வேள் – பாரி: வில்லுப்பாட்டு, கதை

கேசவ ராமசாமித் தேவர் வேள் – பாரி வில்லுப்பாட்டு: T 5411 VELPARIvelpari (1)

Posted in Uncategorized | Leave a comment

வேள் பாரி – அ.மு. பரமசிவானந்தம்

அ.மு. பரமசிவானந்தம் எழுதிய வேள் பாரியின் பிடிஎஃப்vel paari (1)

Posted in Uncategorized | Leave a comment

102 ஆண்டு காலமாக கேட்கும் கைதட்டல் ஒலி

48393007_1416935151771541_5883470794490642432_n

மினர்வா என்ற பூர்வீகப் பெயரைக் கொண்ட பாட்சா தியேட்டரின் பழைய தோற்றம்.

கடந்த ஆண்டு சென்னையின் சினிமா பாரடைசோ என்ற தலைப்பில் சென்னையில் இயங்கிவரும் திரையரங்குகளிலேயே மிகப் பழமையான திரையரங்கான பாட்சா திரையரங்கைப் பற்றி பிபிசியில் எழுதியிருந்தேன். 

அந்தக் கட்டுரைக்காக நான் போய் பார்த்தபோது, மிகவும் பாழடைந்து, குப்பை பொறுக்குபவர்கள், கூலித் தொழிலாளர்களுக்கான திரையரங்காக மாறியிருந்தது. கட்டணம் 20-25 ரூபாய்தான்.

48417202_1416935601771496_4067254044136046592_o

முன்பு பட்சா தியேட்டரில் பாக்ஸ் ஆஃபீஸே கிடையாது. இப்போது இன்டர்நெட் புக்கிங்கே உண்டு.

அந்தக் கட்டுரைக்காக அவரிடம் பேசிவிட்டுப் புறப்படும்போது, திரையரங்கை நடத்திவந்த பாட்சா, “இந்தத் தியேட்டரை டிஜிட்டல் வசதியோட, ஏசி பண்ணி ஓட்டனும்னு பார்க்கிறேன். பார்க்கலாம்” என்று சொன்னார்.

ஆனால், மனிதர் இப்போது செய்தே முடித்துவிட்டார். புத்தம்புது பொலிவோடு காட்சியளிக்கிறது பாட்சா.

தியேட்டரை முழுமையாக புதுப்பித்து, சோனி 4கே புரொஜக்ஷனுடன் குளிரூட்டும் வசதியையும் செய்துவிட்டார். SDC நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து இதைச் செய்திருப்பதாகச் சொல்கிறார் பாட்சா.

48373924_1416935725104817_3478507031076274176_o

பாட்சா தியேட்டரின் பழைய, புதிய முகப்புத் தோற்றம்.

முன்பு 25 ரூபாயாக இருந்த கட்டணம் இப்போது 60 ரூபாய் – 140 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. முன்பு 290 இருக்கைகள் இருந்த இடத்தில் இப்போது 282 இருக்கைகள் குஷன் வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. முன்பு திரையரங்கின் வாசலில் நின்று பாட்சாவே டிக்கெட் கொடுப்பார். இப்போது நவீனமான பாக்ஸ் ஆஃபீஸ் போக புக்மைஷோவில் ஆன்லைன் பதிவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஆனால், முன்பைப் போல குப்பை பொறுக்குபவர்கள், கூலி வேலை செய்பவர்கள் இங்கு வர முடியாது. அவர்கள் வசதிக்கு அப்பாற்பட்ட இடமாக இது மாறிவிட்டது.

48364806_1416935655104824_5683006129412505600_o

பாட்சா தியேட்டர் உரிமையாளர் எஸ்எம் பாட்சாவின் உரிமையாரின் அலுவலக அறை முன்பும் இப்போதும்.

“இனி இங்கிருப்பவர்களை மட்டும் வைத்து படம் ஓட்ட முடியாது. வடசென்னையின் பல பகுதியைச் சேர்ந்தவர்களும் இங்கு குடும்பத்துடன் வரவேண்டுமென நினைக்கிறேன். அதனால், டீசன்டாக வருபவர்களை மட்டும்தான் அனுமதிக்க முடியும். முன்பு கூலித் தொழிலாளர்கள் துண்டுபோட்டு வந்தால் அனுமதித்துவந்தேன். இனி அப்படிச் செய்ய முடியாது. இதில் அவர்களுக்கு வருத்தம்தான். ஆனால், என்ன செய்வது? வேறு வழியில்லை” என்கிறார் பாட்சா.

2006ல் பாட்சா இந்த திரையரங்கை ஐம்பது ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுத்ததிலிருந்து அவர்கள்தான் ரசிகர்கள். அவர்களை அப்படியே விட்டுவிட முடியுமா? “கீழே இரண்டு குடோன் இருந்தது. ஒன்றைக் காலி செய்து பார்க்கிங்கா மாற்றிவிட்டேன். இன்னொன்றை குட்டி தியேட்டராக மாற்றி பழைய படங்களைப் போடலாமென இருக்கிறேன். பழைய பட ரசிகர்களை அப்படியே விட முடியாதே” என்கிறார்.

48376891_1416935665104823_86648684569165824_o

பாட்சா தியேட்டர் உரிமையாளர் எஸ்எம் பாட்சா தன் திரையரங்கின் அலுவலக அறை முன்பும் இப்போதும் எப்படி மாறியுள்ளது என சுட்டிக்காட்டுகிறார்.

பழைய பாட்சா தியேட்டரில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. பேப்பர் பொறுக்குபவர்கள் இரவு முழுவதும் பேப்பர் பொறுக்கி காலையில் கடையில் போட்டுவிட்டு, பகல் நேரத்தை இந்தத் திரையரங்கில் கழிப்பார்கள். அதற்காக மூன்று ஷோவுக்கும் டிக்கெட் எடுப்பார்கள்.

48362718_1416935591771497_3359440268364349440_o

பாட்சா தியேட்டரில் பாழடைந்து கிடந்த இடம் இப்போது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

பழைய பாட்சாவில் ஸ்லைடு வருமானமே நன்றாக வந்தது என்கிறார் பாட்சா. ஒரு ஸ்லைடை மாதம் முழுவதும் இடைவேளையின்போது காண்பிக்க 1200 ரூபாய் வாங்குவார். அதுபோல 20 ஸ்லைடுகளாவது இருக்கும். இதுவே கிட்டத்தட்ட 22 ஆயிரம் ரூபாய் வருவாயாக வரும். “பூமர் பனியன்காரர்கள் ஸ்லைடு கொடுக்கும்போது இலவசமாக பனியன் கொடுப்பார்கள். சமையல் எண்ணைக்கு விளம்பரம் கொடுப்பவர்கள் இரண்டு லிட்டர் எண்ணெய் கொடுப்பார்கள்” என்று சொல்லிச் சிரிக்கிறார் பாட்சா.

48383348_1416935581771498_7815435015096893440_o

முன்பு ஃபிலிமில் இயங்கிய பாட்சா தியேட்டர் இப்போது க்யூப் முறையில் இயங்குகிறது. 

இவர் இப்போது டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டார். அப்படியானால் அவரிடமிருந்த 100க்கும் மேற்பட்ட ஃபிலிம் மூலம் மட்டுமே திரையிடக்கூடிய படங்களின் கதி? “அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இப்போதுகூட சரவணா, பாலாஜி தியேட்டரில் இரண்டு படங்களை வாடகைக்கு எடுத்துப் போகிறார்கள்” என்கிறார் பாட்சா.

நேஷனல் தியேட்டர் என்ற பெயரில் 1916ல் டபிள்யு.எச். மர்ச் என்ற பிரிட்டிஷ்காரரால் இந்த அரங்கம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட காலத்தில் தமிழகத்திலேயே மிக நவீனமான, குளிர்ச்சியான அரங்கம் இதுதான். தமிழகத்தில் முதன் முதலில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அரங்கமும் இதுதான்.

48419832_1416935715104818_7509186705677615104_o

முன்பு ஃபிலிமில் திரையிடும்போதும் இப்போது சோனி 4 கேவில் திரையிடும்போதும்.

1930களின் மத்தியில் இந்த திரையரங்கம் டாண்டேகர் குடும்பத்தின் வசம் வந்தது. அப்போதுதான் நேஷனல் என்ற பெயர், மினர்வா என்று மாற்றப்பட்டது.

இதன் பிறகு பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் நீண்ட காலக் குத்தகைக்கு எடுத்திருந்ததால், தொடர்ந்தும் ஆங்கிலப் படங்களே திரையிடப்பட்டன. 1952ல் பராசக்தி திரைப்படம் இங்கு திரையிடப்பட்டுதான் சென்சார் செய்யப்பட்டது.

48366523_1416935675104822_2179327068108488704_o

பாட்சா திரையரங்கில் முன்பு 290 சீட்கள் இருந்த இடத்தில் இப்போது 282 சீட்கள் இருக்கின்றன.

ஆனால், 1970களின் மத்தியில் சென்னையில் பல இடங்களில் இரண்டு – மூன்று திரையரங்குகளைக் கொண்ட மல்டி – ஸ்க்ரீன் திரையரங்குகள் வர ஆரம்பித்ததும் மினர்வா போன்ற ஒற்றைத் திரை அரங்குகளின் செல்வாக்கு குறையத் துவங்கியது. அதற்குப் பிறகு சில வழக்குகளால் மூடப்பட்டுக் கிடந்த இந்தத் திரையரங்கை 2006ல் பாட்சா குத்தகைக்கு எடுத்தார்.

தமிழ்நாடு முழுவதும் பழைய ஒற்றைத் திரையரங்குகள் இடிக்கப்பட்டுவரும் நிலையில், சென்னையின் ஆகப் பழைய திரையரங்கின் புதிய அவதாரம் மகிழ்ச்சியை அளிக்கிறது.

