வி.பி. சிங் என்றவுடன் மனதில் உடனடியாக இரண்டு பிம்பங்கள் தோன்றும். அந்த இன்னொரு பிம்பம் தீக்குளிக்கும் தில்லி மாணவர் ராஜீவ் கோஸ்வாமியினுடையது. பிற்படுத்தப்பட்ட ஜாதியினைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி. சிங் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில்தான் இந்தத் தீக்குளிப்பு நாடகம் (இங்கே கமிஷன் என்ற வார்த்தையை சத்தமாக உச்சரிக்கக்கூடாது. டி.ஆர். பாலு, அ. ராசா, அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் ஒடிவந்துவிடுவார்கள்). வி.பி. சிங் உறுதியுடன் அதை நிறைவேற்றினார்.
வி.பி. சிங் எங்கே, எப்போது பிறந்தார் என்ற தகவல்களைவிட அவர் இந்திய அரசியலில் செலுத்திய பங்களிப்பு குறித்தே இந்த சிறு பதிவு. இந்திய அரசியலில் காணாமல் போயிருந்த தார்மீகம் சார்ந்த, அறம் சார்ந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பித்தவர் வி.பி. சிங். போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ரூ. 60 கோடி லஞ்சமாகப் பெற்றதாக ராஜீவை உலுக்கியெடுத்தார் (மத்திய அமைச்சர் மாண்புமிகு அ. ராசா ரூ. 60,000 கோடி அடித்த தகவல் வெளிவந்த காலத்தில் நல்லவேளையாக நினைவிழந்துகிடந்தார் மனிதர்). ராஜீவுக்கும் அந்த நேரத்தில் அறிவு இல்லை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முதலில் வந்த போபர்ஸிடமிருந்து 60 கோடியை வாங்கிக்கொண்டோம் என்று அண்ணன் ராசா வழியில் போயிருக்கலாம். அந்த நேரத்தில் புத்தியை எங்கேயோ அடகு வைத்துவிட்டார் ராஜீவ். இந்த விவகாரமே வி.பி. சிங்கிற்கு பிரதமர் பதவியைப் பிடித்துத் தந்தது. கூட்டணி அமைச்சரவையில் ஒரு எம்பியைக்கூட வெல்லாத தி.மு.கவிற்கும் மந்திரி பதவியளித்து, கூட்டாட்சித் தத்துவத்தில் தனக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார் வி.பி. சிங்.
மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது அவரது மற்றொரு சாதனை. அவரது இந்த நடவடிக்கை வட இந்திய அரசியலின் முகத்தையே மாற்றியமைத்து. பிற்படுத்தப்பட்டவனா, தலித்தா.. இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியதுதான் என்று நமக்கு சர்வசாதாரணமாகத்தான் தோன்றுகிறது. வட இந்தியாவில் வாழும் இந்தி பேசும் உன்னதம் மிக்கவர்களுக்கு இன்றுவரை அதன் தாத்பர்யம் புரியவில்லை. அப்படியிருக்கையில் 1990லேயே, கடும் எதிர்ப்புக்கு இடையில் இதை அமல்படுத்தினார் சிங். போபர்ஸ் ஊழலை அம்பலப்படுத்தியது தான் ஆட்சிக்கு வருவதற்காகத்தான்; மண்டல் கமிஷனை நிறைவேற்றியது பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான் என்றெல்லாம் வியாக்கியானம் பேசலாம். ஆனால், இதைச் செய்யும் துணிவு வேறு யாருக்கும் இல்லை என்பதுதான் இதில் முக்கியம். தேசிய அரசியலில் காங்கிரஸின் பிடி வலுவிழந்தது. பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்கள் அரசுப் பணிகளில் சேர்ந்தார்கள். ஆனால், யாரும் எதிர்பாராத ஒன்றும் நடந்தது. அதுதான் பா.ஜ.கவின் வளர்ச்சி.
நாட்டைத் துண்டுபோடும் நோக்கத்தோடு அத்வானி ரத யாத்திரையைத் நடத்தியபோது, அவரைக் கைது செய்து தடுத்து நிறுத்தினார் வி.பி. சிங். அதற்குப் பிறகு தன் ஆட்சி நிலைக்காது என்று தெரிந்தும் இைதச் செய்தார். “உத்தமர் அத்வானியின் அமைதியான யாத்திரையை நான் தடுத்து நிறுத்துவேன்; இந்த ஆட்சி கவிழும் என்று சில கோட்டான்கள் மனப்பால் குடிக்கின்றன. பெரியாரின் வழி வந்தவராம் வாஜ்பாயி, அண்ணாவின் வழி வந்தவராம் அத்வானி ஆகியோர் மதவாதத்தை நாடுவார்கள் என்பதை இந்த நாடு நம்பாது” என்றெல்லாம் புருடா விடாமல் கைது செய்தார் (கைது செய்தது அப்போது பிஹார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ்). இவரது அரசு கவிழந்தது.
நிதி அமைச்சராக இருந்தபோது தீருபாய் அம்பானியையும் அமிதாப் பச்சனையும் ஆட்டி வைத்தது, சம்பல் பகுதியில் நடந்த கொள்ளைகளுக்குப் பொறுப்பேற்று உத்தரப் பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது, பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த நடவடிக்கைக்காக இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் மன்னிப்புக் கேட்டது, இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையிலிருந்து திரும்ப அழைத்தது போன்றவை அவருடைய பிற குறிப்பிடத்தக்க செயல்கள். 1996ல் பிரதமர் பதவி தேடி வந்தபோது, அதை மறுத்தது மற்றொரு புத்திசாலித்தனமான, சரியான நடவடிக்கை. படுக்கையில் விழும்வரை பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த வி.பி. சிங், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் இதில் ஆச்சரியம். மக்கள் போராட்டங்களிலிருந்து கிளைத்தெழுந்த ஒரு தலைவனாகவே தன் கடைசி நாட்களில் இருந்தார். ஆனால், பணத்தை அடுக்கும் வேலையில் இருக்கும் நம் தலைவர்கள் இவரது மறைவை கண்டுகொள்ளவேயில்லை என்பதுதான் ஆத்திரமடைய வைக்கிறது.
