கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே பல ஊடக பெருநிறுவனங்கள் மிகப் பெரிய கருத்துரங்குகளை நடத்திவருவது, பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால், இந்த கருத்தரங்குகள் எப்படி அவற்றின் இதழியல் தரம் எப்படி பாதிக்கப்படுகிறது என கேரவன் இதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் சில பகுதிகள் தமிழில்:

ஹிந்துஸ்தான் டைம்ஸ் மாநாட்டில் பிரதமர் மோதி, எச்டியின் உரிமையாளர் ஷோபனா பார்தியா. இதற்குப் பிறகு பாபி கோஷ் வெளியேற்றப்பட்டார்.
1. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்கள் நடத்தும் கருத்தரங்குகள், மாநாடுகளில் இந்தியாவின் மிகப் பெரிய அரசியல்வாதிகள் முதல் அமெரிக்க துணை அதிபர்கள் வரை கலந்துகொள்கிறார்கள். சமீபகாலமாக பிரதமர் மோதியையும் இம்மாதிரி நிகழ்வுகளில் பார்க்க முடிகிறது. சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸும் டைம்ஸ் குழுமும் நடத்திய இம்மாதிரி இரு நிகழ்வுகளில் நடந்த சம்பவங்கள், இதழியல் அறத்தில் இந்த கருத்தரங்குகள் ஏற்படுத்தும் தாக்கத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
2. மார்ச் மாதம் எகனாமிக் டைம்ஸ் நடத்திய குளோபல் பிசினஸ் மாநாட்டில் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி பிரதமர் கலந்துகொள்ளவில்லை. மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் இதில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிட்டனர். இது டைம்ஸ் குழுமத்திற்கு பெரும் அவமானமாகப் பார்க்கப்பட்டது. பொதுவாக அரசுக்கு எதிராக பெரிய நிலைப்பாடுகளை எதிர்க்காத டைம்ஸ் குழுமத்திற்கு ஏன் இப்படிப்பட்ட புறக்கணிப்பு என்பது பலருக்கும் புரியவில்லை. ஆனால், இதற்கு சில நாட்களுக்குப் பிறகு நடந்த சில நிகழ்வுகள் பல விஷயங்களைப் புலப்படுத்தின. தி எகனாமிக் டைம்சில் அரசுக்கு எதிரான செய்திக் கட்டுரைகளை எழுதிவந்த ரோகினி சிங் அந்த இதழிலிருந்து வெளியேறினார். (இந்த ரோகினி சிங்தான் தி வையர் இணைய தளத்தில் அமித் ஷா மகனின் தொழில் வளர்ச்சி குறித்த கட்டுரையை எழுதியவர்)டைம்ஸ் குழுமத்தின் ரேடியோ சேனல் ஒன்றில் மோடியை கேலி செய்து வெளியாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
3. செப்டம்பர் மாதம் ஹிந்துஸ்தான் குழும உரிமையாளர் ஷோபனா பார்தியா மோதியைச் சந்தித்து, தங்கள் நிறுவனம் நடத்தும் நிகழ்வுக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்தார். இதற்கு சில நாட்களில் ஹிந்துஸ்தான் குழுமத்தின் எடிட்டர் – இன் – சீஃபான பாபி கோஷ் வெளியேறினார். இதற்கு சில நாட்களில், மதம் – ஜாதியின் பெயரால் நடத்தப்பட்டுவந்த குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டுவந்த Hate Tracker என்ற முயற்சியை நிறுத்தியது இந்நிறுவனம்.
4. இதில் எந்த நிறுவனமும் தங்கள் வருமானத்திற்கும் லாபத்திற்கும் மத்திய அரசைச் சார்ந்திருக்கவில்லை. ஆனால், மோதி தங்கள் நிகழ்வில் பங்கேற்கவில்லையென்ற செய்தி, கார்ப்பரேட் உலகில் என்ன மாதிரி புரிந்துகொள்ளப்படும் என்ற அச்சம்தான் மிக முக்கியமானது. கார்ப்பரேட் விளம்பரங்களைச் சார்ந்திருக்கும் நிறுவனங்களுக்கு இது மிக முக்கியமானது. ஒரு அரசு ஊடகங்களைக் கட்டுப்படுத்த விரும்பினால், தனித்தனியாக பத்திரிகையாளர்களை deal செய்வதைவிட, வர்த்தக நிறுவனங்களின் மூலம் ஒட்டுமொத்தமாக அந்த ஊடக நிறுவனத்தையே வளைப்பது எளிது.
5. 2002ல் மோதி முதல்வராக இருக்கும்போதுதான் குஜராத்தில் பெரும் கலவரங்கள் நடந்து இந்து கும்பல்கள் முஸ்லிம்களைக் கொலைசெய்தன. இதற்கு ஒரு வருடத்திற்குப் பிறகு சிஐஐ எனப்படும் இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு கூட்டம் ஒன்றில் மோதி கலந்துகொண்டார். அதில் மோதியை வைத்துக்கொண்டே இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களான ஜாம்ஷெட் கோத்ரேஜும் ராகுல் பஜாஜும் குஜராத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தனர். கடுப்பான மோடி, சிஐஐக்குப் போட்டியாக Resurgent Group of Gujarat என்ற அமைப்பை உருவாக்கி, ஆதரித்தார். அடுத்த மாதமே சிஐஐயின் தலைவர் ஓடிவந்து மோதியிடம் மன்னிப்புக் கேட்டார். இதற்குப் பின் ரத்தன் டாடா போன்ற முன்னணி தொழிலதிபர்கள் அங்கீகரிக்க, தேசிய அளவிலான தலைவராக உயர்ந்தார் மோதி.
