முதல் உலகப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தத நேரம். 1914ஆம் வருடம் செப்டம்பர் 22ந் தேதி ஜெர்மானிய போர்க் கப்பலான எம்டன் சென்னை நகரைத் தாக்கியது. பெரிய சேதமொன்றும் ஏற்படவில்லை. பிரிட்டிஷ் நிறுவனமொன்றின் எண்ணெய்க் கிடங்கொன்று தீப்பிடித்து எரிந்ததோடு சரி. ஆனால், பிரிட்டிஷ்காரர்கள் இந்தச் சம்பவத்தால் பெரும் பீதிக்குள்ளானார்கள். சென்னை நகர மக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். பலரும் ஊரைக் காலி செய்ய ஆரம்பித்தார்கள்.
வடக்குமாசி வீதியிலும் பீதி தொற்றியது. ஆனால் சற்று கால தாமதமாக. சுமார் இருபது வருடங்கள் கழித்து இரண்டாவது உலகப் போர் நடக்கும்போதுதான் எம்டன் கப்பலின் தாக்குதலைப் பற்றி வடக்கு மாசி வீதியில் பேச ஆரம்பித்தார்கள். நாஜிப் படைகள் போலந்தைத் தாக்கிக் கைப்பற்றின. வடக்கு மாசி வீதியினர் மிரண்டு போனார்கள். அடுத்த விமானத் தாக்குதல் வடக்கு மாசி வீதி மீதுதான் என்று பேச்சு பரவியது. தில்லி, பம்பாய், கல்கத்தா நகரங்களைத் தவிடுபொடியாக்கிவிட்டு, ஜெர்மன்காரன் மெட்ராஸை நோக்கி வந்துகொண்டிருப்பதாக பேசினார்கள். சற்று விவரம் தெரிந்தவர்கள், மெட்ராஸும் காலி என்றார்கள்.
எம்டன் கப்பல் தூத்துக்குடி, ராமேஸ்வரத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் (உண்மையில் எம்டன் முதல் உலகப் போர் காலத்திலேயே மூழ்கடிக்கப்பட்டுவிட்டது) ஜெர்மன் விமானப் படையினர் திருச்சி வரை வந்துவிட்டதாகவும் அடுத்த இலக்கு மதுரைதான் என்றும் சொன்னார்கள். குறிப்பாக வடக்கு மாசி வீதி என்றும் சொன்னார்கள்.
போருக்குப் பயந்து மக்கள் ஊர்களைக் காலி செய்வதைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த வடக்கு மாசி வீதிவாசிகள், தாங்களும் ஊரைக் காலி செய்ய முடிவெடுத்தார்கள்.
100க்கும் மேற்பட்டவர்கள், வடக்கு மாசி வீதியிலிருந்த வீடுகளில் தங்கள் வீட்டுக் கிழவிகளைக் காவலுக்கு வைத்துவிட்டு, செல்லூருக்குக் குடிபெயர்ந்தார்கள். செல்லூர் என்பது வடக்கு மாசி வீதியிலிருந்து 1 கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு பகுதி (வைகையாற்றில் வெள்ளம் வந்தாலே செல்லூரில் பத்து வீடுகள் இடிந்து விழும்). அங்கே போய்விட்டால் ஜெர்மன்காரன் குண்டு போட மாட்டான் என்பது ஐதீகம். ஆனால் நல்ல வேளையாக வடக்கு மாசி வீதியில் குண்டு வீசும் அவமானம் ஜெர்மன்காரனுக்கு நேரவில்லை. பத்து நாட்கள் பொறுத்திருந்த மாசி வீதிவாசிகள், ஜெர்மன்காரனைத் திட்டிக்கொண்டே (கொழுப்பெடுத்த பய.. நம்மலையெல்லாம் பாத்தா ஊராத் தெரியபோல இருக்கு. குண்ட, கிண்ட போட்டான்னா கிழவி போய்ச்சேரும்னு பார்த்தா, இப்படிப் பன்னீட்டானே ஜெர்மன்காரன்..) தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
புகைப்படம்: எம்டன் போர்க்கப்பல்
March 11, 2007 at 7:12 am
இன்னொரு deadly anecdote. ஆனால் இதை எழுதிவிட்டு நீங்கள் மீண்டும் வடக்கு மாசி வீதிக்குப் போக முடியுமா?
March 11, 2007 at 7:58 am
வடக்குமாசி வீதிக்காரர்களாவது ஜெர்மனி மீது ஒரு குண்டைப் போட வேண்டியதுதானே! வரலாற்றில் இடம் பெற்றிருக்கலாம்.
March 11, 2007 at 9:56 am
ஜெர்மன் மீது குண்டு போடவா? நல்ல கதை! ஜெர்மன் என்ன செல்லூரா?
August 21, 2007 at 8:02 pm
Ohoo.. Adhan, Emton nnnu thittirama…
August 25, 2007 at 12:53 pm
இந்தக் கதையெல்லாம் கேள்விப் பட்டதே இல்லையே. எங்கேயிருந்து கிளப்பினீங்க?
August 25, 2007 at 6:35 pm
எல்லாம் அக்மார்க் உண்மை சுவாமி!