Posted in தியேட்டர், Uncategorized | Leave a comment

வாஜ்பாய் காலத்தில் ரா தலைவராக இருந்தவர் எழுதிய புத்தகத்தின் மர்மம்

689025-harper-spy-1

The Spy Chronicles: RAW, ISI and the illusions of Peace புத்தகத்தை வெளியிடும்  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.

பின்வருமாறு ஒரு செய்தி சங்கிகளில் வாட்ஸப் குழுக்களில் உலா வருகிறது.

This photo was taken yesterday in Delhi. Now what is special about it?
It has been taken at a 5-star hotel in Delhi, where former Prime Minister Manmohan Singh & former Vice-President Hamid Ansari are releasing a book authored by Pakistan’ ISI’s former Chief Assad Durrani! The same ISI that is hardcore enemy of India and masterminds all attacks on and in India. The same ISI which engineered attack on our Parliament and attacks in Mumbai. Present Indian Government did not give visa to Asad Durrani to attend his book launch. So these patriotic people joined him in video conferencing for releasing the book! Sometimes we wonder if they ever had any feelings for this nation which gave them high positions and put them on pedestal. What a shame to us by these shameless renegades!

இதன் சுருக்கமான அர்த்தம்: “ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மன்மோகன் சிங்கும் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியும் ஒரு புத்தகத்தை வெளியிடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அந்தப் புத்தகத்தை எழுதியது பாகிஸ்தானின் அயலக உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் அஸ்ஸாத் துரானி. அதாவது இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எதிரியான ஐஎஸ்ஐ. இந்திய அரசு இந்த விழாவில் கலந்துகொள்ள அவருக்கு விசா அளிக்கவில்லை. அதனால், இந்த தேசபக்தர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரோடு கலந்துகொண்டு இந்த விழாவில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இவ்வளவு உயரிய இடத்தைக் கொடுத்த இந்த தேசத்தின் மீது ஏதாவது பற்று இருக்கிறதா என்பதே சந்தேகம்தான்”.

30pakistan-spy-jumboஇவர்கள் குறிப்பிடும் இந்தப் புத்தகத்தின் பெயர் The Spy Chronicles: RAW, ISI and the illusions of Peace. ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் அஸ்ஸாத் துரானி, இந்திய அயலக உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவர் ஏஎஸ் துலாத், மூத்த பத்திரிகையாளர் ஆதித்ய சின்ஹா ஆகிய மூவர் இடையிலான உரையாடல்தான் இந்தப் புத்தகம். பின் லேடன் சிறைப்பிடிக்கப்பட்டபோது என்ன நடந்தது, காஷ்மீரில் பதற்றத்தைத் தக்கவைக்க பாகிஸ்தான் என்னவெல்லாம் செய்கிறது போன்ற தகவல்களை இந்தப் புத்தகத்தில் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை எழுதியதற்காக, அவரை பாகிஸ்தான் அரசு விசாரணைக்கு உட்படுத்தியதோடு, நாட்டை விட்டு வெளியேறவும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த புத்தக வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. விழா நடந்தது இந்த ஆண்டு மே மாதம். சங்கிகள் இப்போதுதான் விழித்துக்கொண்டு வாட்ஸப்பில் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். சங்கிகளுக்கு புத்தகம் என்றாலே சற்று அலர்ஜிதானே..

ஆனால், இந்த ஃபார்வர்ட் செய்தியில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ஐஎஸ்ஐ தலைவருடன் இணைந்து புத்தகத்திற்காக உரையாடிய ராவின் முன்னாள் தலைவர் ஏஎஸ் அதுலாத்தின் பெயரே கிடையாது.

இந்த அதுலாத் எப்போது ‘ரா’வின் தலைவராக இருந்தார்? 1999லிருந்து 2000 வரை. அதாவது கார்கில் யுத்தம் நடந்த காலகட்டத்தில் ராவின் தலைவராக இருந்தவர். அப்போது பிரதமர் பா.ஜ.கவைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாயி. 2000ல் ரா தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, வாஜ்பாயின் ஆட்சிக் காலம் முடியும்வரை, 2004 வரை காஷ்மீர் விவகாரங்களுக்கான ஆலோசகராக இருந்தவர்.

ஆக, வாஜ்பாயி அரசில் பாதுகாப்பு அமைப்பில் முக்கியப் பிரமுகராக இருந்தவர், ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவரோடு சேர்ந்து ஏன் புத்தகம் எழுதினார்? பா.ஜ.கவுக்கு இதில் என்ன தொடர்பு? இந்தக் கேள்வியைத்தான் அவர்களைப் பார்த்து நாம் கேட்க வேண்டும்.

Posted in Uncategorized | Leave a comment

முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை

நான் இப்போது சொல்லப்போவது நிஜமாகவே ஒரு த்ரில்லர் கதைதான். ஒரு சிறிய தவறான புள்ளிவிவரம் எப்படி மிக மோசமான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பது குறித்த த்ரில்லர்தான் இந்த கட்டுரை.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணையை முன்கூட்டியே திறக்காமல் நிறையத் தண்ணீர் தேங்கிய பிறகு திறந்ததுதான் காரணம் என ஒரு கட்டுக் கதை கடந்த சில வாரங்களாக சொல்லப்பட்டு வருகிறது. இப்போது இன்மதி இதழில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரை, அதை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நிரூபிப்பதாகக் கூறுகிறது. இதை எழுதியிருப்பவர் ஹிமான்ஷு தாக்கூர்.

ஹிமான்ஷு தாக்கூர் இந்திய அளவில் அணைகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். அதில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவமும் பெற்றவர். அவர் நடத்திவரும் Sandrp.in அணைகள், பருவமழை, வெள்ளம் குறித்து ஏகப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும். ஆனால், அவரே இந்த முறை சறுக்கியிருக்கிறார். எப்படி என்று பார்க்கலாம்.

கேரளாவில் வெள்ளம் எப்படி ஏற்பட்டது, அதில் அணைகளின் பங்கு குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையின் பங்கு என்ன என்பது குறித்து இன்மதி இணைய இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

மிக நீண்ட அந்தக் கட்டுரையை இங்கே படிக்கலாம். https://inmathi.com/2018/08/28/11747/?lang=ta

அந்தக் கட்டுரையில் அவர் சர்ச்சைக்குரிய விதத்தில் சொல்லியிருக்கும் விஷயங்களை சுருக்கமாகச் சொல்கிறேன்.

1. ஜூலை 26ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணை தனது 90 சதவீத கொள்ளளவை, அதாவது 173 மில்லியன் கனமீட்டர் அளவை எட்டியுள்ளது. ஆனால் பருவமழை முடியும் வரை இது நிகழ்ந்திருக்கக்கூடாது. இந்த அளவுக்கு தண்ணீர் நிரம்பிய நிலையில், இந்த அணையைப் பராமரித்து வரும் தமிழக பொதுப் பணித்துறைக்கு, கூடுதல் தண்ணீர் வரவை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இதுவே, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணம்.

2. ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்பட்ட மத்திய நீர் ஆணையத்தின் வாராந்திர அறிக்கைப்படி, அணையின் நீர்மட்டம் 147 அடியாக உள்ளது. அதாவது அணையில் நீர் தேக்கி வைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட முழுக் கொள்ளளவான 142 அடியை விட, 5 அடி கூடுதலாக உள்ளது. மத்திய நீர் ஆணைய அறிக்கையின்படி, அணையின் முழு கொள்ளளவு 867.41 மீ. ஆகஸ்டு 16ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 868.91மீ, அதாவது அனுமதிக்கப்படட் முழு கொள்ளளவை விட 1.5 மீட்டர் (அதாவது 5 அடி) அதிகமாக இருந்துள்ளது.

3. இந்தச் சூழ்நிலையால், ஆகஸ்டு 14ஆம் தேதி இரவு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. அதனால், வண்டிபெரியாறில், அதாவது முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியான பெரியாறு ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெள்ளம் பாய்ந்துள்ளது. அதாவது, உச்சபட்ச வெள்ள அளவை விட, 3.5 மீட்டர் அளவு அதிகம். முழுக் கொள்ளளவுக்கு மேல் நீர்மட்டம் நான்கு நாட்களுக்கு மேல் நீடித்துள்ளது.

4. கேரள அதிகாரியான ஜேம்ஸ் வில்சன் சொல்வது போல இருந்தால், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் அதிகபட்ச நீர் திறப்புத் திறன் 2,200 கன அடி. ஆனால், இந்த அளவின்படி முல்லை பெரியாறு அணையில் இருந்து ஜூல 20லிருந்து ஆகஸ்டு 20ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த காலகட்டத்தில் மின்சார தயாரிப்புக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகபட்சத்தை நெருங்கும் அளவில் இருக்கும். அதாவது மின்சார தயாரிப்புக்காக, பவர் டர்பைன்களில் 1,600 கன அடி தண்ணீரை கடத்த முடியும். இக்காலகட்டத்தில் பெரியாறு அணையிலிருந்து தினசரி எவ்ளவு தண்ணீரை தமிழக பொதுப்பணித்துறை திறந்து விட்டது என்று கேட்பது அவசியம்.

5. வைகை அணை பாசனத்துக்காக ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தமிழக அரசு தண்ணீரை ஏன் திறந்து விடாமல் காத்திருந்தது என்பது மர்மமாக உள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து, பெரியாறு அணைக்குத் திருப்பிவிடப்பட்ட தண்ணீர் தமிழகத்திலுள்ள வைகை அணையை சென்று சேரும். வைகை அணையில் இருந்து முன்னதாகவே தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தால், பெரியாறில் இருந்து அதிக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கும். இது தமிழகத்துக்கும் பயனளித்திருக்கும். அதேவேளையில் வெள்ள நேரத்தில் கேரளாவுக்கு குறைந்த அளவு தண்ணீரே சென்றிருக்கும். ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு முன்னதாகவே வைகை அணையிலிருந்து ஏன் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்ற கேள்விக்கும் தமிழகம் பதில் கூற வேண்டியது அவசியமாகிறது.

