நடிகர்கள்: ஆர்.கே., நெப்போலியன், பானு, லால், வடிவேலு, மணிவண்ணன், சோனா, சுகன்யா, ரஞ்சிதா, சரவணன்; இயக்கம் இசை: இளையராஜா; எஸ்.பி. ராஜகுமார்.

அன்பு நாயகன் ஆர்.கேவும் தூரத்தில் பேரழகி பானுவும்

அன்பு நாயகன் ஆர்.கேவும் தூரத்தில் பேரழகி பானுவும்

தூண்டில், எல்லாம் அவன் செயல், மஞ்சள் வெயில் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ஆர்.கேவுக்கு உண்மையில் இதுதான் முதல் படம். தனக்கு என்ன மாதிரி பாத்திரம் சரியாக வரும் என்று உணர்ந்து அம்மாதிரி ஒரு கதையில் நடித்திருக்கிறார் ஆர்.கே.

ஆர்.கேவும் நெப்போலியனும் அண்ணன் – தம்பிகள். ஆர்.கே. குடித்துவிட்டு ஊதாரித் தனமாகத் திரிகிறார். ஆர்.கேவுக்கு திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் நெப்போலியன். ஆனால், யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். இதற்கிடையில் லால் குடும்பமும் நெப்போலியன் குடும்பமும் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். பிறகு ஆர்.கேவைக் காதலிக்கிறார் பானு. திருமணம் நடக்கவிருக்கும் நேரத்தில் லாலின் தங்கை அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துகிறார். லாலும் நெப்போலியனும் ஏன் மோதிக் கொள்கிறார்கள், திருமணம் நடக்கிறதா என்பதுதான் கதை.

கதையிலும் திரைக்கதையிலும் எந்தப் புதுமையும் இல்லை. வழக்கமான பொத்தாம் பொதுவான கிராமம், இரு குடும்பங்களுக்கிடையில் பகை, கோவில் திருவிழா, பஞ்சாயத்து, கதாநாயகனுக்கு மாமனாக காமெடியன் என பல படங்களில் பார்த்துச் சலித்த செட் அப்தான். ஆனால், ஒரு பாட்டு, ஒரு சண்டை, பிறகு காமெடி, அப்புறம் சென்டிமெண்ட் என்று காட்சிகளை அடுக்கப்பட்டிருக்கும் வரிசையால் முதல் பாதி எந்தப் பிரச்னையும் இல்லாமல் நகர்கிறது. இரண்டாம் பாதியில் ஆர்.கேவின் கல்யாணம் நிற்கும்போது, படமும் முன்னேறாமல் தடுமாறுகிறது. ஃப்ளாஷ்பேக், பெரிய சண்டை என்று இழுத்துக் கொண்டே போகும் படம், எப்போது முடியும் என்று தோன்ற வைக்கிறது. வடிவேலுவின் காமெடி பரவாயில்லை ரகம். சுகன்யா, ரஞ்சிதா என்று பழைய நடிகைகளை ஒரு சில காட்சிகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் (சுகன்யா நடித்திருக்கும் ஆர்.கேவின் இரண்டாவது படம் இது).

தனது முந்தைய படங்களில் ஆர்.கே. சீரியஸாக நடித்துக் கொண்டிருக்கும்போது, பார்ப்பவர்களுக்கு காமெடியாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் பாஸ் மார்க் வாங்குகிறார். “தமாஷ்” என்ற வார்த்தையை மட்டும் தொடர்ந்து “தமாஸ்” என்றே உச்சரிக்கிறார்.

கதாநாயகியாக வரும் பானுவுக்கு காதலித்து, டூயட் பாடி, தாலி கட்டிக்கொள்ள வேண்டிய வேலை. என்ன செய்ய முடியுமோ செய்திருக்கிறார். ஆனால், க்ளோஸ் அப் காட்சிகளில் பயமுறுத்துகிறார். வடிவேலுவின் காதலியாக சில காட்சிகளுக்கு வரும் சோனாவை படத்தில் சேர்க்கும்போதே, கவர்ச்சிக்காக என்று சொல்லியே சேர்த்திருப்பதால், அவரும் வஞ்சனையில்லாமல் கொடுத்த பணியைச் செய்துவிட்டுப் போகிறார்.

இசை இளையராஜா. மூன்று பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. அதற்காக டைட்டில் சாங்காக ஒரு தத்துவப் பாடலை வைத்து, அதை அவரையே பாட வைத்திருக்க வேண்டுமா? (ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியதை நினைத்து, “சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்” என்று சொல்வது மாதிரியான பாடல் இது.)

முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு பிற்பாதியிலும் இருந்திருந்தால், ஆர்.கேவுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் கிடைத்திருக்கும்.