இயக்குனர் சீமான் சமீபத்திய ஜூனியர் விகடன் இதழில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில், தமிழகத்தில் கருத்துச் சுதந்திரமே இல்லை என்று குமுறுயிருந்தார். அதாவது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினால் பிரச்னையாக்குகிறார்களாம். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினால், எந்த நாட்டிலும் பிரச்னை வரத்தான் செய்யும். எல்டிடிஇ மீதான தடை இன்னும் நீடிப்பது சரியா என்பது வேறு பிரச்னை. ஆனால், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினால் பிரச்னைதான். அதை எதிர்கொண்டுதான் நம்முடைய கொள்கையை அரசிடம் முன்வைக்க வேண்டும். உடனே அதைக் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான விஷயமாக்குவது விஷயத்தை திசை திருப்புவதாகும்.

தவிர, சீமான் போன்றவர்களுக்கெல்லாம் கருத்துச் சுதந்திரம் பற்றி பேசும் தகுதி இருக்கிறதா என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் குஷ்பு, பாதுகாப்பான செக்ஸ் பற்றி சில ஆரோக்கியமான கருத்துக்களைச் சொன்னபோது, கொதித்தெழுந்து தமிழ்நாடு முழுக்க வழக்கத் தொடர்ந்தார்கள். மொத்தம் 27 வழக்குகள். இத்தனைக்கும் அந்தக் கருத்து பகுத்தறிவு சார்ந்து சொல்லப்பட்ட கருத்து. அதைத் “தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி தவறாகப் பேசிய குஷ்பு” என்று குறிப்பிட்டு அவரைப் பல மாதங்களுக்கு நீதிமன்றங்களில் இழுத்தடித்தார்கள். அதைச் செய்தவர்களை வலுவாக ஆதரித்தவர் சீமான். குஷ்புவுக்கு இல்லாத கருத்துச் சுதந்திரம் இவருக்கு மட்டும் வேண்டுமாம். இதற்கு நடுவில் தனித் தமிழ்நாடு கோரிக்கை வேறு. பசும்பொன் மாதிரி ஜாதி வெறியைத் தூக்கிப்பிடிக்கும் படங்களை எடுக்கும் இவர்கள் கையில் தனியாக ஒரு தமிழ்நாடு கிடைத்தால், கதை அதோடு கந்தல்தான்.