இப்போது ஒவ்வொரு கேள்விக்கான பதிலாகப் பார்க்கலாம்.

பதில் 1. ஜூலை 26ஆம் தேதியன்று அணை தனது முழு கொள்ளளவில் 90 சதவீததத்தை எட்டியது. அந்த காலகட்டத்தில் அந்த அளவுக்கு தண்ணீரைத் தேக்கியிருக்கக்கூடாது என்கிறது கட்டுரை. இது ஒரு தவறான தகவல். ஜூலை 26ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.6. இன்னும் ஆறு அடிக்கு தண்ணீரைத் தேக்கலாம். ஆதாரம்: 26 ஜூலை தினமணி மதுரைப் பதிப்பு – படம் 1.

dinamani

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஜூலை 26ஆம் தேதி 135.6 அடியா இருந்தது. ஆதாரம்:  ஜூலை 27, 2018, தினமணி, மதுரைப் பதிப்பு.

அப்படியானால் எங்கே தவறு நேர்ந்தது? ஹிமான்ஷு எங்கே தவறு செய்கிறார்? சென்ட்ரல் வாட்டர் கமிஷனின் (சிடபிள்யுசி) புள்ளிவிவரங்களை வைத்தே அவர் முடிவுக்கு வருவதால்தான் இந்தத் தவறு நேர்கிறது. சென்ட்ரல் வாட்டர் கமிஷன்தானே நாடு முழுவதுமுள்ள அணைகளின் நீர் அளவைச் சொல்ல சரியான ஆணையம் என்று கேட்கலாம். ஆனால், இந்த ஆணையம் முல்லைப் பெரியாறு விஷயத்தில் ஒரு தவறைச் செய்திருக்கிறது.

அதாவது, முல்லைப் பெரியாறு அணையின் உயரம் இந்த CWC இணையதளத்தில் மீட்டரில் கொடுக்கப்படுகிறது. அதுவும் கடல் மட்டத்திலிருந்து அதன் உயரம் கொடுக்கப்படுகிறது. நாம் வழக்கமாக அணையின் உயரத்தை Feet அளவில்தான் அறிந்து பழகியிருக்கிறோம். CWC இணைய தளத்தில் முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 867.41 மீட்டர் எனக் குறிக்கிறது. இது குழப்பத்திற்கு முதல் காரணம்.

இரண்டாவதாக, இந்த 867.41 மீட்டர் என்பது 142 அடியைக் குறிக்கவில்லை. 136 அடியைக் குறிக்கிறது. அதாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முந்தைய அணையின் உயரத்தையே CWC தன் இணையதளத்தில் இன்னமும் குறிப்பிட்டுவருகிறது. அதுதான் இந்த மொத்தக் குழப்பத்திற்கும் காரணம். அது எப்படி என்பதை அடுத்த பதிலில் பார்க்கலாம்.

பதில் 2. ஆகஸ்ட் 16ஆம் தேதி அணையின் உயரம் உச்ச நீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியையும் தாண்டி 147 அடியைத் தொட்டுவிட்டது என்கிறது கட்டுரை. அதற்கு ஆதாரமாக CWCன் புள்ளிவிவரத்தையே அளிக்கிறார் ஹிமான்ஷு. அதாவது அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 868.91 மீட்டர் என்கிறார் அவர். அதாவது 867.41 மீட்டரை 142 அடி என்று கணக்கில் கொண்டு, 868.71 மீட்டரை 147 அடி என்று புரிந்துகொள்கிறார். ஆனால், உண்மையில் ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 142.2 அடிதான்.

முல்லைப் பெரியாறு அணையைப் பொறத்தவரை ஷட்டர் மட்டமே 142 அடிதான். அதற்கு மேல் 20 -30 சென்டிமீட்டர் தண்ணீர் நிற்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்தால் ஷட்டர் மீதே வழிந்துவிடும். 147 அடிக்கு தண்ணீரைத் தேக்க வேண்டுமென்றால் கூடுதலாக ஷட்டர்களை இறக்க வேண்டியிருக்கும். அது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவிடும். அதனால், எப்போதுமே 142 என்ற மட்டத்திலேயே ஷட்டர்கள் இருக்கும். ஆக 147 அடிக்கு தண்ணீரைத் தேக்குவது சாத்தியமே இல்லை.

இதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணை முழு உயரத்தை எட்டியது. அன்றைய தினத்தில் CWC இணைய தளத்தில் இருக்கும் தகவலைப் பாருங்கள். (படம் எண் 2) அப்போதும் 868.76 மீட்டரைத் தொட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆக அப்போதும் அணையின் நீர்மட்டம் 147 அடியை எட்டியதா? இல்லை. அன்றும் 142 அடிக்குத்தான் தண்ணீர் நின்றது. சிடபிள்யுசி இணையதளம்தான் அப்போதும் இப்போதும் update ஆகவில்லை.

CWC 2015

2015ல் முல்லைப் பெரியாறு அணை முழு உயரத்தை அடைந்தபோதும் தவறான தகவலைக் காட்டும் CWC இணைய தளம்.

பதில் 3. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தமிழகம் முல்லைப் பெரியாறு அணையத் திறந்து பெருமளவு தண்ணீரை வெளியேற்றியது என்கிறது கட்டுரை. இது ஒரு தவறான தகவல் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 136.1 அடி. அன்று நீர்ப்பிடிப்புப் பகுதியில் சரியான மழை. தொடர்ந்து அணையில் நீரைத் தேக்கியது தமிழகம். அதனால் அடுத்த நாள் 140.7 அடியைத் தொட்டது நீர்மட்டம். இதில் எங்கே தண்ணீர் திறக்கப்பட்டது? அப்படி யார் சொன்னது?

அப்படியே தண்ணீர் திறக்கப்பட்டாலும் அந்தத் தண்ணீர் நேரடியாக மக்கள் வாழும் பகுதியைச் சென்றடையாதே? இடுக்கி அணைக்குத்தானே போகும்? முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டது ஆக்ஸட் 15ஆம் தேதி. பார்க்க செய்தி இணைப்பு. https://www.maalaimalar.com/News/National/2018/08/15152341/1184008/Kerala-rains-Water-level-at-Mullaperiyar-dam-touches.vpf அதுவும் வெறும் 11,000 கன அடி மட்டுமே. பிரம்மாண்டமான இடுக்கி அணைக்கு இந்த 11,000 கன அடி என்பது ஒன்றுமே இல்லை.

DAM

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 20 வரை முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையின் நீர் மட்டம். ஆதாரம்: தினமணி மதுரைப் பதிப்பு.

 

பதில் 4. ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20வரை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்கப்பட்டதற்கான ஆதாரமே இல்லை என்கிறது கட்டுரை. இதுவும் தவறான தகவல். ஜூலை 25 தேதி பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு அதிகபட்ச நீர் திறப்பு அளவான 2200 கன அடி நீரைத் திறக்க ஆரம்பித்துவிட்டது தமிழகம். இதற்கான செய்தி இணைப்பு இங்கே. https://www.maalaimalar.com/News/District/2018/07/25144106/1179013/water-flow-increasing-to-Periyar-and-Vaigai-dam.vpf ஏன் ஜூன் 11ஆம் தேதியே பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு துவங்கிவிட்டது. செய்தி இணைப்பு இங்கே. https://www.maalaimalar.com/News/District/2018/06/11172408/1169417/Kambam-farmers-rage-for-water-opening-to-Vaigai-dam.vpf கட்டுரையாளர் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஜூலை 26ஆம் தேதியிலிருந்து தற்போதுவரை பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச அளவான வினாடிக்கு 2200 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது என்பதுதான்.

CWC 018

ஆகஸ்ட் 15, 2018ல் அணையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நீர்தேக்கப்பட்டதாக தவறாக குறிப்பிடும் CWC இணைய தளம்.

 

பதில் 5. வைகை அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரை கூடுதலாக வைகையில் தேக்கியிருக்கலாம் என்கிறது கட்டுரை. இதுவும் ஒரு அபத்தமான, தவறான புரிதல். 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு முல்லைப் பெரியாறிலிருந்து வினாடிக்கு 2,200 கன அடிதான் அனுப்ப முடியும். அதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். முன்கூட்டியே வைகையை திறந்திருந்தால், அணை காலியாகி, தண்ணீர் எதற்கும் பயனில்லாமல் போயிருக்கும்.

ஹிமான்ஷு எந்த உள்நோக்கத்துடனும் எழுதியிருப்பார் எனக் கருதவில்லை. ஆனால், அணைகளைப் பற்றி அறிந்தவர், அடிப்படையான ஒரு கேள்விக்கு பதிலை யோசித்திருக்க வேண்டும். அதாவது 142 அடி உயரமுள்ள அணையில் அவர் சொல்வதுபோல 147 அடிக்கு எப்படி தண்ணீர்த் தேக்க முடியும் என்பதுதான் அந்தக் கேள்வி.

ஒரு உணர்ச்சிகரமான பிரச்சனையை நடுநிலையோடுதான் அணுக வேண்டும். ஆனால், நடுநிலை எடுக்க வேண்டுமென்பதற்காகவே தவறான தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தைச் சாடுவது என்ன நியாயம்?

இந்தக் கட்டுரையோடு இணைக்கப்பட்டிருக்கும் படங்களையும் பாருங்கள். முல்லைப் பெரியாறு, வைகை அணையின் தினசரி நீர்மட்டங்களையும் பாருங்கள். ஹிமான்சுவின் கட்டுரை தவறானது எனப் புரியும்.

Posted in Uncategorized | 1 Comment

வட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்?

