மதுரை வடக்கு மாசி வீதி நண்பர்கள் பலருக்கு சினிமாவுக்கு அடுத்தபடியான பொழுதுபோக்கு வீட்டைவிட்டு ஓடிப்போய்விடுவது. பொதுவாக சமாளிக்க முடியாத பிரச்னைகள், பரீட்சையில் தோல்விகள் ஏற்பட்டால்தான் ஓடிப்போவார்கள். ஆனால், மாசி வீதி இளைஞர்கள் புதுப்படம் ரிலீஸானாலே வீட்டில் கோவித்துக் கொண்டு ஓடிவிடுவார்கள். முதல் தடவையாக இப்படி ஓடும்போது பெற்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியாகத்தான் இருக்கும். எல்லா இடங்களிலும் தேடுவார்கள். பிறகு அந்தப் பழுக்கு எங்கேயாவது தியேட்டர் வாசலில் தூங்கிக் கொண்டிருப்பான். முதுகில் நாலு மொத்து மொத்தி இழுத்து வந்துவிடுவார்கள். ஆனால் இப்படி அடிக்கடி நடந்தால் யாருக்குத்தான் போரடிக்காது? பிறகு, வீட்டிலிருக்கும் எல்லோருக்கும் பழகிவிடும். இரவு படுத்துத் தூங்குவதற்கு ஆள் வரவில்லையென்றால், பிள்ளை ஓடிப்போய்விட்டான் என்று தெரிந்துவிடும். மீதமிருக்கும் சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டுத் தூங்கிவிடுவார்கள். கையில் காசு தீர்ந்தவுடன் காணமல் போனவன் தானாகவே திரும்பிவந்துவிடுவான்.

ஆனால், முத்துச்சாமியின் விஷயமே தனி. ஒரு வருடத்தில் குறைந்தது 10 தடவைகளாவது வீட்டை விட்டு ஓடிப்போய்விடுவார். இத்தனைக்கும் எந்தத் தொழிலும் தெரியாது. கையில் பணமும் கிடைக்காது. ஓடிப்போய் எப்படிச் சமாளிக்கிறார் என்பது மர்மமாகவே இருந்தது. பிறகுதான் விஷயம் புரிந்தது. அதாவது, மதுரையில் ஏதாவது ஒரு கோவிலில் திருவிழா நடக்கும் சமயம்தான் முத்துச்சாமி காணாமல் போவார். மதுரையில் கோவில் திருவிழாக்கள் எல்லாம் குறைந்தது ஐந்து நாட்களாகவது நடக்கும் என்பதால், அந்த ஐந்து நாட்களுக்கும் அந்தக் கோவிலிலேயே தன் உணவு, உறைவிடத் தேவையை முடித்துவிட்டு வீடு திரும்புவார் முத்துச்சாமி. சித்திரைத் திருவிழா வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். 20 நாட்களுக்கு ஆளைக் கண்ணிலேயே பார்க்க முடியாது. திருவிழா துவங்குவதற்கு முந்தைய நாள் வீட்டில் அற்ப காரணத்திற்காக சண்டை போட்டுக் கொண்டு காணாமல் போய்விடுவார்.

இவர் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக கண்ணில்பட்டால், “என்ன முத்துச்சாமி ஓடிப்போகலையா?” என்று மாசி வீதி ஆட்களே கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். இப்படி ஒருமுறை ஓடிப்போனவரை நீண்ட நாட்களாகக் காணவில்லை. பிறகு பார்த்தால், ஒரு கோவிலில் வாயில் காவலராக வேலைக்குச் சேர்ந்திருந்தார் முத்துச்சாமி. திருமணமாகிவிட்டது. மனைவியின் கை நீளம் என்பதால், இப்போது ஓடிப்போவதில்லை என்று கேள்வி.