வடக்கு மாசி வீதியில் ஞாயிற்றுக் கிழமைகளின் மதியப் பொழுதுகள் சுவாரஸ்யமற்றவையாகவே செல்லும். சிறுவர்களாக இருந்தால் சாலையை பிட்ச்சாக மாற்றி கிரிக்கெட் விளையாடலாம். 17-18 வயதில் இருப்பவர்கள் இப்படி விளையாட விரும்பமாட்டார்கள். ஆனால், பொழுது போக வேண்டுமே… நேராக ஓயின் ஷாப்பிற்குப் (டாஸ்மாக்) போவார்கள். அங்கேயே சரக்கை வாங்கி குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து படுத்துவிடலாம். ஆனால், அப்படிச் செய்துவிட்டால் என்ன சுவாரஸ்யம்? அதனால், பாட்டிலை வாங்கிக்கொண்டு நேராக வடக்கு மாசி வீதிக்கு வருவார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் வடக்கு மாசி வீதியில் ஒரு ஒயின் ஷாப்பும் கிடையாது என்பதுதான். இப்போதும் கிடையாது. அதனால், வேறெங்காவது இருந்துதான் வாங்கிவர வேண்டும்.
நேராக புளியோதரை கடைக்கு வருவார்கள். அது ஒரு வெற்றிலை – பாக்குக் கடை. அந்தக் கடையை ஆதிகாலத்தில் துவக்கியவரின் பெயர் புளியோதரை. அதனால், அந்தப் பெயரே இப்போது வரை நிலவிவந்தது. இப்போது கடையை வேறொருவர் வைத்திருந்தார். அவரும் அவருடைய மாமனாரும் அந்தக் கடையைக் கவனித்து வந்தார்கள். இந்தக் கடையை “வெளங்காத பய கட” என்றுதான் சொல்வார்கள் மக்கள். காரணம், எதுவும் அங்கே உருப்படியாகக் கிடைக்காது. மூக்குப் பொடிகூட 25 பைசாவுக்கு வாங்கினால், 20 பைசாவுக்கு உண்டான பொடிதான் இருக்கும். சர்பத் கிளாஸை சரியாக கழுவ மாட்டார்கள். இந்தக் கடைதான் ஞாயிற்றுக் கிழமை மதியக் காட்சிக்கான அரங்கு.
சரக்கு பாட்டிலோடு வரும் அந்த வடக்கு மாசி வீதி இளைஞன் நேராக அந்தக் கடைக்குப் போய், “கிளாஸை எடு” என்பான். மருமகன் இருந்தால் மறுபேச்சுப் பேசாமல் கிளாஸை எடுத்துக் கொடுத்துவிடுவார். அவன் அங்கேயே வைத்து தண்ணி அடித்துவிட்டு, சைடு டிஷ்ஷாக அங்கிருக்கும் முறுக்கு, தட்டைகளைத் தின்றுவிட்டு, ஒரு கத்திரி சிகெரெட்டையும் ஓசியில் குடித்துவிட்டு போய்விடுவான். இதில் சுவாரஸ்யம் ஏதும் இருக்காது.. ஆனால், அதே நேரம் மாமனார் இருந்துவிட்டாலோ.. கேட்கவே வேண்டாம்.
சம்பாஷனை இப்படி இருக்கும்…
குடிகாரன்: ஏய் மாமா… கிளாஸை எடு… சாப்ட்டுட்டியா.. என்ன கறிக்கொழம்பா..
மாமனார்: கிளாஸும் கிடையாது ஒன்னும் கிடையாது.. போ.. போ…
குடிகாரன்: ஏய்…என்னய்யா குரல் ஒசருது… கிளாஸை எடு.. குடிச்சிட்டுத் தந்திர்ரேன்..
மாமனார்:.. டேய்.. போடா…
குடியாரன் பளாரென ஒரு அறை விடுவான். மாமனார் மறுபேச்சுப் பேசாமல் கிளாசை எடுத்துத் தந்துவிடுவார். குடிகாரன் விடாமல், “சோடாவை எடு” என்பான்.. அப்போதும் ஏதாவது சொல்லி இன்னொரு அறையை வாங்கிக்கொண்டுதான் சோடாவைக் கொடுப்பார்.. சிகரெட்டு.. இன்னொரு பளார்.. கத்திரி சிகெரெட் கைமாறும்.. இன்னொரு பளார்.. “‘டேய். நான் ப்ளூ பேர்டுதான குடிப்பேன்.. கத்திரி சிகரெட்டத் தார… வாங்கினது பத்தலையா…” என்று சொல்லியபடி கடலைமிட்டாய் பாட்டிலைத் தூக்கிப் போட்டு உடைத்துவிடுவான் குடிகாரன். இதற்குள் வேடிக்கை பார்க்க பெரும் கூட்டம் கூடியிருக்கும். சட்டென கடைக்குள் கையைவிட்டு இன்னொரு சோடா பாட்டிலை எடுத்து ரோட்டில் போட்டு உடைப்பான் குடிகாரன். அதுதான் லிமிட். மாமனார் கடையைவிட்டு வெளியில் குதித்து, கடையை வேகவேகமாக மூடிவிட்டு ஓடிவிடுவார்.
குடிகாரன் சட்டென போதை தெளிந்து, வீட்டுக்குப் போய்த் தூங்கிவிடுவார். பிறகு ஒரு ஆறு மணி வாக்கில் குளித்து, விபூதியெல்லாம் பூசி, வெள்ளை வேட்டி – சட்டையில் ஆலயமணி, பார்த்தால் பசி தீரும் போன்ற பழைய படம் ஓடும் தியேட்டர் வாசலில் தென்படுவார். ஏதாவது வண்டி சற்றே பிளாட்பார ஓரமாக வந்தால்கூட, குடிகாரப் பயலுக.. பார்த்துப் போறாய்ங்களா… என்றபடி வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, டீசண்டாகப் படம் பார்க்கப் போய்விடுவார்.
Advertisement