January 2009


போன வாரம் மங்களூரில் ஒரு பப்பில் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களை ஸ்ரீ ராம சேனா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கியது. கலாச்சாரத்திற்கு எதிரான செயல் என்று காரணமும் சொன்னார்கள். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய மாநில பா.ஜ.க. அரசுக்கு பல நாட்கள் பிடித்தன. “பப் கலாச்சாரத்தை ஏற்க முடியாது” என்று அறிவித்தார் மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா. பா.ஜ.க.விடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? ஆனால், ஆச்சரியம் தருவது இங்கிருக்கும் அரசியல் கட்சிகளின் மௌனம்தான். தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளிலிருந்து வி.சி.க. போன்ற சிறிய கட்சிகள் வரைக்கும் இதைப் பற்றி வாயையே திறக்கவில்லை. 

31ந் தேதி தி இந்து நாளிதழில் அன்புமணி இதுகுறித்து வெளியிட்ட ஒரு கருத்து வெளிவந்திருக்கிறது. அதாவது பப் கலாச்சாரம் குடிப்பதை ஊக்குவிப்பதால், இவர் அதை எதிர்க்கிறாராம். அவர் இப்படிச் சொல்லாவிட்டால்தான் ஆச்சரியம். பா.ம.க. மட்டுமில்லை, தமிழ் தேசியவாதம் பேசும் எல்லாக் கட்சிகளுமே இம்மாதிரி நிலைப்பாட்டைக் கொண்டவைதான். இவர்களின் கை ஒங்கும்போது, இக்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நிச்சயம் இம்மாதிரித் தாக்குதல்களில் ஈடுபடுவார்கள். தமிழ் தேசியவாதக்காரர்களைக் கூர்ந்து கவனித்தால் சில ஒற்றுமைகள் புலப்படும். அவையாவன: 1. ஏதாவது ஒரு ஜாதிக்கு ஆதரவான செயல்பாடு பட்டும்படாமலும் இருக்கும், தனிப்பட்ட மட்டத்திலாவது. 2. நம்முடைய கலாச்சாரம் என்று எதையாவது ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். 3. இவர்களை விமர்சிப்பவர்கள் எல்லோரையும்  தமிழினத் துரோகி என்பார்கள். 4. பெண்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் பற்றி அவ்வப்போது பேசுவார்கள். 5. தம்மை ஏற்காத கலை, கலாச்சார அமைப்புகளைத் தாக்குவார்கள். விடுதலைப் புலிகள் ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் திரைப்படங்களுக்கு 4 கட்ட தணிக்கை இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். 

 

தமிழ்த் தேசிய வாதிகளின் கையில் அதிகாரம் கிடைக்கும்போது அவர்களும் இதையே செய்வார்கள். தமிழையோ, அதன் கலாச்சாரத்தையோ காப்பாற்றுவதற்காக அல்ல; அதன் பெயரால் சொத்து சேர்க்க, வேண்டியதை அனுபவிக்க. கடந்த பத்தாண்டுகளில் பா.ம.க சேர்த்திருக்கும் சொத்தும் பணமும் இதையே சுட்டிக்காட்டுகின்றன. 

முதலில் ரிலையன்ஸை எதிர்த்தார் ராமதாஸ். பிறகு பான்பராக். பிறகு கோக். இப்போது சிகரெட், மது. ரிலையன்ஸ், கோக், பான்பராக் போன்றவை இல்லாமல் போய்விட்டனவா? அதை எதிர்த்து ஏன் தொடர் போராட்டங்கள் நடப்பதில்லை? இதன் பின்னணியில் இப்பது மக்களின் ஆரோக்கியம் சார்ந்த கரிசனம் மட்டும்தானா? இதைக் கேட்டால் தமிழின விரோதி என்பார்கள். 

எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு குறிப்பிட்ட இனக்குழுவானது தம்முடைய உரிமைகளைக் காப்பாற்ற தனி நாடு முழக்கத்தை எழுப்பி போராடி வருவது தொடர்ந்து நடந்துவருகிறது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு வளமான முதல் 4 மாநிலங்களுக்குள் இருந்து வருகிறது. உரிமைப் பிரச்னை ஏதும் புதிதாக எழவில்லை. 