2014 தேர்தல் குறித்த ஊடகச் செய்திகளில் 2002 கலவரம் குறித்து பெரிதாகப் பேசப்படவில்லை. மோதி பெரு நிறுவனங்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடத்தைப் பாடம் அப்படி.
6. இம்மாதிரியான ஊடகக் கருத்தரங்குகளில் ஊடகங்கள், பெரு நிறுவனங்கள், அரசு – என மூன்று பெரிய சக்திகள் சந்திக்கின்றன. இது இதழியல் தன்மையையும் அறத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. கேரவான் இதழ் இதேபோன்ற கருத்தரங்கை நடத்தியபோதும் அதற்கும் இதே மாதிரியான அழுத்தங்கள் வந்தன.
7. நியுயார்க் டைம்ஸ் இதழ் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த NYTLive என்ற பிரிவை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது, அதாவது யாரை அழைப்பது, எதைப் பற்றிப் பேசச் சொல்வது என்பனவற்றை NYTLiveன் வைஸ் பிரசிடெண்ட் முடிவெய்வார் என்றாலும் அதை மறுக்கு அதிகாரம் அந்த இதழில் ஆசிரியருக்கு உண்டு. இதழின் அறம் மீது சந்தேகம் வரும் என நினைத்தால் அவர் அதை மறுப்பார். அந்த இதழில் வேலைபார்க்கும் ரிப்போர்ட்டர்கள், உதவி ஆசிரியர்கள் அதில் பங்கேற்க விரும்பவில்லையெனக் கூறமுடியும். இவ்வளவு இருந்தும் இந்த ஆண்டு ஜூனில் வெளிவந்த கொலம்பியா ஜர்னலிசம் ரெவ்யூ, இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடத்துவதன் அபாயம் குறித்து எச்சரித்தது. நடந்த தவறுகளைச் சுட்டிக்காட்டியது.
8. இந்திய ஊடகச் சூழலில் இவ்வளவு புரொஃபஷனலிசம் கிடையவே கிடையாது. இதழியல் அறம் மீறப்பட்டதாக யாராவது சுட்டிக்காட்டினாலும் அது தவறாகவே பார்க்கப்படாது.
9. ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் குழுமம், இந்தியா டுடே ஆகியவற்றில் இம்மாதிரி இதழியல் பிரிவையும் இம்மாதிரி நிகழ்வுகளை நடத்தும் பிரிவையும் தனியாக வைக்கும் போக்கே கிடையாது. பத்திரிகைகளில் பணியாற்றும் இதழியலாளர்கள், இந்த மாநாட்டிற்கான வேலைகளைப் பார்க்கும்படி பணிக்கப்படுவார்கள். ரிப்போர்ட்டர் மட்டத்தில்கூட இதற்காக வேலை பார்க்க வேண்டும். அழைப்பிதழ்களைக் கொண்டு போய் கொடுப்பது, தங்கள் beatல் உள்ள முக்கியஸ்தர்கள் நிகழ்வுக்கு வருவதை உறுதிசெய்வது போன்றவை அவர்களுக்கான பணிகள்.
10. தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்களை அழைப்பதில் ரிப்போர்ட்டர்களுக்கு பெரிய பிரச்சனை இருக்காது. ஆனால், செய்தியாளர் சந்திப்புகளில் யாரை நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்ப வேண்டுமோ அவர்களையே அழைக்க வேண்டியிருக்கும். அந்த நபரோ, தலைவரோ விழாவுக்கு வரும்போது இந்த செய்தியாளர் பக்கத்திலேயே நிற்க வேண்டும். பிறகு, அவர் எப்படி அந்தத் தலைவருக்கு அல்லது நபருக்கு எதிரான செய்தியைக் கொண்டுவருவார்? இதன் மூலம் அரசியல்வாதிகளுக்கும் நிறுவனத்திற்கும் இடையிலான உறவு வளர்வதால், அவர்களுக்கு எதிரா செய்திகளை வெளியிட நிறுவனங்கள் தயங்கும்.
11. அச்சு இதழ்களின் வருவாய் வெகுவாக சரிந்துகொண்டிருக்கிறது. வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது அல்லது அதிகரிக்காமல் அதே இடத்தில் நிற்கிறது. அவை நடத்தும் இணைய தளங்களில் இருந்து பெரிதாக வருவாய் வருவதில்லை. ஆக, நல்ல முறையில் பத்திரிகை நடத்த வேண்டுமென்றால் இம்மாதிரி நிகழ்வுகளும் தேவைப்படுகின்றன. ஆனால், அந்த நிகழ்வில், நாம் எதற்காக இதழியல் பணியில் இருக்கிறோமோ, அதற்கான காரணமே அடிபட்டுப்போகிறது. இந்தப் பின்னணியில், ஊடகங்கள் எப்படி எல்லோரையும் பற்றி செய்திகளை வெளியிடுகின்றனவோ, அதேபோல ஊடக உலகத்தைப் பற்றிய செய்திகளையும் வெளியிட வேண்டும்.
இந்தக் கட்டுரையை எழுதியவர் Hartosh Singh Bal. The Caravan இதழில் அரசியல் பிரிவு ஆசிரியர். ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையின் சுட்டி இது: http://www.caravanmagazine.in/perspectives/high-profile-events-news-organisations-damage-journalistic-independence