Mandal-Commission

குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்கிடம் அறிக்கையை அளிக்கும் பி.பி. மண்டல்.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த அறிக்கையை அளித்த பி.பி. மண்டலின் 100வது பிறந்த நாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி கடந்து சென்றது. அதையொட்டி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் Centre for the Study of Social Exclusion and Inclusive Policyயில் துணைப் பேராசிரியராக பணிபுரியும் அரவிந்த் குமார் பி.பி. மண்டலைப் பற்றி The Wire இணைய தளத்தில் எழுதியிருக்கிறார். அந்த நீண்ட கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது.

பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் என்ற பி.பி. மண்டல் 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வாரணாசியில் பிறந்தார். அவருடைய சொந்த கிராமம் பிஹாரின் மாதேபராவுக்கு அருகில் உள்ள முரோ. இந்தியாவில் சமூக நீதி இயக்கத்தின் சின்னமாக பார்க்கப்படுபவர்களில் பி.பி. மண்டலும் ஒருவர். ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் துல்லியமானவகையில் கிடைக்கவில்லை.

ஒரு சூத்திரக் குடும்பத்தில் பிறந்த மண்டல் தர்பங்காவில் உள்ள ராஜ் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போதே ஜாதிக் கொடுமையை அனுபவித்தவர். இவருக்கும் மற்ற சூத்திர மாணவர்களுக்கும் விடுதியில் மதிய உணவு என்பது மற்ற மூன்று வர்ணங்களைச் சேர்ந்த மாணவர்கள் சாப்பிட்ட பிறகே வழங்கப்படும். ஆனால், அந்த வயதிலேயே அதை எதிர்த்துக் கேள்விகேட்டு இந்த வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் அவர்.

எல்லா இந்தியச் சிறுநகரங்களைப் போலேவும் இவரது சொந்த ஊரும் சமூக ரீதியாக, கல்வி, பொருளாதார ரீதியாக பல மனத்தடைகளைக் கொண்ட ஊர்தான். ஆனால், அறிவுமலர்ச்சியில் மலர்ந்திருந்த கல்கத்தாவுக்கு அருகில் இருந்ததால், சிறுவயதிலேயே சமூக மேம்பாடு குறித்து சிந்திக்க ஆரம்பித்தார் மண்டல்.

1941ல் தனது 23வது வயதிலேயே பாகல்பூர் மாவட்ட கவுன்சிலுக்கு எதிர்ப்பின்றி தேர்வுசெய்யப்பட்டார் அவர். இவருடைய தந்தையான ராஷ்பிஹாரி லால் மண்டலும் ஒரு சமூக சீர்திருத்தவாதிதான். இந்திய தேசிய காங்கிரசின் ஆரம்பகால உறுப்பினர்களில் அவரும் ஒருவர். 1952ல் பிஹார் சட்டமன்றத்திற்கு முதன் முதலில் தேர்தல் நடந்தபோது மாதேபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர், சேஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பூபேந்திர நாராயண் மண்டல். தன்னைவிட நாராயண் மண்டலே சமூகரீதியான பார்வையையும் கருத்துக்களையும் சிறப்பாக உருவாக்கக்கூடியவர் என பி.பி. மண்டல் நினைத்தார்.

ராம் மனோகர் லோஹியாவுக்கும் நாராயண் மீது பெரிய மதிப்பிருந்தது. நாராயண் முன்வைத்த சோஷலித்திற்கு ஆதரவளிக்கும்விதமாக அடிக்கடி மாதேபுராவுக்கு வருவார் ராம் மனோஹர் லோகியா. இவை எல்லாம் சேர்ந்தே பிபி மண்டலின் அரசியல் – சமூகப் பார்வையை வரையறுத்தன.
ஒரு முறை பிஹாரில் உள்ள பாபா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரஜபுதன நிலவுடமையாளர்கள் குர்மி கிராமத்தைத் தாக்கினர். இதையடுத்து பிற்படுத்தப்பட்டவர்கள் மீது காவல்துறை அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. அப்போது சட்டமன்றம் நடந்துகொண்டிருந்தது. காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமென்றும் மண்டல் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கட்சி தந்த அழுத்தத்தால் அந்தக் கோரிக்கையை அவர் வாபஸ் வாங்க வேண்டியிருந்தது. அந்த கோரிக்கையை வாபஸ் வாங்கியவர், ஆளும்கட்சி வரிசையைவிட்டுவிட்டு, எதிர்க்கட்சி வரிசையில் வந்து அமர்ந்தார். இது ஆளும்கட்சிக்கு இன்னும் அவமானமாகப் போனது. இதையடுத்து ராம் மனோகர் லோகியாவின் சம்யுக்த சோஷலிசக் கட்சியின் மாநில நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார் மண்டல்.  பிறகு அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்.

பிறகு லோகியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகிய பி.பி. மண்டல், 1967 மார்ச்சில் ஷோஷித் தளம் என்ற கட்சியைத் துவங்கினார். 1968 பிப்ரவரி 1ஆம் தேதி பிஹாரின் முதல்வராகவும் பதவியேற்றார். வடஇந்திய அரசியலில் ஒரு சூத்திர வகுப்பைச் சேர்ந்தவர் முதல்வரானது அதுவே முதல் முறை. இவரது ஆட்சிக் காலத்தில்தான் முதன் முறையாக அமைச்சரவையில் உயர் ஜாதியினரைவிட பிற்படுத்தப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றனர்.

47 நாட்களே நீடித்த இவரது ஆட்சி இந்திய அரசியலில் ஒரு புதிய வெளிச்சத்தையே பாய்ச்சியது. பிற்காலத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வேண்டுமெனச் சொன்ன கன்ஷி ராம், Jiski jitni sankhiya bhari, uski utni hissedari (எந்த எண்ணிக்கையில் ஆட்கள் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம்) என்ற முழக்கத்தை முன்வைத்தார். எண்ணிக்கை ரீதியில் மிகக் குறைவாக இருக்கும் உயர் ஜாதியினர் அரசியல் அரங்கில் கோலோச்சுவதற்கு எதிராக இந்த முழக்கம் முன்வைக்கப்பட்டது.
பல காங்கிரஸ் தலைவர்களின் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட டி.எல். வெங்கடராம அய்யர் கமிஷன் கலைக்கப்பட்டதை எதிர்த்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த மண்டல், மாதேபுரா நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

1974ல் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் சேர்ந்த மண்டல், தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு மீண்டும் 1977ல் ஜனதா கட்சியின் சார்பில் மாதேபுராவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரானார்.
1978 டிசம்பரில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மத்திய அரசு பி.பி. மண்டல் தலைமையில் மண்டல் கமிஷன் என அழைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் கமிஷனை அமைத்தது. கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் ஜாதி ரீதியாக புறக்கணிக்கப்படுபவர்களைக் கண்டறிந்து, மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது. 1980ல் இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 52 சதவீதம் பேர் இருந்தனர்.

ஆகவே, மத்திய அரசுப் பணிகள், பொதுத் துறை நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க இந்த கமிஷன் பரிந்துரைத்தது. எஸ்சி., எஸ்டி ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டையும் சேர்த்து மொத்தமாக 49 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
1980 டிசம்பர் 31ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கிடம் இந்த அறிக்கையை ஒப்படைத்தார் மண்டல்.

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவில் அரசியல் என்பது மண்டலை வைத்தும் கமண்டலத்தை வைத்தும் திரட்டப்படும் அணிகளுக்கு இடையிலான மோதலாகத்தான் இருந்துவருகிறது. ஒரு பக்கம் சூத்திரர்கள், ஆதி சூத்திரரர்கள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒடுக்கப்பட்ட சமூகம். எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இவர்கள்தான் பெரும்பான்மையினர். ஆட்சியில் தங்களுக்கு உரிய இடத்தை அடையப் போராடிவருபவர்கள்.

மற்றொரு பக்கம் இடஒதுக்கீட்டிற்கும் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்படும் வலதுசாரி – இந்துத்துவ ஒடுக்குமுறையாளர்கள்.
1990 ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய முன்னணி அரசின் அப்போதைய பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதாக அறிவித்தார். ஆனால், உடனடியாக இது அமலுக்கு வரவில்லை. 1992 நவம்பரில் இந்திரா சாவ்னே தீர்ப்பு என்று அறியப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் மண்டல் பரிந்துரையை அமல்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து 1993ல் மண்டல் பரிந்துரைகள் அமலுக்கு வந்தன.

ஊடகங்கள் எல்லாம் பொதுவாகச் சொல்வதைப்போல மண்டல் கமிஷன் அறிக்கை என்பது வெறும் இடஒதுக்கீட்டிற்கு மட்டுமானதல்ல. இதர பிற்படுத்தப்பட்டோரிடம் நிலவிய “தாங்கள் எதற்கும் ஆகாதவர்கள்” என்ற எண்ணத்தை இந்த அறிக்கை போக்கியது என்பதுதான் முக்கியமானது.
நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் இடஓதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டுமென அறிக்கை சொல்லவில்லை. ஆனால், இந்த அறிக்கையின் அமலாக்கத்திற்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் வெகுவாக அதிகரித்தது.

அதனால்தான் பிரான்சின் அரசியல் அறிஞர்களில் ஒருவரான கிறிஸ்டோஃப் ஜாஃப்ர்ல், மண்டல் அமலாக்கத்தை “மௌனப் புரட்சி” என வர்ணித்தார்.
மண்டல் கமிஷனின் மற்றொரு முக்கியமான சாதனை முஸ்லிம்களையும் இதர பிற்படுத்தப்பட்டோராக வகைப்படுத்தியதுதான். முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோராக வகைப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் மதச் சமன்பாடு குறித்த புரிதலில் பெரும் மாற்றத்தையே கொண்டுவந்தது.

