பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளிவந்திருக்கிறது சிவாஜி. கடந்த இரண்டு வாரங்களாக ஊடகம் முழுவதையும் சிவாஜி என்ற ஒற்றை வார்த்தை ஆக்கிரமித்திருந்தது. ரசிகர்கள் இரவெல்லாம் விழித்துக் கிடந்து முன்பதிவு செய்தார்கள். ஆனால், படத்தைப் பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.
அமெரிக்காவில் கம்ப்யூட்டர் பொறியியலாளராக இருந்து ரூ. 250 கோடி பணத்துடன் இந்தியாவுக்கு வருகிறார் சிவாஜி (ரஜினி). அவருக்கு மாமா கம் தோழன் விவேக். இந்தப் பணத்தை வைத்து பெரிய கல்வி நிலையங்களையும் மருத்துவமனையையும் கட்டி ஏழைகளுக்கு உதவ நினைக்கிறார் சிவாஜி. ஆனால், அதே ஊரில் இம்மாதிரி கல்வி நிலையங்களின் மூலம் பெரும் பணம் சம்பாதிக்கும் ஆதிசேஷன் (சுமன்) இதை விரும்பவில்லை. திட்டத்தைக் கைவிடும்படி சிவாஜியை வற்புறுத்துகிறார்.
பல தடைகளைத் தாண்டி சிவாஜியின் திட்டம் வளர்கிறது. இதற்கிடையில் ஆதிசேஷனின் முயற்சியால், அரசு சிவாஜியின் கட்டிடத்தை இடிக்க வருகிறது. இடத்தைக் கையகப்படுத்துகிறது. நீதிமன்றமும் கைவிடுகிறது. சிவாஜியின் எல்லாச் சொத்துகளும் பறிபோகின்றன. சிவாஜியின் கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து, பிச்சை எடுத்துப் பிழைத்துக்கொள்ளும்படி சொல்கிறானர் ஆதிசேஷன். அந்த ஒரு ரூபாயை வைத்து ஆதிசேஷனுக்கு போன் செய்து, அவன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு வருவதாகச் சொல்லி, அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றுகிறார் சிவாஜி. அதை வைத்து மிரட்டி, ஆதிசேஷனிடமிருந்து 100 கோடியைக் கறக்கிறார் சிவாஜி. அதேபோல, தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கருப்புப் பண முதலைகளிடமிருந்து இதே பாணியில் பணம் கறந்து ஏழைகளுக்காக மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளை கட்டுகிறார் சிவாஜி. சட்டவிரோதமாக கறுப்புப் பண முதலைகளிடமிருந்து பணத்தைப் பறித்ததற்காக கைது செய்யப்படுகிறார். காவலில் இருக்கும்போதே அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. தான் இறந்ததாக வில்லன்களை நம்பவைத்துவிட்டு, மொட்டை ரஜினியாக வந்து எல்லோரையும் துவம்சம் செய்கிறார் சிவாஜி. இந்த மாதிரி கதையையெல்லாம் உலகம் முழுக்க தூக்கியெறிந்துவிட்டார்கள். இந்த குப்பைக் கதையை வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டியிருக்கிறார் ஷங்கர். ஷங்கரைப் பொறுத்தவரை இந்தியாவில் இருக்கும் பிரச்னைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். பஸ்ஸில் கண்டெக்டர் திட்டுவது, சாலையில் எச்சில் துப்புவது, கல்லூரிகளில் நன்கொடை வாங்குவது, மருத்துவமனைகளில் பணம் வாங்குவது, தாசில்தார் லஞ்சம் வாங்குவது ஆகியவைதான். இவற்றையெல்லாம் ஒழித்துவிட்டால் நாடே சுபிட்சமாகிவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு.இந்தப் படமும் இந்த எளிய நம்பிக்கையின் அடிப்படையில்தான் இயங்குகிறது. கறுப்புப் பணத்தையெல்லாம் திரட்டி ஏழைகளுக்கு நன்மை செய்கிறாராம் நாயகன். கறுப்புப் பணம் கட்டாதவர்களில் பட்டியலை எடுத்துப் பார்த்தால், சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் கணிசமாக இருக்கும். இதுநாள் வரை ஏவிஎம் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரித்தால், அதை எவ்வளவு செலவில் தயாரித்தோம், எவ்வளவுக்கு விற்றோம், எவ்வளவு லாபம் என்பதை வெளிப்படையாக அறிவித்து வந்தது. முதல் முறையாக சிவாஜி படத்திற்காக அந்த பழக்கத்தைக் கைவிட்டிருக்கிருக்கிறது ஏவிஎம். காரணம் யார்? இந்த கறுப்புப் பண எதிர்ப்புப் போராளிதானே?

இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். பணம் கொடுத்து படம் பார்க்க வருபவர்களை, மனமுதிர்ச்சியில்லாதவர்களாக இந்தக் கும்பல் நினைப்பதுதான் சிக்கல். எல்லாக் காட்சிகளிலும் அமெச்சூர்தனம். ரஜினி இருக்கிறார், சுஜாதா வசனம், ஏ.ஆர். ரஹ்மான் இசை – இது போக இந்த அடிமைகளுக்கு (நாம்தான்) என்ன வேண்டும் என்ற எகத்தாளமே படம் முழுக்க தென்படுகிறது.ஒரு காட்சியில், இந்தியாவிலிருக்கும் பணத்தை அமெரிக்காவுக்கு ஹவாலா மூலம் அனுப்ப வேண்டி வருகிறது. அதற்காக முஸ்லிம்களிடம் செல்கிறார்கள் நாயகனும் மாமாவும் (விவேக்). அதாவது முஸ்லிம்கள்தான் ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபடுவார்களாம். அதேபோல, கறுப்பாக இருக்கும் தன் மகள்களைப் பற்றி ஒரு தந்தையே கிண்டலடிக்கிறார். அவர்கள் கறுப்பாக இருப்பதால், அவர்கள் தங்களுக்கு திருமணமாக வேண்டும் என்பதற்காக, நாயகனை சுற்றிச்சுற்றி வருகிறார்கள். நிறவெறி இரத்தத்திலேயே ஊறிப்போயிருக்கிறது.நீங்கள் ரஜினி ரசிகராக இருந்தால் ஷங்கரை மன்னிக்க மாட்டீர்கள். நீங்கள் நல்ல சினிமா ரசிகராக இருந்தால், இந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட யாரையும் மன்னிக்க மாட்டீர்கள்.