபொழுதும் நுகர முடியாது!). தமிழ் உரைநடை தெரியாதவர்கள் மட்டுமே இப்படிக் கிறுக்க முடியும்.  உலகையே புரட்டிப்போட்ட கம்யூனிஸ்ட் அறிக்கைகூட படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிதாகத்தான் இருந்தது.  இருந்தும் பாருங்கள், அந்தக் கவிஞர் நம் சமூகத்தில் ஒரு முக்கியமான சிந்தனையாளர். படைப்பாளி. சினிமாகூட தெரியும். இதனால்தான் இந்தப் பாழாய்போன பெண்ணியம் மு.மேத்தா வாயிலெல்லாம் விழ வேண்டியிருக்கிறது.

நடிகைகளான ரேவதி, சுகாசினி ஆகியோர் தங்கள் கேரியரின் உச்சத்தில் இருந்தபோதுகூட, அவர்களைவிட சிறந்த நடிகைகள் கோலிவுட்டில் இருந்தனர். அவர்களுக்குப் பின்னும் நிறைய நடிகைகள் அவர்கள் தொட்ட சிகரங்களையெல்லாம் தாண்டி நடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, குஷ்பு, சிம்ரன். ஆனால், அவர்கள் ஒருபோதும் சிறந்த நடிகைகளாக நம் அறிவுஜீவிக் கூட்டத்தால் கருதப்பட்டதில்லை. காரணம் நல்ல நடிகைகள் என்பதற்கு நம் அறிவுஜீவிகள் வைத்திருக்கும் இலக்கணம். அந்த இலக்கணங்கள் இதோ: குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கக்கூடாது; ஒருபோதும் நம்பர் ஒன் நடிகையாக இருந்திருக்கக்கூடாது; படங்களில் கண்ணியமாக (எல்லாம் so called கண்ணியம்தான்) நடித்திருக்க வேண்டும். குஷ்பு, சிம்ரன் ஆகியோர் இந்த இலக்கணத்திற்கு வெளியே இருப்பதால் அவர்களுக்கு அறிவாளி அந்தஸ்து கிடையாது.

இப்போது மேலே சொன்ன நடிகைகள் எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும் வருகிறார்கள். அறிவுஜீவி அந்தஸ்து அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.  எந்த ஒரு பொதுப் பிரச்னையிலும் குரல்கொடுக்காதவர்கள் சமூக போராளிகளாக முன்னிறுத்தப்பட்டு, குடிசைகளின் நடுவே, ஏழைகளின் நடுவே, உண்மையாகப் பணியாற்றும் பெண்களுக்கு அவமானம் சேர்க்கப்படுகிறது.  சிபிஎம்மின் வாசுகி கலந்து கொண்ட பெண்கள் தினக் கூட்டங்களைவிட இந்த நடிகைகள் கலந்து கொண்ட பெண்கள் தினக்கூட்டங்கள் அதிகமாக இருக்கும். இந்த நடிகைகள் எளிதில் அணுகக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதாலேயே எல்லா இடங்களுக்கும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், இது இவர்களது தப்பேயில்லை. கூட்ட அமைப்பாளர்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும் (அதற்குத் தண்டனையாக சுகாசினி, ரேவதி நடித்த புதுமைப்பெண், மனதில் உறுதி வேண்டும் போன்ற படங்களைப் பத்துப் பத்து தடவை பார்க்கச் சொல்ல வேணடும்). கூட்டங்களுக்கு வருபவர்களும் சீரியஸ் சினிமாவுக்கு, சீரியஸ் எழுத்துக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பதில்லை.

இந்த இடத்தில் ஒன்றை விளக்கிவிடவேண்டும். ஒருவர் நடிகையாக இருப்பதாலேயே அவருக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்ல வரவில்லை. நடிகைகளைக் கூட்டங்களுக்கு அழைப்பதை எதிர்க்கும் ஆச்சாரப் பார்வையையும் இங்கே முன்வைக்கப்படவில்லை. சீரியஸான நடிகைக்கான இலக்கணம் என்பது அவர்கள் காட்டும் கவர்ச்சியை வைத்தே முடிவெடுக்கப்படுகிறது என்ற ஆதங்கம்தான் இங்கே கொட்டப்படுகிறது.
விரைவில் இந்த வரிசையில் சொர்ணமால்யாவும் சேரக்கூடும். அவர் சிறப்பாக நடனம் ஆடுகிறார் என்பது அதற்குக் காரணமாக இருக்காது. அவர் நடித்த மொழி திரைப்படம், ஐநாக்ஸ், சத்யம் போன்ற மல்டிப்ளெக்ஸ்களில் நன்றாக ரசிக்கப்படுகிறது; கண்ணிய நடிகை என்று பெயர் அவர் விரும்பியோ, விரும்பாமலோ அவர் மீது ஒட்டிக்கொண்டதுதான் காரணமாக இருக்கும்.