ஆகையால் இம்மாதிரி தமிழ்த் தேசியவாதம் பேசுபவர்களுக்கு “தமிழ்க் கலாச்சாரம்” என்ற ஒன்றைப் புதிதாகக் கட்டமைத்து அதை முன்னிறுத்தி குரலெழுப்ப வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கலாச்சாரம் சுதந்திரமான ஒன்றாக இருப்பதால், ஒடுக்குமுறைகள் நிறைந்த ஒன்றை இவர்கள் தமிழ்க் கலாச்சாரமாக முன்வைப்பார்கள். ஒட்டுமொத்த தமிழகமும் ஜாதி அடக்குமுறைக்கு எதிராக இருந்தால் இவர்கள் அதை ஆதரிப்பார்கள். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும்; அவரது பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என திருமாவளவன் கோரியதை கவனிக்கலாம். இத்தனைக்கும் விமான நிலைய விரிவாக்கத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும் நிலங்கள் அனைத்தும் தலித்துகளுக்குச் சொந்தமானவை. இருந்தும் திருமாவளவன் தேவர் பெயரை எதற்கு முன்வைக்கிறார்? ஒரு பெரிய ஜாதிக்கூட்டத்தின் ஆதரவை இழந்துவிடக்கூடாது என்பதற்காக.

யோசித்துப் பார்த்தால், ராமதாஸ், சீமான் கூட்டத்தைவிட கருணாநிதியும் ஜெயலலிதாவும் பலமடங்கு பரவாயில்லை என்று தோன்றுகிறது.

1.

பள்ளிக்கூட நினைவுகள்

பாதியில் கலைவதில்லை

இப்போது எதிர்ப்பட்டாலும் 

கேட்கிறாய்

கடலை மிட்டாய் 

வாங்கிக் கொடுத்த

கடனை.

 

2.

முறுக்குவித்த கோவிந்தம்மாளுக்கு 

அப்போதே வயது 60.

இப்போதோ 

80.

முறுக்கு விலை 

ஏறும்போது

சேர்ந்தே ஏறுகிறது 

வயதும்.

 

3.

கவிதை என்பது

பித்தனின் உளறல்

கவிதை என்பது 

காதலின் ஆன்மா

கவிதை என்பது

இரண்டாம் ஆட்ட சினிமா

கவிதை என்பது

குளிர்ந்த பீர்

கவிதை என்பது

ஆஃபரில் கிடைக்கும் பீஸா

கவிதை என்பது

600 காப்பிகள் அடிக்க உதவும் எழுத்து

கவிதை என்பது

விசிட்டிங் கார்ட்

கவிதை என்பது

கவிஞனின் திமிர்

கவிதை என்பது

இல்லாத ஒன்று.

எஸ்ராஜெயமோகன் தமிழின் சீரியஸ் எழுத்தாளர்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி ரொம்ப அதிகம். அசோகமித்திரன் ஒரு விதிவிலக்கு. இப்படி ஒரு அபிப்பிராயம் மனதில் பதிந்து போயிருக்கையில், நண்பர் ஒருவர் அனுப்பிய லிங்கிற்குப் போய் பார்த்தேன். அவர் சுட்டியது ஜெயமோகனின் வலைபதிவை. அதில் எஸ். ராமகிருஷ்ணனைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார், பாருங்கள்.. அந்த ஒரு கட்டுரைக்காகவே அவருக்கு ஞானபீடம் கொடுக்கலாம். அந்தப் பதிவை காப்பியைக் குடித்துக்கொண்டே படித்தேன். மூன்றாவது பாராவிலேயே புரையேறி மானிட்டர் முழுக்க காப்பி. ஜெயமோகனைப் பற்றி உங்களுக்கு என்னவிதமான எண்ணம் வேண்டுமானாலும் இருக்கலாம். அதை ஒருபக்கம் வைத்துவிட்டு இதைப் படியுங்கள். தமிழ் இலக்கிய உலக அரசியல் பற்றி சிறிது பரிச்சயம் இருந்தால், கட்டுரையை வெகுவாக ரசிப்பீர்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்ஜாய்!