1982ஆம் ஆண்டு 64வது மாரடைப்பால் காலமானார் மண்டல். “மண்டலின் செயல்பாடுகளே 1990களில் சூத்திரர்களின் ஒரு பகுதியினை அரசியல் உணர்வு கொண்டவர்களாக மாற்றியது. அவர்களுக்கு அதிகாரத்தில் இடமளித்தது. 1960களில் அமெரிக்கக் கருப்பினத்தவருக்கான சிவில் உரிமை இயக்கம் செய்ததைப்போல” என்கிறார் வில்லியன் டால்ரிம்பிள்.

மண்டல் கமிஷன் அறிக்கையில் எழுதப்பட்டிருந்த இந்த வரி மிகவும் முக்கியமானது: “சமமானவர்களுக்கு இடையில்தான் சமத்துவம் பேச முடியும். சமமற்ற நிலையில் உள்ளவர்களை சமப்படுத்திப்பேசுவது மேலும் சமமின்மையை உருவாக்கும்.”

ஒரிஜினல் கட்டுரையின் லிங்க்: https://www.thewire.in/caste/remembering-b-p-mandal-the-man-behind-indias-silent-revolution

Posted in Uncategorized | 1 Comment

செய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன்? – ஏ.எஸ். பன்னீர்செல்வன்

Man-being-lynched-in-India

குற்றங்கள் வெறுப்பின் அடிப்படையில் நடக்கும்போது அதைச் சுட்டிக்காட்டுவது முக்கியமானது.

வெறுப்பு – குற்றங்கள் குறித்துப் பேசினால், அதற்குப் பதிலாக வேறு ஒரு குற்றத்தைச் சுட்டிக்காட்டி, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பது மனிதத் தன்மையற்ற செயல்.

The Hinduவில் வெளிவரும் சில கட்டுரைகளில் பாதிக்கப்பட்டவரின் பாலினத்தையோ, மதத்தையோ, ஜாதியையோ குறிப்பிடுவதற்கு உண்மையிலேயே முக்கியமான காரணங்கள் இருக்கும். சில வன்முறைச் சம்பவங்களில் தலித் பெண், தலித், முஸ்லிம் என்ற வார்த்தைகளை தலைப்பில் ஏன் பயன்படுத்துகிறீர்கள் என சில வாசகர்கள், குறிப்பாக மாணவர்கள் கேட்கிறார்கள்.

உதாரணமாக, பாட்னாவைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர், “ஹரியானாவில் 15 வயது தலித் பெண் ஓடும் காரில் பலாத்காரம் (August 1)” என்ற தலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அந்தப் பெண் வேறொரு ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தால், “பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவி பலாத்காரம்” என்று உங்கள் செய்தித் தாளில் சொல்வீர்களா என்று கேட்டிருக்கிறார். இந்தூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி க்ரடின் சாஸ்திரி என்ற மாணவரும் இதே போன்ற கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

20thREARTGNGG3G4I6CLE3jpgjpg

The Hinduவின் Readers Editor ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

முஸ்லிம்கள் அடித்துக்கொல்லப்படுவது குறித்த செய்திகளை பற்றிக் கேள்வியெழுப்பும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பி.வி. ரமணா என்ற மாணவர், “எல்லா இந்தியர்களும் என் சகோதர சகோதரிகள்” என்ற தேசிய உறுதிமொழியை நினைவூட்டுகிறார். செய்திக் கட்டுரைகளில் ஜாதி மற்றும் மத ரீதியான அடையாளங்களைத் தவிர்க்க வேண்டும்; அவை அடிப்படையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துபவை என்கிறார் அவர். “Temple purified in U.P. after visit by Dalit woman MLA” (August 1) என்ற செய்தியைச் சுட்டிக்காட்டியும் பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதாவது, அந்த செய்திக் கட்டுரை ஜாதிப் பாகுபாட்டைவிட பாலினப் பாகுபாடு குறித்துதானே பேசுகிறது; ஆகவே அந்தப் பெண்ணின் ஜாதியை தலைப்பில் குறிப்பிட்டிருப்பது பொருத்தமில்லாதது என்கிறார்கள் இவர்கள்.

இந்தக் கடிதங்களில் இவர்கள் சுட்டிக்காட்டுவது ஒரே விஷயத்தைத்தான். அதாவது, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைச் சொல்வதன் மூலமாக ஒரே மாதிரியாக இருப்பதிலிருந்து செய்தித்தாள்கள் தவறிவிடுகின்றன என்பதைத்தான். காரணம், ஜாதி இந்துக்கள் பாதிக்கப்படும்போது அவர்களது ஜாதி அடையாளம் குறிக்கப்படுவதில்லை அல்லவா என்று கேள்வியெழுப்புகிறார்கள்.

மிகக் கவனமாக தன் மதிப்பீடுகளைப் பின்பற்றும் ஒரு நாளிதழ், எல்லோரும் சமம் என்ற பார்வையைக் கொண்டிருக்கும் ஒரு நாளிதழ், சமத்துவத்திற்கும் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக இருப்பதற்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்து செயல்படும் என இந்த வாசகர்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக இருப்பது என்ற அம்சம் சமூகத்தில் உள்ள சமத்துவமின்மையை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

ஜாதி என்பது எப்படி படிப்படியான சமத்துவமின்மையை உருவாக்கிவைத்திருக்கிறது என பி.ஆர். அம்பேத்கர் விளக்கியிருக்கிறார். ஜாதீயப் படிநிலையில் கீழே செல்லச்செல்ல கண்ணியமாக நடத்தப்படுவதற்கான போராட்டம் மிகக் கடினமான ஒன்றாக இருக்கும். குற்றம் செய்பவரின் நோக்கம் ஜாதி – மத துவேஷத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் இருக்கும்போது அந்தக் குற்றம் வெறுப்பின் அடிப்படையிலான குற்றம் என சுட்டிக்காட்டாவிட்டால், The Hindu தனது கடமையிலிருந்து தவறியதாகவிடும்.

தங்களுடைய பின்னணியின் காரணமாகக் கிடைக்கும் வசதி-வாய்ப்புகள் – முன்னுரிமைகளால் கிடைக்கக்கூடிய அதிகாரத்தை பயன்படுத்துபவர்களுக்கும் அந்த வசதி – வாய்ப்புகள் – முன்னுரிமைகள் கிடைக்காமல் அவமானப்படுத்தப்படுபவர்களுக்கும் இடையிலான மோதலை புரிந்துகொள்வது மிக முக்கியம். அந்த வசதி – வாய்ப்பு – முன்னுரிமை ஆகியவை அவர்களுடைய ஜாதி, வர்க்கம், இனக் குழு, பாலினம், மதம் ஆகியவற்றால் அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம்.

ஒரு பொறுப்பான பத்திரிகையாளரைப் பொறுத்தவரை மனித கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் எதுவும் செய்தியாகச் சொல்லத்தக்கது. தீமைகளைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கையே ஊடகவியலின் அடிப்படை. ஆட்களை அடித்துக்கொலை செய்வது அல்லது தள்ளிவைப்பது போன்ற அத்துமீறல்கள் நடக்கும்போது களத்திலிருந்து இயங்கும் செய்தியாளரையும் அலுவலகத்திலிருந்து பணியாற்றும் உதவி ஆசிரியரையும் உள்ளடக்கிய பத்திரிகையாளர் அணி, செய்தி சேகரிப்பதிலும் அதனை எடிட் செய்வதிலும் தலைப்பு வைப்பதிலும் மனித கண்ணியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒருவரது சமூக அடையாளத்தின் காரணமாகவே அவரது கண்ணியம் பாதிக்கப்படும் தருணங்களில் மட்டுமே அவரது அந்த அடையாளம் வெளிப்படுத்தப்படுகிறது. ஒரு சாதாரண குற்றத்திற்கும் வெறுப்பால் இழைக்கப்படும் குற்றத்திற்கும் இடையிலான அடிப்படை வித்தியாசத்தை இந்த அணி சுட்டிக்காட்டுகிறது.

எது செய்தி என்ற கேள்விக்கு இவை நம்மை இட்டுச் செல்கின்றன. உண்மை, துல்லியம், இருதரப்புக்கும் இடம்கொடுத்தல், சூழல் ஆகிய எல்லாம் அடங்கிய ஒன்றுதான் செய்தி. வெறுப்பின் அடிப்படையிலான குற்றங்களை மற்ற சாதாரண குற்றங்களிலிருந்து பிரித்துக்காட்டாவிட்டால் அது ஒரு கடமை தவறிய செயலாக இருக்கும். ஒருவர் தன் பிறப்பின் காரணமாகவோ, அடையாளத்தின் காரணாகவோ வன்முறைக்குள்ளாக்கப்பட்டால் அல்லது கொல்லப்பட்டால் அது சட்டத்தை மீறும் செயல். இந்தச் சூழலைத்தான் முடிந்த அளவுக்கு நம்முடைய செய்திக் குறிப்பிலும் தலைப்பிலும் சுட்டிக்காட்ட வேண்டும்.

வெறுப்பின் அடிப்படையிலான குற்றத்தையும் வேறு சாதாரண குற்றத்தையும் ஒன்றாக வைத்து, இதையும் அதையும் ஒப்பிடுவது மனிதத் தன்மையற்ற செயல். இந்த முக்கியமான வித்தியாசத்தை அழிப்பதன் மூலம் நாம் பிரிவினைவாதிகளாகிறோம். மேலும் சமூக இழைகளை அறுக்கும் அடையாளம் சார்ந்த வன்முறையை ஊக்குவிக்கும் ஒரு சூழலையும் உருவாக்குகிறோம்.