அஜீத் நடித்த ஆழ்வார் ஊத்திக்கொண்டுவிட்டது. இப்படியே போனால், அஜீத் விரைவில் டாஸ்மாக்கில் குடியிருக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி நடக்கும் பட்சத்தில், 10 வருடங்கள் கழித்து மனிதர் எப்படியிருப்பார் என்றாரு கற்பனை.

sms_emden1.jpgமுதல் உலகப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தத நேரம். 1914ஆம் வருடம் செப்டம்பர் 22ந் தேதி ஜெர்மானிய போர்க் கப்பலான எம்டன் சென்னை நகரைத் தாக்கியது. பெரிய சேதமொன்றும் ஏற்படவில்லை. பிரிட்டிஷ் நிறுவனமொன்றின் எண்ணெய்க் கிடங்கொன்று தீப்பிடித்து எரிந்ததோடு சரி. ஆனால், பிரிட்டிஷ்காரர்கள் இந்தச் சம்பவத்தால் பெரும் பீதிக்குள்ளானார்கள். சென்னை நகர மக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். பலரும் ஊரைக் காலி செய்ய ஆரம்பித்தார்கள்.

வடக்குமாசி வீதியிலும் பீதி தொற்றியது. ஆனால் சற்று கால தாமதமாக. சுமார் இருபது வருடங்கள் கழித்து இரண்டாவது உலகப் போர் நடக்கும்போதுதான் எம்டன் கப்பலின் தாக்குதலைப் பற்றி வடக்கு மாசி வீதியில் பேச ஆரம்பித்தார்கள். நாஜிப் படைகள் போலந்தைத் தாக்கிக் கைப்பற்றின. வடக்கு மாசி வீதியினர் மிரண்டு போனார்கள். அடுத்த விமானத் தாக்குதல் வடக்கு மாசி வீதி மீதுதான் என்று பேச்சு பரவியது. தில்லி, பம்பாய், கல்கத்தா நகரங்களைத் தவிடுபொடியாக்கிவிட்டு, ஜெர்மன்காரன் மெட்ராஸை நோக்கி வந்துகொண்டிருப்பதாக பேசினார்கள். சற்று விவரம் தெரிந்தவர்கள், மெட்ராஸும் காலி என்றார்கள்.

எம்டன் கப்பல் தூத்துக்குடி, ராமேஸ்வரத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் (உண்மையில் எம்டன் முதல் உலகப் போர் காலத்திலேயே மூழ்கடிக்கப்பட்டுவிட்டது) ஜெர்மன் விமானப் படையினர் திருச்சி வரை வந்துவிட்டதாகவும் அடுத்த இலக்கு மதுரைதான் என்றும் சொன்னார்கள். குறிப்பாக வடக்கு மாசி வீதி என்றும் சொன்னார்கள்.
போருக்குப் பயந்து மக்கள் ஊர்களைக் காலி செய்வதைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த வடக்கு மாசி வீதிவாசிகள், தாங்களும் ஊரைக் காலி செய்ய முடிவெடுத்தார்கள்.

100க்கும் மேற்பட்டவர்கள், வடக்கு மாசி வீதியிலிருந்த வீடுகளில் தங்கள் வீட்டுக் கிழவிகளைக் காவலுக்கு வைத்துவிட்டு, செல்லூருக்குக் குடிபெயர்ந்தார்கள். செல்லூர் என்பது வடக்கு மாசி வீதியிலிருந்து 1 கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு பகுதி (வைகையாற்றில் வெள்ளம் வந்தாலே செல்லூரில் பத்து வீடுகள் இடிந்து விழும்). அங்கே போய்விட்டால் ஜெர்மன்காரன் குண்டு போட மாட்டான் என்பது ஐதீகம். ஆனால் நல்ல வேளையாக வடக்கு மாசி வீதியில் குண்டு வீசும் அவமானம் ஜெர்மன்காரனுக்கு நேரவில்லை. பத்து நாட்கள் பொறுத்திருந்த மாசி வீதிவாசிகள், ஜெர்மன்காரனைத் திட்டிக்கொண்டே (கொழுப்பெடுத்த பய.. நம்மலையெல்லாம் பாத்தா ஊராத் தெரியபோல இருக்கு. குண்ட, கிண்ட போட்டான்னா கிழவி போய்ச்சேரும்னு பார்த்தா, இப்படிப் பன்னீட்டானே ஜெர்மன்காரன்..) தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

 புகைப்படம்: எம்டன் போர்க்கப்பல்