செல்போனில் ஒரு அழைப்பு வருகிறது. எடுத்துப் பேசினால் நடிகர் மாதவன். நான் நடித்திருக்கும் வாழ்த்துகள் படத்தைப் பாருங்கள் என்கிறார். விளம்பரம்! சினிமா வெளியீடும் அதன் விளம்பர யுத்திகளும் எந்த அளவுக்கு மாறிவிட்டன? செல்போனில் வந்த விளம்பரம் உண்மையி்ல் எனக்கு ஒரு எதிர் மனநிலையை உருவாக்கியது. இப்படி நம்மைத் தொந்தரவு செய்து, விளம்பரத்தைத் திணிக்கும் இந்தப் படத்தைப் பார்க்கவேகூடாது என்று தோன்றியது (படத்தை இயக்கியிருப்பது சீமான் வேறு!).

தேடி வந்த திரையரங்கு
80களின் துவக்கம். இரவு ஒரு ஏழு-ஏழரை மணி வாக்கில் ஒரு பேண்டு வாத்தியச் சத்தம் கேட்கும். புத்தகத்தைப் போட்டுவிட்டு எல்லோரும் ரோட்டுக்கு ஓடிவருவோம். முதலில் ஒரு பேண்டு வாத்தியக்காரன் பேண்டு அடித்துக்கொண்டு செல்வான். அடுத்ததாக ஒரு பெண் பெட்ரமாக்ஸ் லைட்டைத் தூக்கிச் செல்வார். அடுத்ததாக அந்த வாகனம் வரும். இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்ட (பார்க்க வரைபடம்) அந்த வாகனம் வரும். ஒரு பெரிய தகரம். அதைச் சுற்றி பிரேம். இரண்டு சக்கரங்கள் இதுதான் அந்த வாகனம். இதன் இரண்டு பக்கமும் வரவிருக்கும் அல்லது அப்போதுதான் ரிலீஸாகியிருக்கும் படங்களின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். இது போல குறைந்தது இரண்டு வண்டிகளாகவது வரிசையாக வரும். இந்த வண்டிகளின் பொற்கால யுகத்தில் அதாவது 82-83ல், ரிலீஸாகும் படத்தைப் பற்றிய விவரங்களுடன் கூடிய சாணித் தாளில் அடிக்கப்பட்ட நோட்டீஸை ஒருவர் கொடுத்துக் கொண்டே போவார். எங்களைப் போன்ற சின்னப் பையன்களுக்கு கொடுக்க மாட்டார்கள். “அண்ணே.. அண்ணே…” என்று கெஞ்ச வேண்டும். அந்த நோட்டீஸில் சில சமயங்களில் படத்தின் ஸ்டில் போக கதை, நடிகர்கள், இயக்குனர் விவரங்கள் இடம் பெற்றிருக்கும். பல சமயங்களில் கதை இல்லாமல் இந்த விவரங்கள் இருக்கும். எப்படியிருந்தாலும் அந்த நோட்டீஸைப் படிப்பது சுவாரஸ்யமான விஷயம்.
மதுரையின் மத்தியப் பகுதியில் அல்லது அதைச் சுற்றியிருந்த சென்ட்ரல், தேவி, நியூ சினிமா, சிட்டி சினிமா, சக்தி, சிவம் போன்ற தியேட்டர்களின் விளம்பரங்கள் மட்டுமே வடக்கு மாசி வீதியில் வரும். பிறகு, நோட்டீஸ் கொடுக்காமல் வாகனங்கள் மட்டும் ஒன்றிரண்டு ஆண்டுகள் வந்தன. பிறகு வடக்கு மாசி வீதியில் போக்குவரத்து அதிகரிக்க, அதிகரிக்க 80களின் மத்தியிலேயே இந்த விளம்பர வாகனங்கள் வருவது நின்றுவிட்டது. நகரம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியே விளம்பரம் செய்துவிடலாம் என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருக்க வேண்டும்.
செல்போனில் நடிகர்களே வந்து படம் பார்க்கச் சொல்லும் கால கட்டத்திலும் அந்தத் தகர விளம்பர வண்டியே இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கிறது. இதற்கு என் பழமை மோகம் மட்டும் காரணம் இல்லை என்று தோன்றுகிறது. அதிலிருந்த ஒரு பாமர எளிமையும் சினிமா பார்க்கும் வாய்ப்பு குறைவாக இருந்த காலகட்டத்தில் சினிமா திரை போன்ற அந்த வாகனமே எங்களைத் தேடி வருவதுமே எங்களை ஈர்த்திருக்க வேண்டும்.
July 8, 2009 at 12:51 am
மீண்டும் மதுரையை சார்ந்து ஒரு நல்ல பதிவு. மாறி வரும் விளம்பர உத்திகள் எப்படிப்பட்ட எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
July 8, 2009 at 7:58 am
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
July 8, 2009 at 7:37 am
ரேடியா, டி.வி., ஹோர்டிங்குகள் போன்றவை வரும்போது இந்த மாற்றங்களைத் தவிர்க்கவே முடியாது, நாம் அவற்றை எவ்வளவுதான் வெறுத்தாலும். காலத்தின் கட்டாயம். ஆனால் சில விஷயங்கள் அநியாயமாகக் காணாமல் போய்விட்டன. உதாரணமாக, பெரிய கம்பில் ஜவ்வு மிட்டாயை சுற்றிக்கொண்டு தெருவில் விற்று குழந்தைகளுக்கு ஜவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டிக்கொடுப்பவர். ஜவ்வு மிட்டாயை வாங்கும் சுவாரசியத்தை எக்ளேர்ஸாலோ மஹா லாக்டோவாலோ ஈடுகட்ட முடியாது. ஒன்றை அழித்துதான் இன்னொன்று வர வேண்டியிருக்கிறது.
எங்கள் ஏரியாவில் காலையில் சாய்பாபா பாட்டு பாடிக்கொண்டு தினமும் ஒரு தள்ளுவண்டி வருகிறது. இந்த மாதிரி இம்சைகளிலிருந்து மட்டும் விடிவுகாலம் கிடைக்கப்போவதில்லை.
July 8, 2009 at 7:56 am
சமீபத்தில் இந்த ஜவ்வு மிட்டாய்காரரை எங்கேயோ பார்த்தேன். ஆனால், இந்த மாதிரி எப்போதோதான் பார்க்க முடியுமே தவிர, ரெகுலராக கண்ணில் பட மாட்டார் என்பது நிதர்சனம். மஹா லாக்டோவைத் திட்டாதீர்கள். ஆதித்யா சேனலில், “Its a good hobby” என்று சொல்லும் குண்டு பெண்மணி உங்களிடம் கோபித்துக்கொள்வார். அவரைப் பொறுத்தவரை, “Its a good food”.
உங்கள் வீட்டருகில் வரும் சாய்பாபா வண்டியைப் பற்றிச் சொன்னீர்கள்.. காலையில் எங்கள் வீட்டில் கதவைத் திறந்தால் பச்சைக் கலரில் ஒரு ராமர் நிற்கிறார். என்ன செய்வது?