August 1ஆம் தேதி The Hindu நாளிதழில் அப்பத்திரிகையின் Readers Editor ஏ.எஸ். பன்னீர்செல்வம் எழுதிய Why Context Matters? என்ற கட்டுரையின் தமிழாக்கம். இந்தக் கட்டுரையை மொழியாக்கம் செய்யும் யோசனையைத் தெரிவித்த குணசேகரனுக்கு நன்றி.


https://www.thehindu.com/…/why-context-…/article24733441.ece

Posted in Uncategorized | 1 Comment

பிராந்திய அடையாளமும் கூட்டாட்சியும்

sid

நாட்டின் கொள்கைகளை வகுப்பதில் மாநிலங்களுக்கும் பங்கு இருக்க வேண்டுமென்கிறார் சித்தராமைய்யா.

கடந்த ஆண்டு ஜூலையில் நாங்கள் எங்களுக்கென ஒரு கொடியை வைத்துக்கொள்ள முடியுமா என ஆராய்வதற்காக ஒரு கமிட்டியை அமைக்கப்போவதாக கர்நாடக அரசு சொன்னதும் தில்லியில் உள்ள டிவி ஸ்டுடியோக்களில் இருப்பவர்கள் கொதித்துப்போனார்கள். இந்திய ஒருமைப்பாடு பற்றி கவலைப்பட்ட தொலைக்காட்சி நெறியாளர்கள், தேசியவாதம் பற்றி கர்நாடகத்திற்கு வகுப்பெடுத்தார்கள்.

இந்த ஆண்டு அந்தக் கமிட்டி, கர்நாடகத்திற்கென ஒரு கொடியை வைத்துக்கொள்ளலாம் என பரிந்துரைத்திருக்கிறது. அந்தக் கமிட்டியின் அறிக்கையை கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. 1950ஆம் ஆண்டின் சின்னங்கள் மற்றும் பெயர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் கர்நாடகத்தின் கொடியையும் கொண்டுவரும்படி மத்திய அரசிடம் எங்கள் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் ஒரு கேள்வியை எழுப்புகிறது. அதாவது, தங்கள் மாநிலத்திற்கென ஒரு கொடியை வைத்துக்கொள்வது என்ற கன்னட மக்களின் விருப்பம், கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது, தங்களுடைய வாழ்வு தொடர்பான விவகாரங்களில் முடிவெடுப்பதில் தங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வேண்டுமென நினைப்பது ஆகியவை வலிமையான தேசத்தை உருவாக்குவது என்ற லட்சியத்திற்கு முரணானதா?

1947ல் இந்தியா என்பது, பிறந்த குழந்தை. பிரிவினைவாத, பிளவுபடுத்தும் நோக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம். ஆகவே, வலிமையான மத்திய அரசைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா உருவானது. சர்தார் வல்லபாய் படேல், சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தபோது, வலிமையான மத்திய அரசு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வாதமாகவே இருந்தது. இப்போது 70 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஒரு தேசமாக நாம் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறோம். காலத்தின் சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற்றிருக்கிறது இந்திய அரசியல் சாஸனம். இந்தித் திணிப்பின் காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்ட போராட்டத்திலிருந்தும் பஞ்சாப், அசாம் போன்ற மாநிலங்களின் தன்னாட்சிக் கோரிக்கைகளிலிருந்தும் பயன்தரத்தக்க பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.

ktaka-flag

ஒரு மாநிலம் தன் அடையாளத்தை உறுதிப்படுத்துவதால், இந்தியா என்ற அடையாளத்திற்கு  எந்தப் பங்கமும் இல்லை என்கிறார் சித்தராமைய்யா.

இப்போது ஒன்றியம் என்ற நிலையிலிருந்து மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற நிலைக்கு பரிணாமமடைந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம், பிராந்தியங்களின் அடையாளங்களை ஏற்பது ஆகியவை நம்முடைய தேசம் என்ற கருத்தாக்கத்திற்கு முரணாக இருக்குமென நான் நினைக்கவில்லை.

கன்னட அடையாளத்தில் கர்நாடகத்திற்கு ஒரு பெருமிதமிருக்கிறது. ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹல்மிதியில் கிடைத்த கன்னட கல்வெட்டின் காலம் கி.பி 2ஆம் நூற்றாண்டு. பன்வசியைச் சேர்ந்த கடம்பர்களின் கன்னட ராஜ்ஜியம் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்திருக்கிறது. பல தசாப்தங்களாக சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடியை நாங்கள் பயன்படுத்திவந்திருக்கிறோம்.

இருந்தபோதும், எங்களுடைய புகழ்பெற்ற கவிஞர் குவெம்பு சொன்னதைப்போல, கர்நாடகம் பாரதத்தின் குழந்தை. ஆகவே, தில்லி டிவி ஸ்டுடியோக்களில் உள்ள நெறியாளர்கள், நாங்கள் எங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது குறித்து கவலைப்படத் தேவையில்லை.

இந்திய ஒன்றியத்தில், நாங்கள் உறுதியாக இணைந்திருக்கும் நிலையில் எங்களைத் தினம்தோறும் பாதிக்கும் சில பிரச்சனைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒப்பீட்டளவில் முன்னேறிய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை மத்திய அரசுக்குக் கூடுதலான வரிகளைச் செலுத்தி, குறைவாகத் திரும்பப் பெறுகின்றன.

மத்திய அரசின் வரி திரும்பத் தரப்படும்போது, மாநிலங்களின் பங்கு என்று ஒரு பகுதியாகவும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு என்று ஒரு பகுதியாகவும் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி என்பது, பல்வேறு நிபந்தனைகளுடன் வருகிறது. அந்தத் திட்டங்களைக் கட்டாயம் செயல்படுத்தி, எங்கள் பங்கை நாங்கள் பெற வேண்டியுள்ளது. ஆகவே, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படுவதோடு, கூடுதல் வரி செலுத்தும் மாநிலங்களுக்கு கூடுதலாக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள், எங்களது தேவைக்கேற்றபடி மாற்றக்கூடியவையாக இருக்க வேண்டும்.

siddaramaiah-yogi-adityanath

உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால், 1.79 ரூபாய் திரும்பக் கிடைக்கும். கர்நாடகத்திற்கு 47 காசுகளே கிடைக்கும்.

வரலாற்று ரீதியாகவே, தென்னிந்திய மாநிலங்கள் வட இந்திய மாநிலங்களுக்கு தங்கள் செல்வத்தைப் பகிர்ந்துவந்திருக்கின்றன. விந்திய மலைக்குக் கீழே உள்ள ஆறு மாநிலங்களும் கூடுதலான வரியைச் செலுத்தி, குறைவாகத் திரும்பப் பெறுகின்றன. உதாரணமாக, உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாயை வரியாகச் செலுத்தினால், அதற்கு 1.79 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது. கர்நாடகம் ஒரு ரூபாய் செலுத்தினால், வெறும் 47 காசுகளே திரும்பக் கிடைக்கின்றன. பிராந்திய ரீதியாகக் காணப்படும் வேறுபாடுகளைக் களைய வேண்டிய தேவை இருப்பது உண்மைதான். ஆனால், வளர்ச்சிக்கான வெகுமதி எங்கே? தென்னிந்திய மாநிலங்களில், இறப்பு விகிதமும் பிறப்பு விகிதமும் சரிசமமாகிவிட்டன. இருந்தபோதும், மக்கள் தொகையை வைத்து வரி பகிரப்படுகிறது. மக்கள் தொகையை அதிகரித்துச் செல்வதற்காக, அந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நாட்களுக்கு கூடுதலாக நிதி தரப்போகிறோம்?

இந்திய வர்த்தகத்தை பாதிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் மாநிலங்களையும் பாதிக்கும். ஆனால், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் மாநிலங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. உதாரணமாக, தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்படி, வியட்நாமிலிருந்து இலங்கை வழியாக குறைந்த விலையில் மிளகை இறக்குமதி செய்யலாம். ஆனால், அது கேரளாவிலும் கர்நாடகத்திலும் உள்ள மிளகு விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும்.
மத்திய அரசின் வர்த்தகக் கொள்கையானது விவசாய இறக்குமதியை ஆதரிக்கிறது. உபரியாக உற்பத்தி செய்திருக்கும் எங்கள் விவசாயிகளின் லாபத்தை இந்தக் கொள்கை கடுமையாகப் பாதிக்கிறது. மத்திய அரசின் கொள்கைகளால் விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் சிக்கலை மாநிலங்களால் மட்டும் சரிசெய்ய முடியாது. ஜிஎஸ்டி கவுன்சிலில் இருப்பதைப் போல, வர்த்தகக் கொள்கைகளை வகுப்பதற்கும் விவசாயப் பிரச்சனைகளை விவாதிப்பதற்கும் ஒரு அமைப்பு தேவை. அப்படி இருந்தால்தான், விவசாயிகளைப் பாதிக்கும் கொள்கைகளின் மீது எங்களால் தாக்கம் செலுத்த முடியும்.

நிதி ஆயோக் மூலம் முன்பிருந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கலைக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதற்குப் பதிலாக கலந்தாலோசனை செய்யக்கூடிய எந்தவிதமான அமைப்பும் உருவாக்கப்படவில்லை. நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதில் மாநிலங்களின் குரல்களுக்கு அதிக பங்கு அளிக்கும் ஒரு அமைப்பு உடனடியாகத் தேவை.

ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளைவிட கர்நாடகம் பெரியது. பெரும்பாலான இந்திய மாநிலங்கள் அப்படித்தான். இந்தியா வலிமையாக இருக்க வேண்டுமென்றால், அதில் உள்ள மாநிலங்கள் வளர்ந்து, வளமுடன் இருக்க வேண்டும். மாநிலங்கள் தங்கள் திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ற வகையில் வளர அனுமதிக்கும் நிலையை நாம் எட்டிவிட்டோம். மாநிலங்கள் தங்கள் அடையாளங்களை உறுதிப்படுத்துவது தொடர்பாக எந்தவிதமான கற்பனையான பயமும் தேவையில்லை. தங்கள் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் அவர்களுக்கு கூடுதல் சுதந்திரம் தேவை. தங்கள் தகுதிக்கேற்ப, வெளிநாடுகளில் இருந்து கடன்பெற அனுமதிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திராமல் தாங்கள் விரும்பிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக்கொள்ள முடிய வேண்டும். தாங்கள் விரும்பிய திட்டங்களை வகுக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, இந்திய மாநிலங்கள் மொழியின் அடிப்படையில் அமைந்தவைதான். இந்திய அடையாளம் உருவாவதற்கு முன்பாகவே இங்குள்ள மாநிலங்களின் மொழியும் கலாச்சாரமும் உருவாகிவிட்டன. இருந்தபோதும், இந்தியர்களாகிய நாம் பொதுவான வரலாறு, பொதுவான நாகரீகம், பொதுவான விதியால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நான் ஒரு கன்னடன் என்ற என்னுடைய பெருமிதம், நான் ஒரு இந்தியன் என்ற பெருமிதத்துடன் எவ்வகையிலும் முரண்படவில்லை.

கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டுமெனப் பேசும்போது, இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக வாதிடும்போது, மாநிலக் கொடியை உருவாக்கும்போது, வலுவான இந்தியாவை உருவாக்க நாங்கள் பங்களிப்புச் செய்கிறோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. காரணம், தன்னம்பிக்கை மிகுந்த இந்தியா என்பது, தன் குழந்தைகளின் தனி அடையாளங்களை மதிக்கும்.


கட்டுரையை எழுதிய சித்தராமைய்யா, கர்நாடக முதல்வர்

Posted in Uncategorized | 2 Comments

மாலைக் கோனார் சந்தனக் கடை பொம்மைகளின் மர்மம்

27498077_1179821568816235_1941011473_n

மாலைக் கோனார் சந்தனக் கடையில் இப்போதும் கூடியிருக்கும் கூட்டம்.

மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாடகங்களின் துவக்கத்தில் பாடப்படும் பாடல், பெரும்பாலும் இப்படி இருக்கும்:
“வந்தனமய்யா வந்தனம், வந்த சனங்கள் குந்தனும்
நாங்க வரும்போது வாங்கி வந்த மாலைக் கோனார் சந்தனம்”.

நாடகப் பாடல்களிலும் புகுந்துவிட்ட இந்த மாலைக் கோனார் சந்தனக் கடைக்கு மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் விசேஷங்களில் மிக முக்கியமான இடம் உண்டு. சமீப காலம்வரை கல்யாணம், காது குத்து, குல சாமிக்கு சாமி கும்பிடுதல் எல்லாவற்றிற்கும் இந்தக் கடையிலேயே சந்தனம் வாங்க முயல்வார்கள். இப்போது அந்தக் கடை அவ்வளவு தவிர்க்க முடியாத கடை இல்லையென்றாலும் இன்னும் பழைய பெயரும் மணமும் நீடிக்கவே செய்கிறது.

மதுரையில் தளவாய் அக்ரஹாரம் வழியாக மீனாட்சி அம்மன் கோவிலை நோக்கிச் செல்லும் யாருடைய கண்ணிலும் தவறாமல்படும் கடை, மாலைக் கோனார் சந்தனக் கடை. தமிழ் மீன் காரத் தெருவும் தளவாய் அக்ரஹாரமும் சந்திக்கும் இடத்தில், இந்திய வங்கிக் கிளைக்கு எதிரில் அமைந்திருக்கிறது இந்தக் கடை.

27658952_1179821545482904_2103662612_n

கடையை தற்போது கவனித்துவரும் ஜெயச்சந்திரன், 60. இவர் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர்.

சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியின் தந்தையாக, சமுத்திரக்கனியின் அண்ணனாக வருவாரே அவர்தான் இந்தக் கடையின் தற்போதைய உரிமையாளர். பெயர் ஜெயச்சந்திரன்.

“இந்தக் கடை எப்ப ஆரம்பிச்சதுங்கிற வருசம் சரியா எங்கிட்ட இல்லை. ஹாஜிமுசா ஜவுளிக்கடையும் எங்க கடையும் ஒன்னா ஆரம்பிச்சதுன்னு சொல்வாங்க” என்கிறார் ஜெயச்சந்திரன். ஹாஜிமூசா ஜவுளிக் கடை 1878ல் துவங்கப்பட்டதாக அந்தக் கடையின் பெயர்ப் பலகை சொல்கிறது. ஜெயச்சந்திரன் சொல்லும் வருடக் கணக்கு சரியென்றால், மாலைக் கோனார் சந்தனக் கடையின் வயது சுமாராக 140.

கடை துவங்கப்பட்ட காலத்தில் சந்தனம் கும்பகோணத்தில் இருந்து அரைத்து இங்கு கொண்டுவரப்பட்டது என்கிறார் ஜெயச்சந்திரன். அதற்குப் பிறகு இங்கேயே சந்தனத்தை இங்கேயே அரைக்க ஆரம்பித்தார்கள்.

27497925_1179821555482903_1498253263_n.jpgகடை துவங்கப்படும்போது இப்போது இருந்த இடத்தில் இல்லை. தற்போதுள்ள இடத்திற்கு சரியாக எதிரில், அதாவது தற்போது இந்திய வங்கிக் கிளை உள்ள இடத்தில் அமைந்திருந்தது. தற்போது கடை உள்ள இடம் குடோனாக வைக்கப்பட்டிருந்தது. 1942ல் அந்த இடத்தின் உரிமையாளர் கடையைக் காலிசெய்யச் சொல்லவே, குடோனாக இருந்த இடத்திற்கு மாறியது கடை.

யானை மலைக்கு பக்கத்தில் உள்ள அரும்பனூர்புதூர்தான் கடையைத் துவங்கிய மாலைக் கோனாருக்கு சொந்த ஊர். அந்த ஊர் அம்மனின் பெயர் மாலையம்மன். அந்த அம்மனின் பெயரை அந்த ஊர்க்காரர்கள் எல்லோருமே பெயருக்கு முன் வைத்துக்கொள்கிறார்கள்.

கடையைத் துவங்கிய மாலைக் கோனார் 1920களில் இறந்துவிட, அவரது மகன் சுப்பிரமணி வசம் கடை வந்தது. அதற்குப் பிறகு அவரது மகன் ஜெயச்சந்திரனும் அவரது மகன் சீனிவாசனும் கடையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

27497779_1179821508816241_295849355_n

மூணு பொம்மைக் கடை என பலரும் அடையாளம் சொல்லவே பொம்மைகள் விட்டுவைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கடையின் சந்தனத்தின் வாசனை தவிர, அங்கு கண்ணைக் கவரும் இரண்டு அம்சங்களும் இருக்கின்றன. முதலாவதாக, அங்குள்ள கண்ணாடி ஷோ கேஸின் மீது வைக்கப்பட்டுள்ள மூன்று பொம்மைகள்.

“ஆரம்பத்துல எதுக்கு இந்த பொம்மையை வைச்சாங்கன்னு தெரியல, பிறகு எல்லோரும் மாலைக் கோனார் கடைங்கிறதுக்குப் பதிலா, மூணு பொம்மை கடைன்னு சொல்ல ஆரம்பிச்சவுடனே, சரி, இதுவும் ஒரு அடையாளம்தானே இருக்கட்டும்னு விட்டுட்டோம்” என்கிறார் ஜெயச்சந்திரன்.

 

27497701_1179821515482907_1852618785_n

வாசனை திரவியங்களை அதிகம் வாங்கியதால் நெப்போலியன் நிறுவனம் வழங்கிய வெண்கலச் சிலை.

இரண்டாவது, அந்த கண்ணாடி ஷோ கேஸிற்குள் உள்ள ஒரு வெண்கலச் சிலை. “நாங்க நிறைய சென்ட் வாங்குனோம்னு அந்த சென்டை தயாரிச்ச நெப்போலியன் கம்பனி கொடுத்தது அந்தச் சிலை, நல்லாயிருக்கா?” என்கிறார் ஜெயச்சந்திரன்.

தலைமுறை தலைமுறையா இந்தத் தொழிலைப் பார்த்துக்கிட்டிருக்கோம். போக மனசில்லை என்கிறார் ஜெயச்சந்திரன். அப்புறம் எப்பிடி சினிமாவுல நடிச்சீங்க என்று கேட்டால், சசிகுமார் நம்ம சொந்தக்காரன். அவன் கேட்டான்னு நடிச்சேன், அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு, சந்தனத்தை உருட்ட ஆரம்பிக்கிறார் மனிதர்.

Posted in Uncategorized | 1 Comment

மிகப் பெரிய கருத்தரங்குகளை ஊடக நிறுவனங்கள் நடத்தலாமா?

கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே பல ஊடக பெருநிறுவனங்கள் மிகப் பெரிய கருத்துரங்குகளை நடத்திவருவது, பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால், இந்த கருத்தரங்குகள் எப்படி அவற்றின் இதழியல் தரம் எப்படி பாதிக்கப்படுகிறது என கேரவன் இதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் சில பகுதிகள் தமிழில்:

01_Media-Functions_The-Caravan-magazine_December_2017-653x435

ஹிந்துஸ்தான் டைம்ஸ் மாநாட்டில் பிரதமர் மோதி, எச்டியின் உரிமையாளர் ஷோபனா பார்தியா. இதற்குப் பிறகு பாபி கோஷ் வெளியேற்றப்பட்டார்.

1. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்கள் நடத்தும் கருத்தரங்குகள், மாநாடுகளில் இந்தியாவின் மிகப் பெரிய அரசியல்வாதிகள் முதல் அமெரிக்க துணை அதிபர்கள் வரை கலந்துகொள்கிறார்கள். சமீபகாலமாக பிரதமர் மோதியையும் இம்மாதிரி நிகழ்வுகளில் பார்க்க முடிகிறது. சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸும் டைம்ஸ் குழுமும் நடத்திய இம்மாதிரி இரு நிகழ்வுகளில் நடந்த சம்பவங்கள், இதழியல் அறத்தில் இந்த கருத்தரங்குகள் ஏற்படுத்தும் தாக்கத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

2. மார்ச் மாதம் எகனாமிக் டைம்ஸ் நடத்திய குளோபல் பிசினஸ் மாநாட்டில் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி பிரதமர் கலந்துகொள்ளவில்லை. மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் இதில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிட்டனர். இது டைம்ஸ் குழுமத்திற்கு பெரும் அவமானமாகப் பார்க்கப்பட்டது. பொதுவாக அரசுக்கு எதிராக பெரிய நிலைப்பாடுகளை எதிர்க்காத டைம்ஸ் குழுமத்திற்கு ஏன் இப்படிப்பட்ட புறக்கணிப்பு என்பது பலருக்கும் புரியவில்லை. ஆனால், இதற்கு சில நாட்களுக்குப் பிறகு நடந்த சில நிகழ்வுகள் பல விஷயங்களைப் புலப்படுத்தின. தி எகனாமிக் டைம்சில் அரசுக்கு எதிரான செய்திக் கட்டுரைகளை எழுதிவந்த ரோகினி சிங் அந்த இதழிலிருந்து வெளியேறினார். (இந்த ரோகினி சிங்தான் தி வையர் இணைய தளத்தில் அமித் ஷா மகனின் தொழில் வளர்ச்சி குறித்த கட்டுரையை எழுதியவர்)டைம்ஸ் குழுமத்தின் ரேடியோ சேனல் ஒன்றில் மோடியை கேலி செய்து வெளியாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

3. செப்டம்பர் மாதம் ஹிந்துஸ்தான் குழும உரிமையாளர் ஷோபனா பார்தியா மோதியைச் சந்தித்து, தங்கள் நிறுவனம் நடத்தும் நிகழ்வுக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்தார். இதற்கு சில நாட்களில் ஹிந்துஸ்தான் குழுமத்தின் எடிட்டர் – இன் – சீஃபான பாபி கோஷ் வெளியேறினார். இதற்கு சில நாட்களில், மதம் – ஜாதியின் பெயரால் நடத்தப்பட்டுவந்த குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டுவந்த Hate Tracker என்ற முயற்சியை நிறுத்தியது இந்நிறுவனம்.

996e97c2823e5034a7d9ca862bbcfb9a4. இதில் எந்த நிறுவனமும் தங்கள் வருமானத்திற்கும் லாபத்திற்கும் மத்திய அரசைச் சார்ந்திருக்கவில்லை. ஆனால், மோதி தங்கள் நிகழ்வில் பங்கேற்கவில்லையென்ற செய்தி, கார்ப்பரேட் உலகில் என்ன மாதிரி புரிந்துகொள்ளப்படும் என்ற அச்சம்தான் மிக முக்கியமானது. கார்ப்பரேட் விளம்பரங்களைச் சார்ந்திருக்கும் நிறுவனங்களுக்கு இது மிக முக்கியமானது. ஒரு அரசு ஊடகங்களைக் கட்டுப்படுத்த விரும்பினால், தனித்தனியாக பத்திரிகையாளர்களை deal செய்வதைவிட, வர்த்தக நிறுவனங்களின் மூலம் ஒட்டுமொத்தமாக அந்த ஊடக நிறுவனத்தையே வளைப்பது எளிது.

5. 2002ல் மோதி முதல்வராக இருக்கும்போதுதான் குஜராத்தில் பெரும் கலவரங்கள் நடந்து இந்து கும்பல்கள் முஸ்லிம்களைக் கொலைசெய்தன. இதற்கு ஒரு வருடத்திற்குப் பிறகு சிஐஐ எனப்படும் இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு கூட்டம் ஒன்றில் மோதி கலந்துகொண்டார். அதில் மோதியை வைத்துக்கொண்டே இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களான ஜாம்ஷெட் கோத்ரேஜும் ராகுல் பஜாஜும் குஜராத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தனர். கடுப்பான மோடி, சிஐஐக்குப் போட்டியாக Resurgent Group of Gujarat என்ற அமைப்பை உருவாக்கி, ஆதரித்தார். அடுத்த மாதமே சிஐஐயின் தலைவர் ஓடிவந்து மோதியிடம் மன்னிப்புக் கேட்டார். இதற்குப் பின் ரத்தன் டாடா போன்ற முன்னணி தொழிலதிபர்கள் அங்கீகரிக்க, தேசிய அளவிலான தலைவராக உயர்ந்தார் மோதி.
2014 தேர்தல் குறித்த ஊடகச் செய்திகளில் 2002 கலவரம் குறித்து பெரிதாகப் பேசப்படவில்லை. மோதி பெரு நிறுவனங்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடத்தைப் பாடம் அப்படி.

1280x720-Xv9.jpg6. இம்மாதிரியான ஊடகக் கருத்தரங்குகளில் ஊடகங்கள், பெரு நிறுவனங்கள், அரசு – என மூன்று பெரிய சக்திகள் சந்திக்கின்றன. இது இதழியல் தன்மையையும் அறத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. கேரவான் இதழ் இதேபோன்ற கருத்தரங்கை நடத்தியபோதும் அதற்கும் இதே மாதிரியான அழுத்தங்கள் வந்தன.

7. நியுயார்க் டைம்ஸ் இதழ் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த NYTLive என்ற பிரிவை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது, அதாவது யாரை அழைப்பது, எதைப் பற்றிப் பேசச் சொல்வது என்பனவற்றை NYTLiveன் வைஸ் பிரசிடெண்ட் முடிவெய்வார் என்றாலும் அதை மறுக்கு அதிகாரம் அந்த இதழில் ஆசிரியருக்கு உண்டு. இதழின் அறம் மீது சந்தேகம் வரும் என நினைத்தால் அவர் அதை மறுப்பார். அந்த இதழில் வேலைபார்க்கும் ரிப்போர்ட்டர்கள், உதவி ஆசிரியர்கள் அதில் பங்கேற்க விரும்பவில்லையெனக் கூறமுடியும். இவ்வளவு இருந்தும் இந்த ஆண்டு ஜூனில் வெளிவந்த கொலம்பியா ஜர்னலிசம் ரெவ்யூ, இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடத்துவதன் அபாயம் குறித்து எச்சரித்தது. நடந்த தவறுகளைச் சுட்டிக்காட்டியது.

8. இந்திய ஊடகச் சூழலில் இவ்வளவு புரொஃபஷனலிசம் கிடையவே கிடையாது. இதழியல் அறம் மீறப்பட்டதாக யாராவது சுட்டிக்காட்டினாலும் அது தவறாகவே பார்க்கப்படாது.

download

9. ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் குழுமம், இந்தியா டுடே ஆகியவற்றில் இம்மாதிரி இதழியல் பிரிவையும் இம்மாதிரி நிகழ்வுகளை நடத்தும் பிரிவையும் தனியாக வைக்கும் போக்கே கிடையாது. பத்திரிகைகளில் பணியாற்றும் இதழியலாளர்கள், இந்த மாநாட்டிற்கான வேலைகளைப் பார்க்கும்படி பணிக்கப்படுவார்கள். ரிப்போர்ட்டர் மட்டத்தில்கூட இதற்காக வேலை பார்க்க வேண்டும். அழைப்பிதழ்களைக் கொண்டு போய் கொடுப்பது, தங்கள் beatல் உள்ள முக்கியஸ்தர்கள் நிகழ்வுக்கு வருவதை உறுதிசெய்வது போன்றவை அவர்களுக்கான பணிகள்.

10. தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்களை அழைப்பதில் ரிப்போர்ட்டர்களுக்கு பெரிய பிரச்சனை இருக்காது. ஆனால், செய்தியாளர் சந்திப்புகளில் யாரை நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்ப வேண்டுமோ அவர்களையே அழைக்க வேண்டியிருக்கும். அந்த நபரோ, தலைவரோ விழாவுக்கு வரும்போது இந்த செய்தியாளர் பக்கத்திலேயே நிற்க வேண்டும். பிறகு, அவர் எப்படி அந்தத் தலைவருக்கு அல்லது நபருக்கு எதிரான செய்தியைக் கொண்டுவருவார்? இதன் மூலம் அரசியல்வாதிகளுக்கும் நிறுவனத்திற்கும் இடையிலான உறவு வளர்வதால், அவர்களுக்கு எதிரா செய்திகளை வெளியிட நிறுவனங்கள் தயங்கும்.

11. அச்சு இதழ்களின் வருவாய் வெகுவாக சரிந்துகொண்டிருக்கிறது. வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது அல்லது அதிகரிக்காமல் அதே இடத்தில் நிற்கிறது. அவை நடத்தும் இணைய தளங்களில் இருந்து பெரிதாக வருவாய் வருவதில்லை. ஆக, நல்ல முறையில் பத்திரிகை நடத்த வேண்டுமென்றால் இம்மாதிரி நிகழ்வுகளும் தேவைப்படுகின்றன. ஆனால், அந்த நிகழ்வில், நாம் எதற்காக இதழியல் பணியில் இருக்கிறோமோ, அதற்கான காரணமே அடிபட்டுப்போகிறது. இந்தப் பின்னணியில், ஊடகங்கள் எப்படி எல்லோரையும் பற்றி செய்திகளை வெளியிடுகின்றனவோ, அதேபோல ஊடக உலகத்தைப் பற்றிய செய்திகளையும் வெளியிட வேண்டும்.


இந்தக் கட்டுரையை எழுதியவர் Hartosh Singh Bal. The Caravan இதழில் அரசியல் பிரிவு ஆசிரியர். ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையின் சுட்டி இது: http://www.caravanmagazine.in/perspectives/high-profile-events-news-organisations-damage-journalistic-independence

Posted in Uncategorized | Leave a comment